Friday, August 26, 2011

ஒரு கேள்வி!

தன்னைப்பார்த்து யாராவது பெரிய பூனை என்று சொன்னால்,
புலிக்கு எவ்வளவு கோபம் வருமோ அது போலத் தான்
எனக்கும் வந்தது.

நான் வாடகைக்கு குடியிருக்கும் வீட்டுக்கு எதிர் வீட்டில் ஒரு சுட்டிப்பையன் இருக்கிறான்.
மாலை வேளைகளில் 1ஆம் வகுப்பு படிக்கும் அவனுக்கு டியூசன் எடுப்பது எனது பொழுதுபோக்கு.

போன வாரம் விமானம் பற்றிய ஒரு ஆங்கிலப் பாடம்.அனைத்தும் சொல்லி முடித்து ,சிறுவர்களுக்கே உரித்தான அறியாமையை அகற்றும் பொருட்டு, நான் பின்வருமாறு கூறினேன்.

"அருண்! விமானம் இந்த புத்தகத்தில் இருக்கிற மாதிரி சின்னதா இருக்காது.
அது இந்த வீதி நீளத்துல இருக்கும்!".அதற்கு அவன், "ஓ..உண்மையாகவா?" என்று  கேட்டான்.அவனுக்குப் புதிய ஒரு செய்தியை சொன்ன மகிழ்ச்சியில்,
"உண்மை தான் அருண்..ஒரு நாள் நாம விமான நிலையம் போலாம். அங்க போனா நெறைய விமானம் பார்க்கலாம்!"
என்று சொன்னேன்!

நேற்று மாலை 6:30 மணி. மொட்டைமாடியில் படுத்து வானத்தைப் பார்த்துக்கொண்டு இருந்தோம் நானும் அவனும்.
தன் வகுப்பில் நடந்த நிகழ்ச்சிகளை  ஒவ்வொன்றாக சொல்லிக்கொண்டிருந்தான். அப்போது விமானம் பறக்கும் சத்தம் கேட்டது.

அவனுக்கு விமானத்தைக் காட்டிக் கொண்டே சொன்னேன், "அருண்!! அதோ போகுதுல்ல அது தான் விமானம்! ".
இனி விமான நிலையம் போவது அவசியமில்லை என நினத்துக்கொண்டேன்.

அப்பொது அவன் "ஓ!! அது சரி அங்கிள். அந்த விமானத்தை நல்லாப் பாருங்க! அது புத்தகத்தில இருக்கிற மாதிரி சின்னதா தான் இருக்கு! ஏன் அது வீதி நீளம் இருக்குன்னு பொய் சொன்னீங்க?
இனி தப்பு தப்பா சொல்லிக்கொடுத்தா அம்மாகிட்ட சொல்லிடுவேன்" என்று சொன்னான்.அப்போது தான் கோபம் வந்தது எனக்கு.

என்ன ஒரு வில்லத்தனமான கேள்வி? .எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை!
இனி எது சொன்னாலும் அவன் நம்ப மாட்டான் என்பது உறுதி.
எதுவும் பேசாமல் ஒரு முடிவுக்கு வந்தேன் நாளைக்கே அவனைக்கூட்டிக் கொண்டு விமான நிலையம் போகவேண்டும் என்று.

1 comment:

படித்த அடையாளத் தடத்தை இங்கே விட்டுச் செல்லுங்கள் - அன்புடன் ராஜ்குமார்