Wednesday, April 25, 2012

நான் ரசித்த கவிதைகள்! - 3

 காதல் திருமணம்! - கமலஹாசன் கவிதை

"முதல் தீண்டலுக்கு உடல் சிலிர்த்து,
வெட்கத்தில் புன்னகைத்து,
கடற்கரையில் காற்று வாங்கி,
கைபிடித்து பரவசமாய் நடந்து,
கன்னத்தில் லேசாய் முத்தமிட்டு,
கைபேசியில் குறுஞ்செய்தி அனுப்பி,
கண்களால் பேசிச் சிரித்து,
கால் கடுக்க காத்திருந்து,
காது பிடித்து மெல்லத் திருகி,
கண்ணீரோடு கட்டியணைத்து,
கண்பொத்தி விளையாடி,
இடிக்கு பயந்து தோளில் சாய்ந்து,
செல்லமாய் நெஞ்சில் குத்தி,
பேசாமல் இருந்து தவிக்கவிட்டு,
கோயில் சுற்றி , குளம் சுற்றி,
மழை ரசித்து நனைகையில்,
துப்பட்டாவில் குடை விரித்து,
புத்தகத்தில் கடிதம் மறைத்து,
மணிக்கணக்கில் தொலைபேசி,
அப்பாவின் அதட்டலுக்கு அஞ்சி,
"அவர் ரொம்ப நல்லவர்மா" என
அழுது புலம்பி அம்மாவிடம் சொல்லி,
ஒரு வழியாக வெற்றி கொள்கிற
காதல் திருமணங்கள் போல
இனிப்பதில்லை-இன்டர்நெட்டில் தேடியலைந்து,
பத்துக்கு பத்து பொருத்தம் பார்த்து,
பண்ணுகின்ற திருமணங்கள் !"
- கமலஹாசன்

Tuesday, April 17, 2012

பிரிவின் வலி!

நோய்வாய்பட்ட அந்த பனைமரம் மொட்டையாகக் காட்சியளித்தது!
உயிர் இல்லை.இருந்தாலும், உச்சி மரத்தில் கிளிகள் குடியிருப்பதால், அது இன்னும் உயிருடன் இருக்கிறது என வைத்துக் கொள்ளலாம்!

கையில் அகலமான துணியுடன் அவன் அந்தப் பனைமரத்தில் ஏறுகிறான்.
கிளியின் வீட்டு வாசலை அடைத்துவிட்டு,மறுவழியில் கைவிட்டு கிடைக்கின்ற குஞ்சுகளைப் பிடித்து கோணியில் போடுகிறான்."கீச்..கீச்" என மழலை மொழியில் அவை அலறுகின்றன.

அதை அவன் காதில் போட்டுக்கொள்ளவில்லை.

பெற்ற அன்னை அவனை சுற்றி சுற்றி வட்டமிட்டுப் பறக்கிறது.'அவன் அந்தக் குஞ்சுகளை எப்படியாவது வெளியே விடமாட்டானா?' என்ற ஆசையோடு.அவன் விடவில்லை.எங்கோ மறைந்து விட்டான்.தாய்க்கிளி
அழுத விழியோடு கூடு நோக்கிப் பறந்தது.

கிளிக் குஞ்சுகளை அவன் ஒரு பெரிய கூண்டுக்குள் அடைத்தான். அங்கு இவைபோல பல மழலைக்கிளிகள் அடைக்கப்பட்டிருந்தன.உணவும்,நீரும் நாள்முழுக்க கிடைக்கப் பெற்றது.இருப்பினும் அவைகள் குடும்பத்தை நினைத்து கண்ணீர் சிந்திக்கொண்டிருந்தன.

நாட்கள் நகர்ந்தன.

ஒவ்வொரு கிளியும் இன்னொரு ஜோடியுடன் சேர்த்து கூண்டுகளில் அடைக்கப்படுகிறது!

சந்தையில் 100ரூபாய்க்கு விலைபோகிறது! வளர்க்கும் ஆசையோடு பலர் வாங்கிச் செல்கிறார்கள்-"பறவைகள் என்றால் எனக்கு உயிர்!" என்று வீட்டுக்கு வருபவர்களிடம் பெருமை பேசிக்கொள்ள.

இப்படி ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் அடைபட்டிருக்கும் பறவைகளை பார்த்தால், எனக்கு ஈழப்போரில் குடும்பத்தை இழந்த தமிழ்குடும்பங்கள் தான் நினைவுக்கு வருகிறது!

அத்தகைய பிரிவின் ஒரு சின்ன வெளிப்பாடு இந்த வரிகள்.

                                                        






           கூண்டுக்கிளி

கிடைத்த சொந்தங்கள் என் இனம் இல்லை!
ஆனால் அன்பாய் கவனிக்கிறார்கள்!
அவர்களின் உண்மை சொந்தங்கள் பெறும் மறைபொருள் அன்பு இல்லை அது.

நானாக எதுவும் கேட்பதில்லை.
உள்ளன்போடு உணவிட்டு,இருக்க அறை கொடுத்து,
பருக நீர் அளித்து பாசமாய் கவனிக்கிறார்கள்!

எதையோ பேசுகிறார்கள்.என்னையும் அதையே பேசச் சொல்கிறார்கள்!
எளிய ஒலிகளை திருப்பி சொல்கிறேன்.
கேட்டு மகிழ்கிறார்கள்!
கைதட்டி ஆர்பரித்து முத்தம் கொடுக்கிறார்கள் வாஞ்சையோடு.

"என்னை வெளியே விடுங்கள்! என் சொந்தங்களைக் காணவேண்டும்", என கூப்பாடு போடுகிறேன் அவ்வப்போது!
எனக்கு பசியோ என்றெண்ணி பழங்களைக் கொடுக்கிறார்கள்!

மனம் வாடுகிறேன்.

இறக்கும் வரையில் இந்த உணர்வுப் போராட்டம் கூண்டுக்குள்ளே, குறுகிய கம்பிகளின் நடுவே முடிந்து போய்விடுமோ? என எண்ணிப்பார்க்கையில்!

Wednesday, April 11, 2012

நான் ரசித்த கவிதைகள்! - 2

உயிரின் மதிப்பை மட்டுமல்ல,வாழ்வின் முடிவும் ஆரம்பமும் நம் கையில் இல்லை என்ற தத்துவத்தையும் உணர்த்துகிறது இந்தக் கவிதை.இந்த வரிகளை படித்தபிறகு நம் வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வுகளையும் நம் மனம் ரசிக்கப் பழகுவதை அனைவரும் உணரலாம்!

                                        வாழ்வை ரசிக்கப் பழகுங்கள்!!

                                                                                         - தோழியின் வரிகள்
 
பத்து மாதம் பத்திரமாய் இருந்து,
பெற்றவளை விட்டு பூமிக்கு வந்தோம்!
வாழ்க்கைப் பயணத்தில்,
இறங்(க்)கும் நேரம் தெரியாமலே!


வாழ்க்கைத் தேடலில்,
வழியில் அறிமுகமாகும்,
பலரிடமிருந்தும் கேட்கும் ஓர் வாசகம், "என்ன வாழ்க்கையடா இது?"

இன்ப துன்பம் நிறைந்தது தான் இவ்வுலக வாழ்க்கை!

இலையுதிர் காலத்தை ஏற்கும் சோலைகள், அதை இழப்பாக நினைப்பதில்லை!
வசந்த காலம் வந்த போதும், அதை வரவேற்க மறப்பதில்லை!

நம் வாழ்வின் மேன்மை,தெரிய வேண்டுமா?
வாழ்வின் அர்த்தம் அறிய வேண்டுமா?

 கேட்டுப் பாருங்கள்!

விளக்கை நோக்கிச் சென்று,
வினாடிப் பொழுதில் உயிர் தப்பிய
விட்டில் பூச்சிகளை!

வேடன் தானெறிந்த அம்பினிலே
தப்பிப் பிழைத்த தத்தைகளை!

"பூர்வ ஜென்மத்து புண்ணியமோ?
இறைவனின் இரக்கமோ? தப்பிப் பிழைத்தது"
என்று அவர்கள் சொன்னது, காற்றினிலே கலந்து,என் காதுகளை அடைந்தது!

உங்கள் இறுதி ஆக்ஸிஜனை,
 நீங்கள் சுவாசிக்கும் வரையிலும் ரசியுங்கள்!

பகலவனைக் கண்டதும்
பட்டென மறையும்
பனித்துளியை!

கணநேரப் பொழுதாயினும்,
காண்போரைக் கவரும்,
கதிரவனின் நிறப்பிரிகையாம் வானவில்லை!

ஆலமரத்து கிளைகளில்,
அங்குமிங்கும் ஓடித்திரியும்
அணில்களை!

பார்ப்போரை பரவசப்படுத்தும்
பச்சிளங்குழந்தைகளின்
பவளச் சிரிப்பை!

சட சடவென்று
பெய்யும் மழையில்,
ஜன்னலோரப் பேருந்து பயணத்தை!

இன்னும்,
ஏராளமாய்
உங்களுக்குப் பிடித்தவற்றை,
மிகவும் பிடித்தவற்றை ரசிக்கப் பழகுங்கள்!



நமக்கு வயதானாலும்,
அவற்றிற்கு "என்றும் இளமை" தான்!

அன்பென்ற வார்த்தை தவிர
அவளேதும் அறியா
அருமை அன்னையை!

கண்டிப்புடன்
கடும் உழைப்பையும்
நமக்காகத் தரும் தந்தையை!

நம் மௌனத்தின் அர்த்தம் கூட,
அழகாய்ப் புரிந்து கொள்ளும்
அன்பான நண்பர்களை!

செல்லமாய்த் சண்டையிடும்
சகோதர உறவுகளை!

போட்டியிடும் பகைவனை!

இவர்களுக்கெல்லாம் மேலாக,
இவ்வுலகில் வேறு யாராலும் நேசிக்க முடியாதபடி, "உங்களை" மிகவும் நேசியுங்கள்!

வாழ்வின் மதிப்பு தானாய்த் தெரியும்!

நாளை உலகைக் காண,
நடைபோடுவோம்,"நம்மால் முடியும்" என்ற நம்பிக்கையோடு!
                                                                     
                                                                                                            

Wednesday, April 4, 2012

மென்பொருள் வல்லுனர்கள் வேலை தான் என்ன?

 இணையத்தில் படித்தது! உங்களுக்கும் பிடிக்கும்!

"ஏம்பா இந்த கம்ப்யூட்டர் படிச்சவங்க எல்லாம் நிறைய சம்பளம் வாங்கிட்டு, பந்தா பண்ணிட்டு ஒரு தினுசாவே அலையுறீங்களே? அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க ?" – நியாயமான ஒரு கேள்வியை கேட்டார் எனது அப்பா.

நானும் விவரிக்க ஆரம்பிதேன்.

 "வெள்ளைகாரனுக்கு எல்லா வேலையும் சீக்கிரமா முடியனும். அதே மாதிரி எல்லா வேலையும் அவனோட வீட்டுல இருந்தே செய்யணும். இதுக்காக எவ்வளவு பணம் வேணுமானாலும் செலவு செய்ய தயாரா இருக்கான்."

"அது சரி பல்லு இருக்குறவன் பக்கோடா சாப்பிடுறான்".

"இந்த மாதிரி அமெரிக்கால்-ல, இங்கிலாந்து-ல இருக்குற Bank, இல்ல எதாவது கம்பெனி, "நான் செலவு செய்ய தயாரா இருக்கேன். எனக்கு இத செய்து கொடுங்க கேப்பாங்க. இவங்கள நாங்க "Client"னு சொல்லுவோம்.



"சரி"

"இந்த மாதிரி Client-அ மோப்பம் பிடிக்குறதுக்காகவே எங்க பங்காளிக கொஞ்ச பேர அந்த அந்த ஊருல உக்கார வச்சி இருப்போம். இவங்க பேரு "Sales Consultants, Pre-Sales Consultants....". இவங்க போய் Client கிட்ட பேச்சுவார்த்தை நடத்துவாங்க. காசு கொடுகுறவன் சும்மாவா கொடுப்பான்? ஆயிரத்தெட்டு கேள்வி கேப்பான். உங்களால இத பண்ண முடியுமா? அத பண்ண முடியுமான்னு அவங்க கேக்குற எல்லாம் கேள்விக்கும், "முடியும்"னு பதில் சொல்றது இவங்க வேலை.

"இவங்க எல்லாம் என்னப்பா படிச்சுருபாங்க"?

"MBA, MSனு பெரிய பெரிய படிபெல்லாம் படிச்சி இருப்பாங்க."

"முடியும்னு ஒரே வார்த்தைய திரும்ப திரும்ப சொல்றதுக்கு எதுக்கு MBA படிக்கணும்?"

– அப்பாவின் கேள்வியில் நியாயம் இருந்தது.

"சரி இவங்க போய் பேசின உடனே client project கொடுத்துடுவானா?" "அது எப்படி? இந்த மாதிரி பங்காளிக எல்லா கம்பெனிளையும் இருப்பாங்க. 500 நாள்ல முடிக்க வேண்டிய வேலைய 60 நாள்ள முடிச்சு தரோம், 50 நாள்ல முடிச்சு தரோம்னு பேரம் பேசுவாங்க. இதுல யாரு குறைஞ்ச நாள சொல்றாங்களோ அவங்களுக்கு ப்ராஜெக்ட் கிடைக்கும்"

"500 நாள்ல முடிக்க வேண்டிய வேலைய 50 நாள்ல எப்படி முடிக்க முடியும்? ராத்திரி பகலா வேலை பார்த்தாலும் முடிக்க முடியாதே?"

"இங்க தான் நம்ம புத்திசாலித்தனத்த நீங்க புரிஞ்சிக்கணும். 50 நாள்னு சொன்ன உடனே client சரின்னு சொல்லிடுவான். ஆனா அந்த 50 நாள்ல அவனுக்கு என்ன வேணும்னு அவனுக்கும் தெரியாது, என்ன செய்யனும்னு நமக்கும் தெரியாது. இருந்தாலும் 50 நாள் முடிஞ்ச பிறகு ப்ரோஜெக்ட்னு ஒன்ன நாங்க deliver பண்ணுவோம். அத பாத்துட்டு "ஐய்யோ நாங்க கேட்டது இதுல்ல, எங்களுக்கு இது வேணும், அது வேணும்னு" புலம்ப ஆரம்பிப்பான்.

"அப்புறம்?" - அப்பா ஆர்வமானார்.

"இப்போ தான் நாங்க நம்பியார் மாதிரி கைய பிசஞ்சிகிட்டே "இதுக்கு நாங்க CR raise பண்ணுவோம்"னு சொல்லுவோம்.

"CR-னா?"

"Change Request. இது வரைக்கும் நீ கொடுத்த பணத்துக்கு நாங்க வேலை பார்த்துட்டோம். இனிமேல் எதாவது பண்ணனும்னா எக்ஸ்ட்ரா பணம் கொடுக்கணும்"னு சொல்லுவோம். இப்படியே 50 நாள் வேலைய 500 நாள் ஆக்கிடுவோம்."

அப்பாவின் முகத்தில் லேசான பயம் தெரிந்தது. "இதுக்கு அவன் ஒத்துபானா?"

"ஒத்துகிட்டு தான் ஆகணும். முடி வெட்ட போய்ட்டு, பாதி வெட்டிட்டு வர முடியுமா?"

"சரி ப்ராஜெக்ட் உங்க கைல வந்த உடனே என்ன பண்ணுவீங்க?"

"முதல்ல ஒரு டீம் உருவாக்குவோம். இதுல ப்ராஜக்ட் மேனேஜர்னு ஒருத்தர் இருப்பாரு. இவரது தான் பெரிய தலை. ப்ராஜெக்ட் சக்சஸ் ஆனாலும், ஃபெயிலியர் ஆனாலும் இவரு தான் பொறுப்பு."


"அப்போ இவருக்கு நீங்க எல்லாரும் பண்ற வேலை எல்லாம் தெரியும்னு சொல்லு."

"அதான் கிடையாது. இவருக்கு நாங்க பண்ற எதுவும்யே தெரியாது."

"அப்போ இவருக்கு என்னதான் வேலை?" – அப்பா குழம்பினார்.

"நாங்க என்ன தப்பு பண்ணினாலும் இவர பார்த்து கைய நீட்டுவோம். எப்போ எவன் குழி பறிப்பானு டென்ஷன் ஆகி டயர்ட் ஆகி டென்ஷன் ஆகுறது தான் இவரு வேலை."

"பாவம்பா"

"ஆனா இவரு ரொம்ப நல்லவரு. எங்களுக்கு எந்த பிரச்னை வந்தாலும் இவரு கிட்ட போய் சொல்லலாம்."

"எல்லா பிரச்னையும் தீர்த்து வச்சிடுவார?"

"ஒரு பிரச்சனைய கூட தீர்க்க மாட்டாரு. நாங்க என்ன சொன்னாலும் தலையாட்டிகிட்டே உன்னோட பிரச்னை எனக்கு புரியுதுனு சொல்றது மட்டும் தான் இவரோட வேலை."

"நான் உன்னோட அம்மா கிட்ட பண்றத மாதிரி?!"

"இவருக்கு கீழ டெக் லீட், மோடுல் லீட், டெவலப்பர், டெஸ்டர்னு நிறைய அடி பொடிங்க இருப்பாங்க."

"இத்தனை பேரு இருந்து, எல்லாரும் ஒழுங்கா வேலை செஞ்சா வேலை ஈஸியா முடிஞ்சிடுமே?"

"வேலை செஞ்சா தானே? நான் கடைசியா சொன்னேன் பாருங்க... டெவலப்பர், டெஸ்டர்னு, அவங்க மட்டும் தான் எல்லா வேலையும் செய்வாங்க. அதுலையும் இந்த டெவலப்பர்,வேலைக்கு சேரும் போதே "இந்த குடும்பத்தோட மானம், மரியாதை உன்கிட்ட தான் இருக்குனு" சொல்லி, நெத்தில திருநீறு பூசி அனுப்பி வச்ச என்னைய மாதிரி தமிழ் பசங்க தான் அதிகம் இருப்பாங்க."

"அந்த டெஸ்டர்னு எதோ சொன்னியே? அவங்களுக்கு என்னப்பா வேலை?" "இந்த டெவலப்பர் பண்ற வேலைல குறை கண்டு பிடிக்கறது இவனோட வேலை. புடிக்காத மருமக கை பட்டா குத்தம், கால் பட்டா குத்தம் இங்குறது மாதிரி."

"ஒருத்தன் பண்ற வேலைல குறை கண்டு பிடிகுறதுக்கு சம்பளமா? புதுசா தான் இருக்கு. சரி இவங்களாவது வேலை செய்யுராங்களா. சொன்ன தேதிக்கு வேலைய முடிச்சு கொடுத்துடுவீங்கள்ள?"

"அது எப்படி..? சொன்ன தேதிக்கு ப்ராஜக்டை முடிச்சி கொடுத்தா, அந்தக் குற்ற உணர்ச்சி எங்க வாழ்கை முழுவதும் உறுத்திக்கிட்டு இருக்கும். நிறைய பேரு அந்த அவமானத்துக்கு பதிலா தற்கொலை செய்துக்கலாம்னு சொல்லுவாங்க"

"கிளையன்ட் சும்மாவா விடுவான்? ஏன் லேட்னு கேள்வி கேக்க மாட்டான்?"

"கேக்கத்தான் செய்வான். இது வரைக்கும் டீமுக்குள்ளையே காலை வாரி விட்டுக்கிட்டு இருந்த நாங்க எல்லாரும் சேர்ந்து அவன் காலை வார ஆரம்பிப்போம்."

"எப்படி?"

"நீ கொடுத்த கம்ப்யூட்டர்-ல ஒரே தூசியா இருந்துச்சு. அன்னைக்கு டீம் மீட்டிங்ல வச்சி நீ இருமின, உன்னோட ஹேர் ஸ்டைல் எனக்கு புடிகலை." இப்படி எதாவது சொல்லி அவன குழப்புவோம். அவனும் சரி சனியன எடுத்து தோள்ல போட்டாச்சு, இன்னும் கொஞ்ச நாள் தூங்கிட்டு போகட்டும்னு விட்டுருவான்".

"சரி முன்ன பின்ன ஆனாலும் முடிச்சி கொடுத்துட்டு கைய கழுவிட்டு வந்துடுவீங்க அப்படித்தான?"

"அப்படி பண்ணினா, நம்ம நாட்டுல பாதி பேரு வேலை இல்லாம தான் இருக்கணும்."
"அப்புறம்?"

"ப்ராஜக்டை முடிய போற சமயத்துல நாங்க எதோ பயங்கரமான ஒன்ன பண்ணி இருக்குறமாதிரியும், அவனால அத புரிஞ்சிக்க கூட முடியாதுங்கற மாதிரியும் நடிக்க ஆரம்பிப்போம்."

"அப்புறம்?"

 "அவனே பயந்து போய், "எங்கள தனியா விட்டுடாதீங்க. உங்க டீம்-ல ஒரு ஒன்னு, ரெண்டு பேர உங்க ப்ரொஜெக்ட பார்த்துக்க சொல்லுங்கன்னு" புது பொண்ணு மாதிரி புலம்ப ஆரம்பிச்சிடுவாங்க." இதுக்கு பேரு "Maintenance and Support". இந்த வேலை வருஷ கணக்கா போகும். "ப்ராஜக்ட் அப்படிங்கறது ஒரு பொண்ண கல்யாணம் பண்ணி வீட்டுக்கு கூட்டிட்டு வர்றது மாதிரி. தாலி கட்டினா மட்டும் போதாது, வருஷ கணக்கா நிறைய செலவு செஞ்சு பராமரிக்க வேண்டிய விசயம்னு" இப்போ தான் கிளைன்டுக்கு புரிய ஆரம்பிக்கும்.

"எனக்கும் எல்லாம் புரிஞ்சிடுப்பா"
                     
                                         ***************************** 
உங்களுக்கு???

Monday, April 2, 2012

நான் ரசித்த கவிதைகள்! - 1

நான் அதிகம் செவிவழியே கேட்டு ரசித்த சில கவிதைகளில், அம்மாவுக்காக கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள்எழுதிய இந்தக் கவிதை மிக முக்கியமானது. வாழ்வில் நடந்த உண்மையை தமிழால், அழுத்தம் மாறாது கொடுத்த கவிஞரின் திறனை பலமுறை எண்ணி வியந்தவன் நான். இதோ அந்தக் கவிதை உங்களுக்காக!

முதன்முதலாய் அம்மாவுக்கு!


ஆயிரந்தா கவி சொன்னேன்.அழகழகா பொய் சொன்னேன்!
பெத்தவளே உன் பெரும, ஒத்தவரி சொல்லலையே!
காத்தெல்லாம் மகன் பாட்டு, காகிதத்தில் அவன் எழுத்து
ஊரெல்லாம் மகன் பேச்சு! உங்கீர்த்தி எழுதலையே?
எழுதவோ படிக்கவோ இயலாத தாய் பத்தி
எழுதியென்ன இலாபமுன்னு எழுதாம போனேனோ?

பொன்னையா தேவன்பெத்த பொன்னே,குலமகளே!
என்னைப் புறந்தள்ள இடுப்புவலி பொறுத்தவளே!
வைரமுத்து பிறப்பான்னு வயித்தில் நீ சுமந்ததில்ல.
வயித்தில் நீ சுமந்த ஒன்னு வைரமுத்து ஆயிடுச்சு!

கண்ணு காது மூக்கோட, கருப்பா ஒரு பிண்டம்,
இடப்பக்கங் கிடக்கையில என்னென்ன நினச்சிருப்ப?

கத்தி எடுப்பவனோ? களவானப் பிறந்தவனோ? தரணியாள வந்திருக்கும் தாசில்தார் இவந்தானோ?
இந்த விவரங்க ஏதொன்னும் தெரியாம, நெஞ்சூட்டி வளத்த உன்ன, நெனச்சா அழுகை வரும்!

கதகதன்னு களி கிண்டி, களிக்குள்ள குழி வெட்டி,
கருப்பட்டி நல்லெண்ண கலந்து தருவாயே!
தொண்டையில அது இறங்கும் சுகமான இளஞ்சூடு,
மண்டையில இன்னும் மசமசன்னு நிக்குதம்மா!

கொத்தமல்லி வறுத்து வச்சு, குறுமொளகா ரெண்டு வச்சு,
சீரகமும்,சிறுமிளகும் சேர்த்துவச்சு நீர்தெளிச்சு,
கும்மி அரச்சு நீ கொழகொழன்னு வளிக்கையில,
அம்மி மணக்கும்! அடுத்ததெரு மணமணக்கும்!

தித்திக்க சமைச்சாலும்,
திட்டிகிட்டே சமைச்சாலும்,
கத்திரிக்கா நெய் வடியும்!
கருவாடு தேனொழுகும்!

கோழிக்குழம்பு மேல,
குட்டி குட்டியா மிதக்கும், தேங்காய்ச் சில்லுக்கு,
தேகமெல்லாம் எச்சில் ஊறும்!

வறுமையில நாமபட்ட வலிதாங்க மாட்டாம,
பேனா எடுத்தேன்! பிரபஞ்சம் பிச்செறிஞ்சேன்!

பாசமுள்ள வேளையிலே,
காசுபணம் கூடலையே!
காசுவந்த வேளையிலே,பாசம் வந்து சேரலையே!

கல்யாணம் நான் செஞ்சு கதியத்து நிக்கையில,
பெத்த அப்பன் சென்னை வந்து சொத்தெழுதி போன பின்னே,
அஞ்சாறு வருசம் உன் ஆசமுகம் பார்க்காம,
பிள்ளை மனம் பித்தாச்சே! பெத்த மனம் கல்லாச்சே!

படிப்பு படிச்சுகிட்டே பணம் அனுப்பி வச்ச மகன்,
கைவிட மாட்டான்னு கடைசியில நம்பலையே!

பாசம்,கண்ணீர்,பழையகதை எல்லாமே,
வெறிச்சோடிப்போன வேதாந்தம் ஆயிடுச்சே!

வைகையில ஊர் முழுக, வல்லூறும் சேர்ந்தழுக,
கைப்பிடியாய்க் கூட்டிவந்து கரைசேர்த்து விட்டவளே!
எனக்கொன்னு ஆனதுன்னா,உனக்கு வேறு பிள்ளை உண்டு!
உனக்கேதும் ஆனதுன்னா, எனக்கு வேற தாய் இருக்கா?

                                                                            - 'கவிப்பேரரசு' வைரமுத்து