Friday, July 27, 2012

ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும்...

எல்லா பெற்றோருக்கும் தங்கள் பெண்ணை ஒரு நல்ல இடத்தில் கட்டி கொடுக்க வேண்டும் என்ற கனவு நியாயமான ஒன்று தான். அவள் பெற்றோரும் அப்படித் தான். மாப்பிள்ளைப் பார்க்க தொடங்கினர்.
படித்த மாப்பிளை , நல்ல வேலையில் கை நிறைய சம்பாதிக்கும் ஒருவன், நல்ல குடும்பம்.


இருவருக்கும் இருவரையும் பிடித்தும் போனது, உடனே நிச்சயம் செய்துவிட்டனர் , தினமும் அழைபேசியில் இருவரும் தங்களைப் பற்றி பேச தொடங்கினர். இருவருக்கும் ஏறத்தாழ ஒரே மனப்பான்மை தான்.இருவருக்கும் பொருந்தி போனது. 


திருமண நாள் நெருங்க நெருங்க வீட்டில் ஒரே பதட்டம். வேலைகள் தலைக்கு மேல் கிடந்தது, இருவர் வீட்டிலும் வேலைகள் துரிதமாக நடந்தேறியது.நாளை திருமணம்.
 
அவள் லேசாக அவள் வீட்டை சுற்றிப் பார்த்தாள். தினமும் அவருடன் பேசியதில் தான் இந்த வீட்டை விட்டு செல்ல போகிறோம் என்று தெரியவில்லை. ஆனால் அன்று ஏதோ ஒன்றை இழக்க போகிறோம் என்று அவள் மனம் பரிதவித்தது. தாயையும். தந்தையையும் பார்த்தாள் எல்லோரும் வேலையில் இருந்தனர். அவள் வீட்டை ஒரு முறை சுற்றி வந்தாள். விரித்த கண்களோடு வீட்டை பார்த்தாள். கண்கள் சுருங்கிய பின்னர் ஓரத்தில் நீர் துளி சொட்டியது.. தங்கையின் புது துணி பரவசத்தில் அக்கா என்று ஓடி வந்தாள்.அவளை பார்த்ததும் "என்ன ஆச்சு அக்கா?" என்றாள். பூ வாங்கினால் கூட சமமாய் வெட்ட சொல்லி சண்டை போடும் அக்கா . இனி நான் யாருடன் சண்டை போடுவேன். இந்த சின்ன சின்ன மகிழ்ச்சிகளை விட்டுக் கொடுத்து விட்டு நான் செல்ல போகிறேனே என்று எண்ணினாள்.அடுப்படியில் பால் கொதித்து கொண்டிருந்தது . ஓடி சென்று அடுப்பை அணைத்து,"அம்மா!பால் வெச்சிட்டு எங்க போனே?",என்று திட்டினாள். அவளைப்  பெற்றவள். அவளை வளர்த்தவள் என்றாலும், அம்மாவை அடிக்கடி திட்டி விடுவதும்,பின் கட்டி அணைப்பதும் இனி கிடைக்குமா?

அப்பா யாருடனோ தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தார். அவர் பக்கத்தில் சென்று அமர்ந்தாள். பேசிக் கொண்டே அப்பா இவளைப் பார்த்தார். "அம்மாவை கொஞ்சம் கூப்பிடுமா.." என்று சொல்லி விட்டு மறுபடியும் பேச தொடங்கினார். இவள் எச்சிலையும் சோகத்தையும் தொண்டையில் விழுங்கி விட்டு எழுந்து அம்மாவை அழைத்து விட்டு, வீட்டின் வெளியில் உள்ள மாடிப்படியில் உட்கார்ந்தாள். எங்கிருந்தோ, "அடியே!உள்ள போ. கறுத்துர போற! நாளைக்கு கல்யாணத்த வெச்சிக்கிட்டு இங்க வந்து உட்கார்ரா பாரு!" என்று எப்பொழுதும் எதையாவது சொல்லி கொண்டிருக்கும் பாட்டி. எரிச்சலுடன் பாட்டியிடம் எப்பொழுதும் பேசும் அவள் அன்று பாட்டி சொன்னதை கேட்காமல் பாட்டியை முறைத்துப் பார்த்தாள். முகம் அப்படியே அழுவது போல மாறியது. பாட்டி உடனே,"என்னடி என்ன ஆச்சு!",என்று பதட்டத்துடன் கேட்டாள். அழுகை அருவிப் போல் பொங்கியது.உள்ளே ஓடி சென்று விரக்தியுடன் "அம்மா..அப்பா என்று கத்தினாள்.எல்லோரும் ஏதோ என்று பயந்துக்கொண்டு உடனே ஓடி வந்தனர். "அம்மா நான் போகமாட்டேன். இங்கேயே இருந்துடுறேன். உங்களை விட்டு நான் எப்படி செல்வேன். அங்க எப்டி இருக்குமோ. எனக்கு பயமா இருக்கு. நான் போகலை..",என்று மெல்லிதாய் அழுதாள். உடனே அப்பாவின் மனம் அழுதது. அம்மா சமாதானம் சொன்னாள். அப்பாவுடன் அவ்வளவு நெருக்கம் இல்லாமல் இருந்தாலும் அப்பாவிற்கும் பெண்ணிற்கும் உள்ள அந்த பாசம் வார்த்தையில் வருணிக்க முடியாதது . தங்கை குலுங்கி குலுங்கி அழுதாள். "அக்கா அழாதேக்கா! மாமா உன்ன நல்லா பார்த்துப்பாருக்கா!" என்று வெகுளி பேச்சில் சமாதானம் செய்தாள். அன்றிரவு அவளுக்கு பிடித்த அத்தனையும் சமைத்தாள் அம்மா. ஆனால் அவள் புண்பட்டு போயிருந்தாள்.நாளை திருமணம். போகும் இடம் சொர்கமோ, இல்லையோ என்றெல்லாம் தெரியாது.ஆனால் அவள் வாழ்ந்த ஒரு சொர்கத்தை விட்டு மட்டும் அவள் செல்ல போகிறாள்.

திருமணம் என்பது ஆண்களின் வாழ்வில் ஒரு நிகழ்வு. ஆனால் ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் அது மாற்றம்.அவள் வாழ்ந்த வீட்டிலிருந்து அவளை வேரோடு பிடிங்கு எடுத்து மற்றொரு இடத்தில் நட்டு வைக்கும் விழா தான் திருமணம் . துளிர்ந்த பெண்களும் உள்ளனர். பட்டுப்போன பெண்களும் உள்ளனர்!

நன்றி :Harini Nagaraj