Thursday, April 4, 2013

நேரமே கிடைக்கலீங்க!

நேரமே கிடைக்கலீங்க!

'சுத்தமா நேரமே இல்லீங்க...' எனும் வாக்கியத்தைப் பேசாமலோ, கேட்காமலோ ஏதாவது ஒரு நாள் முடிந்திருக்கிறதா?

நேரம் போதவில்லை எனும் குற்றச்சாட்டு எல்லோரிடமும் இருக்கிறது. எல்லோரும், எப்போதும் எதையோ செய்து கொ...ண்டே இருக்கிறார்கள். கடைகள் நள்ளிரவு தாண்டியும் விழித்திருக்கின்றன. வீடுகளில் விளக்குகள் ஜாமங்கள் கடந்தும் கூட அணைக்கப்படாமல் இருக்கின்றன.

சூரியனுக்கு முன்பே சாலைகளில் மக்கள் வந்து விடுகிறார்கள். மக்கள் ரொம்பவே பிஸி. எவ்வளவு தான் பிஸியாய் இருந்தாலும் கடைசியில் 'நேரம் கிடைக்கல' எனும் புராணம் தான்.

'நேரம் பறந்து தான் போகும். ஆனால், அதை ஓட்டற பைலட் நீங்க தான்' என்கிறார் மைக்கேல் ஆட்ஷர்.

உங்களோட வாழ்க்கையைக் கொஞ்சம் ரீவைண்ட் செய்து பாருங்களேன். உங்களுடைய நேரமெல்லாம் எப்படிப் போகிறது? ஒரு வேலை முடிந்த அதே இடத்தில் அடுத்த வேலை பிள்ளையார் சுழி போடுகிறது.

நிம்மதியாய் ஒரு காபி குடிக்க முடிவதில்லை, அப்போதும் அடுத்த வேலை குறித்த நினைவுகள் தான். வார இறுதி வந்தால் வீட்டிற்காய் செய்ய வேண்டிய ஆயிரத்தெட்டு வேலைகள் வரிசையாய்க் காத்திருக்கும்.

ஆனால், சிலரைப் பாருங்கள். பெரிய பெரிய பதவியில் இருப்பார்கள். வார இறுதியில் ஹாயாக குடும்பத்தோடு பீச் போவார்கள். காலையில் நாயையும் கூட்டிக் கொண்டு ஜாகிங் போவார்கள். அவர்களுக்கும் ஏகப்பட்ட வேலைகள் இருக்கின்றன. ஆனால், அவர்களால் எல்லாவற்றையும் சமாளித்து எப்படி ஜாலியாகச் சுற்ற முடிகிறது?

அதைப்பற்றிப் பேசுவதைத் தான் 'டைம் மேனேஜ்மெண்ட்' என்கிறார்கள். நேர மேலாண்மை என்று தமிழில் அழைக்கப்படும் இந்த விஷயம், சரியான வேலையை, சரியான நேரத்தில் செய்து முடிக்க வழிகாட்டுகிறது. அதில் முக்கியமான சில தகவல்களைப் பார்ப்போம்.

எவ்வளவுதான் ஓடியாடி வேலை செய்தாலும் கடைசியில் 'அடடா... இந்த வேலையைச் செய்யாம விட்டுட்டோமே. அதைச் செஞ்ச நேரத்துல நான் இதைச் செய்திருக்கலாம்' எனும் ஒர் ஏமாற்றம் ஏற்படுவது இயல்பு.

இதைச் சரி செய்ய, அன்றைய தினம் செய்ய வேண்டிய பணிகளின் பட்டியல் ஒன்றைத் தயாராக்க வேண்டும். அடுத்த நாளைக்கான பணிகளின் பட்டியலை முந்தின நாள் இரவிலேயே தயாராக்கி வைப்பது நல்லது.

இப்போது அந்தப் பட்டியலிலுள்ள விஷயங்களை வரிசைப்படுத்த வேண்டும். எது அவசரமான வேலை, எது அவசியமான வேலை, எது முக்கியமற்ற வேலை என அந்த பட்டியல் இருக்க வேண்டும். இதில் கடைசி இடம் முக்கியமற்ற வேலைகளுக்கு என இருக்கட்டும்.

அதையும் முடித்தபின், பட்டியலிலுள்ள விஷயங்களை எல்லாம் 'சின்னச் சின்ன' செயல்களாக மாற்றி எழுத முயலுங்கள். ஒவ்வொரு சின்னச் சின்ன வேலையும் 20 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை வருவதாக இருந்தால் நல்லது.

'ஐயாவுக்கு ஞாபக சக்தி கெட்டி' என பந்தா பண்ணாமல், இந்த விஷயங்களையெல்லாம் ஒரு பேப்பரில் எழுதிப் பழகினால், நீங்கள் டைம் மேனேஜ்மெண்டின் முக்கியமான ஒரு விஷயத்தைக் கற்றுத் தேர்ந்தாகி விட்டது என்று பொருள்.

ஒரு வேலையைச் செய்யும்போது, ஒரு வேலையை மட்டும் செய்ய வேண்டும். நாம் பெரும்பாலும் அப்படி செய்வதில்லை. ஒரு வேலை செய்து கொண்டிருக்கும் போதே மெயில் வாசிப்போம், இணையத்தில் உரையாடுவோம், ஃபேஸ்புக்கில் புரள்வோம், விரலில் எஸ்.எம்.எஸ் இருக்கும், காதில் போன் இருக்கும், மனதில் சிந்தனைகள் ஓடிக் கொண்டே இருக்கும்.

இப்படி, ஒரு வேலை செய்வதாக நாம் சொல்லிக் கொள்ளும் நேரத்தின் பெரும்பகுதியை மற்ற சில்லறை வேலைகளே பிடுங்கித் தின்னும். இதை விட்டு விட்டு, ஒரு நேரத்தில் ஒரே ஒரு வேலையை மட்டும் செய்தால் உண்மையிலேயே அந்த வேலை சீக்கிரம் முடியும், சரியாகவும் முடியும்.

பின்னர் பார்ப்போம் என்று சில வேலைகளைத் தூக்கி ஓரமாகவே போட்டு வைப்போம். அது ஒரு பெரிய தலைவலியாக மனதுக்குள் ஓடிக்கொண்டே இருக்கும். அப்படிப்பட்ட வேலைகளை சின்னச் சின்ன பாகங்களாகப் பிரித்து, அதில் ஒரு பாகத்தை முதலில் செய்ய ஆரம்பியுங்கள். அது உங்களை ரொம்பவே ரிலாக்ஸாக வைக்கும்.

யார் என்ன வேலை கொடுத்தாலும் சரிங்கையா... என தலையாட்டிக் கொண்டே வாங்கிக் குவிக்காதீர்கள். உங்கள் நேரமெல்லாம் புதைகுழியில் போய் விடும். உங்களுக்கு நேரமில்லையேல் 'சாரி, டைம் இல்லை' என சிம்பிளாக மறுத்து விடுவது உசிதம்.

அதேபோல செய்ய வேண்டிய வேலைகளை எல்லாம் ஒரே நேரத்தில் ஆரம்பிப்பதும் ஆபத்தானது. இரண்டு வேலைகளை ஒரே நேரத்தில் செய்தால் இரண்டுமே உங்களைக் கவிழ்த்து விட வாய்ப்பு உண்டு. இரண்டு வேலைகளை ஒரே நேரத்தில் செய்வது பெரும்பாலும் நேர விரயத்தில் தான் முடியும் என்கின்றன ஆராய்ச்சிகள்.

'உக்காந்தா சீட்டை விட்டு எழும்பவே மாட்டான்' என்று சிலரைப் பற்றிக் கூறுவார்கள். அதெல்லாம் டேஞ்சர். வேலைக்கு நடுவே இடையிடையே ஓய்வு எடுப்பது வேலையில் சுறுசுறுப்பையும், கவனத்தையும், தெளிவையும் தரும் என்கின்றனர் உளவியலாளர்கள்.

எல்லா நேரத்திலும் எல்லா வேலைகளையும் செய்ய முடியாது. காலையில் உங்களுக்கு உற்சாகமாய் இருக்கும் நேரத்தில் முக்கியமான வேலைகளைச் செய்யுங்கள். மூணு மணிக்கு தூக்கம் வரும். அந்த நேரத்தில் அங்கும் இங்கும் நடந்து செய்ய வேண்டிய வேலைகளைச் செய்யுங்கள். இது உங்களுடைய எனர்ஜிக்கேற்ப உங்களை இயக்கும்.

'நீங்கள் தாமதமாகலாம். ஆனால், டைம் எப்பவுமே கரெக்டான நேரத்துக்கு வந்து விடும்' என்கிறார் பெஞ்சமின் பிராங்கிளின்.

ஒரு வேலையைத் திட்டமிடுகிறீர்கள் என வைத்துக் கொள்ளுங்கள். அதற்கு ஒரு டைம் லிமிட் செட் பண்ணிக்கொள்ளுங்கள். 'வாசிப்பு' ன்னு ஒரு செயல் இருந்தால் அதற்கு ஒன்றோ, இரண்டோ மணி நேரம் என உங்களுடைய வசதிப்படி நேரம் ஒதுக்குங்கள். ஒவ்வொரு வேலையையும் இவ்வளவு நேரத்தில் செய்து முடிப்பேன் என ஒர் எல்லை உருவாக்கி, அந்த நேரத்துக்குள் அந்த வேலையை செய்து முடியுங்கள்.

எப்போதுமே 'பிஸி பிஸி' என சொல்லிக் கொண்டிருக்கும் நபர்களுடைய வேலைகளைக் கொஞ்சம் கவனமாய்ப் பாருங்கள். அரட்டை, சினிமா, பாட்டு, போன், இ மெயில் என ஏகப்பட்ட நேரத்தை தேவையில்லாமல் அழித்துக் கொண்டிருப்பார்கள். நம்மிடம் இருப்பது ஒரு நாளைக்கு இருபத்து நான்கு மணி நேரம் மட்டுமே. செலவிடாத நிமிடங்கள், சேமிக்கப்படும் நிமிடங்கள் என்பது நினைவில் இருக்கட்டும்.

`எல்லாத்தையும் நான் தான் செய்யணும்' என சகலத்தையும் தன் தலையில் அள்ளிப் போடுவது சிலருடைய பழக்கம். அடுத்தவர்களிடம் வேலை வாங்குவது ஒரு கலை. அதைக் கற்றுக் கொள்ளுங்கள். யாரிடம் என்ன வேலை கொடுக்க வேண்டுமோ அதைக் கொடுங்கள். கொடுத்தபின் அது அவர்களுடைய வேலையாகி விடும். அதில் போய் மூக்கை நுழைத்து நேரத்தை வீணாக்காதீர்கள்.

காத்திருக்கும் நேரம் சுத்த வேஸ்ட் என்பது தான் பலருடைய எண்ணம். திட்டமிட்டால் அந்த நேரத்தை பயனுள்ள வகையில் செலவிட முடியும். ஒரு ரிப்போர்ட் வாசிக்க வேண்டியிருக்கலாம், ஐடியாக்கள் கண்டுபிடிக்க வேண்டியிருக்கலாம், கணக்கு போட வேண்டியிருக்கலாம். இப்படிப்பட்ட வேலைகளை காத்திருக்கும் நேரங்களில் அமைத்துக் கொண்டால் நேரத்தை மிச்சப்படுத்தலாம்.

'அடடா... ஒரு மணி நேர வெயிட்டிங்கா, ஒரு பேப்பரும், பேனாவும் இருந்திருந்தா நல்லா இருந்திருக்குமேன்னு...' கடைசி கட்டத்துல யோசிக்காதீங்க.

நாம எதையும் ஒழுங்குபடுத்தி வைக்காததால் நிறைய நேரம் வீணாகிறது என்கிறார்கள் வல்லுநர்கள். அலுவலகத்தில் ஒரு தகவலாக இருக்கலாம், வீட்டில் ஒரு பொருளாக இருக்கலாம்... எங்கே வெச்சேன்னு தெரியாம குப்பையைக் கிளறுவதில் எக்கச்சக்க நேரம் கரைந்து போவதுண்டு. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு இடம் உண்டு. அது அங்கங்கே இருந்தால் நேரம் ரொம்ப மிச்சமாகும் என்பது சிம்பிள் அட்வைஸ்.

எல்லாத்துலயும் பெர்பெக்டா இருக்கணும்ன்னு எதிர்பார்ப்பது நமக்கு தேவையற்ற டென்ஷனைத் தான் தரும். சிலர் ஷூவுக்கு பாலீஷ் போடவே ஒரு மணி நேரம் எடுத்துப்பாங்க. அப்படியே அது தேவையான்னு யோசிங்க.

அந்த வேலையை அஞ்சு நிமிஷத்துல முடிச்சா உங்களுக்கு எவ்ளோ நேரம் கிடைக்கும்! அந்த நேரத்தில என்னென்ன வேலைகள் செய்யலாம்ன்னு யோசிங்க. குறிப்பிட்ட வேலையை குறிப்பிட்ட நேரத்தில் முடித்தால், அப்படியே உங்கள் கையை வளைத்து உங்கள் முதுகைத் தட்டிக் கொடுங்கள். அப்படியே கொஞ்சம் ரிலாக்ஸ் ஆக இருந்து தேநீர் அருந்தி அந்த இடைவேளையைக் கொண்டாடுங்கள்.

கடைசியாக முக்கியமான ஒரு விஷயம். வேலைகளை எல்லாம் ஒழுங்குபடுத்தி வரிசையா செய்யும்போது உங்களோட வாழ்க்கையை மறந்துடாதீங்க. ஓய்வு, உணவு, உடற்பயிற்சி, குடும்பத்தோடு செலவிடும் நேரம், தூக்கம் எல்லாம் நிறைவா இருக்கட்டும்.

மணித்துளி என்பது காலக் கணக்கு
சரியாய் செலவிடு, வெற்றிகள் உனக்கு!


Thanks to:

1 comment:

  1. அலுவலக வேலைகள் என்றாலும் சரி... தொழில் சார்ந்த வேலைகள் என்றாலும் சரி... அந்த நேரத்தோடு மறந்து விட்டால் நல்லது... வீட்டுக்கு வந்தும் அதையே நினைத்துக் கொண்டிருந்தால்...?

    நேர மேலாண்மை, திட்டமிடுதல் உட்பட பல கருத்துக்களுக்கு பாராட்டுக்கள்... நன்றி...

    தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete

படித்த அடையாளத் தடத்தை இங்கே விட்டுச் செல்லுங்கள் - அன்புடன் ராஜ்குமார்