Wednesday, November 27, 2013

கையெழுத்து!

நம் அன்றாட வாழ்க்கையில் பலவித மனிதர்களை ,பலவித காலகட்டங்களில் சந்திக்கின்றோம் .அவர்கள் பின்னாளில் நம் நண்பர்களாகவோ எதிரிகளாகவோ அல்லது  எவ்வித உறவுப்பிணைப்பும் இல்லாதவர்களாகவோ அடையாளப்படுத்தப் படுகின்றனர்.என்னைப்பொறுத்தவரையில் அவர்கள் எந்த வகையினராக இருந்தாலும் அவர்களிடம்  நாம் கற்றுக்கொள்ள ஒரு பாடமும் கேட்டறிய ஒரு கதையும் இருக்கவே செய்கிறது.

         அவ்வாறு என் வாழ்க்கையில் பலவித நல்லவை,கெட்டவைகளை பலரும்  அறியவைத்துள்ளனர்.நான் ஆறாம்வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன்.அந்த வருடம் இதற்கு முந்தியவை போல மகிழ்ச்சியான வருடமாக இல்லை.காரணம் இருவர்.அவர்கள்  என் வகுப்பில் சேரும்வரை முதலிடம் பிடித்திருந்த நான்,பிறகு மூன்றாம் இடம் தள்ளப்பட்டேன்.என்னால் அவர்களைப் போல ஏன் படிக்கமுடியவில்லை? என்ன ஆயிற்று எனக்கு என கேள்விகேட்டபடி படுக்கையில் தூக்கமின்றி துவண்டேன்.பெருக்கல் வாய்ப்பாடு மனப்பாடம் செய்ய முடியாமல் அடி வாங்கிய வருடமும் அதுதான்.ஆசிரியைகள் பள்ளி முடிந்த பிறகு எடுக்கும் சிறப்பு வகுப்புகளுக்கு செல்லத்  துவங்கினேன்.இருந்தாலும் கணக்குப்பாடம் என்பது அவ்வளவு பிடிப்பதாக இல்லை.

         ஏழாம்வகுப்பும் எப்படியோ கடந்து சென்றது.எட்டாம் வகுப்பு படிக்கையில் கிட்டத்தட்ட  என் எண்ணங்கள் முற்றிலும் மாறியிருந்தன.மதிப்பெண்கள் பற்றியோ எத்தனையாவது இடம் பிடிக்கிறேன் என்பதைப் பற்றியோ நான் கவலைப்படுவதே இல்லை.காரணம்  எனக்கு அமைந்த நண்பர்கள்.அவர்களை விட அதிக மதிப்பெண் என்பது மட்டுமே எனக்கு போதுமானதாக இருந்தது.நன்றாக படிப்பவர்களை நண்பர்களாக்கிக் கொண்டேன்.கணித வகுப்புகளில் கொடுக்கும் வீட்டுபாடங்களை, சிந்திக்காமல் அச்செடுக்க அவர்கள் மிகவும் உதவினார்கள்.அது போலவே, வகுப்பில் தினமும் வைக்கப்படும் தேர்வுத்தாள்களில் மதிப்பெண் இடுபவர்களும் அவர்களே என்பதால்,ஆசிரியையிடம் அடிவிழாமல் காப்பாற்றும் மதிப்பெண்கள் எனக்குக் கிடைப்பதை அவர்கள் உறுதி  செய்துவிடுவார்கள்.அவர்களில் முக்கியமானவர்கள் யமுனாதேவி மற்றும் கவிதா.


           கவிதா என் சொந்த ஊரைச் சேர்ந்த மாணவி.பக்கத்து வீடு கூட.ஆகவே படிப்பு சார்ந்த  குறிப்பாக கணிதம் சார்ந்த உதவிகள் நிறைய கிடைத்தன.சிலரைப் பற்றி நாம் நினைப்பது ஒன்றாக இருக்கும்.ஆனால் உண்மை வேறொன்றாக இருக்கும்.கவிதா மீது  முதலில் எனக்கு இருந்த கோபம் இப்போது மரியாதையாக மாறி இருந்தது.கவிதாவின் அழகான தமிழ் கையெழுத்து எனக்கு மிகவும் பிடிக்கும்.,சீரான இடைவெளியில்,நேர்த்தியாக  அழுத்தமாக எழுதப்படும்  அந்த வரிகளைக் கண்டு வியந்த உணர்வு இன்றும் அப்படியே இருக்கிறது.கவிதாவின் நோட்டு புத்தகங்களை வாங்கி வந்து,அவள் எழுதியதைப்  போலவே எழுத முயற்சித்தேன்.இரண்டு மூன்று வரிகள் அதேபோல எழுதிவிடுவேன்.பிறகு பழையபடி கையெழுத்து குழைந்துவிடும்.அப்படி எழுதுவதற்கு அதிக நேரம்  தேவைப்பட்டது.அடுத்த நாள் முதல், வகுப்புகளில் கவிதா எழுதுவதை உன்னிப்பாகக் கவனித்தேன்.பேனா பிடிப்பது,எந்தப்பக்கம் சாய்த்து எழுதுகிறாள் வார்த்தைகள் எப்படி  நேராய் அமைகின்றன என ஒவ்வொன்றையும் கூர்ந்துகவனிக்க துவங்கினேன்.

         அந்த வருடம் கல்வி சிறிது முன்னேற்றத்துடன் முடிவடைந்தது.வேறு பள்ளிக்கு மாற்றல் ஆனேன்.இன்னும் "கவிதாவின் கையெழுத்து" எனக்கு  பரிச்சயப்படவில்லை.நான் பத்தாம்வகுப்பு படிக்கும்போது,எனக்குள் கிடந்த கையெழுத்து ஆசை மீண்டும் தலைதூக்கியது.தினமும் பலமணிநேரம் அதற்காக பயிற்சி செய்தேன்.வீட்டுப்பாடம்  செய்யும்போதும்,பரிச்சைக்கு முன்னர் எழுதிப்பார்க்கும் போதும் கையெழுத்தின் மேன்மையில் அதிகம் கவனம் செலுத்தத் துவங்கினேன்.
    
          பத்தாம் வகுப்பு இறுதி தேர்வு  எழுதுகையில் ஓரளவு நன்றாகவே தேர்ந்துவிட்டேன்.கவிதாவின் எழுத்துகளுடன் ஒப்பிட முடியாது எனினும் நல்ல வடிவாக எழுதப் பழகியிருந்தேன்.

பத்துவருடங்களுக்கு  மேல் ஆகின்றன.இன்றும் என் கதை கவிதைகளைப் படிப்பவர்கள் "உன் கையெழுத்து அழகாக இருக்கிறது !" எனக் கூறினால்,சட்டென நினைவில் வந்துசெல்கிறாள் கவிதா  என்ற அந்தத் தோழி!

1 comment:

  1. இனிய நினைவுகளுடன் ரசிக்க வைக்கும் கவிதை...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete

படித்த அடையாளத் தடத்தை இங்கே விட்டுச் செல்லுங்கள் - அன்புடன் ராஜ்குமார்