Tuesday, November 18, 2014

படித்ததில் பிடித்தது 13- சாமியாரா இருக்கப் போறாரு! (குட்டிக்கதை)


ஒரு கிராமத்தில் மதன் என்பவன் மனைவியோடு வாழ்ந்து வந்தான். அவர்கள் இருவரும் பிச்சைக்காரர்களுக்கு ஒரு பிடி சோறு போட மாட்டார்கள். இதனால் பிச்சைக்காரர்கள் யாரும் அவர்கள் வீட்டுக்கு வருவது இல்லை.

இரவு நேரம், வெளியூரில் இருந்து பிச்சைக்காரன் ஒருவன் அங்கே வந்தான். காவி வேட்டி கட்டியிருந்த அவன், சாமியாரைப் போலக் காட்சி அளித்தான்.
அந்த வீட்டைப் பார்த்த அவன் கதவைத் தட்டினான்.

""அம்மா! தாயே! இந்த ஏழைக்குப் பிச்சை போடுங்கள்,'' என்று குரல் கொடுத்தான்.

கதவைத் திறந்த மதன், ""பிச்சை எதுவும் கிடையாது. வேறு இடம் பார்,'' என்று கோபத்துடன் சொல்லி விட்டு, கதவைப் படீரென்று சாத்தினான்.
இரவாகி விட்டது. வேறு எங்கும் செல்ல முடியாது. இங்கேயே தங்கிவிட வேண்டியதுதான் என்று நினைத்தான் அவன்.
""இந்த வீட்டில் பிச்சை கிடைக்க வில்லை. அதனால், அந்த ஊரில் செய்தது போல செய்துவிட வேண்டியதுதான். வேறு வழி இல்லை,'' என்றபடியே திண்ணை யில் அமர்ந்தான்.
அவன் பேசியது வீட்டிற்குள் இருந்த இருவருக்கும் கேட்டது.
""என்னங்க... வந்தவர் பெரிய சாமியார்னு நினைக்கிறேன். நாம வேற பிச்சை இல்லேன்னு சொல்லிட்டோம். அவர் கோபமாக இருக்காரு. அந்த ஊரில் செய்தது போல செய்யப் போறேங்கறாரு. என்ன செய்யப் போறாரோ தெரியவில்லை. எனக்குப் பயமா இருக்கு,'' என்று நடுக்கத்துடன் சொன்னாள்.
""அவர் பேசியதைக் கேட்டு எனக்கும் பயமாகத்தான் இருக்குது. பிச்சைக்காரன்னு நினைச்சு அவர்கிட்ட கோபமா பேசிட்டேன். அவர் நம்மைச் சபிச்சாலும் சபிச்சுடுவார். இப்ப என்ன செய்யறது?'' என்று கலக்கத் துடன் கேட்டான் அவன்.
""அவர் கால்ல விழுந்து மன்னிப்பு கேட்போம். பெரியவரான அவர் நம்மை மன்னிச்சுடுவார்,'' என்றாள் அவள்.
கதவைத் திறந்த இருவரும் அந்த பிச்சைக்காரன் காலில் விழுந்தனர்.
""எங்களை மன்னிச்சிடுங்க... நீங்க யார்னு தெரியாம அப்படிப் பேசிட்டோம். சிறிது நேரம் பொறுமையா இருங்க. உங்களுக்கு விருந்தே போடுகிறோம்,'' என்றனர்.
ஏதும் பேசாமல் அமைதியாக இருந்தான் பிச்சைக்காரன்.
"அவர் கோபம் தீரவில்லை' என்று இருவரும் நினைத்தனர்.
சமையல் அறைக்குள் சென்ற அவள் சமைக்கத் தொடங்கினாள். மதனும் உதவி செய்தான்.
சுடச் சுட விருந்து தயாரானது.
வெளியே வந்த அவர்கள் இருவரும் அவனைப் பணிவுடன் அழைத்தனர்.
பசியுடன் இருந்த பிச்சைக்காரன் அவர்கள் தந்த விருந்தைச் சுவைத்துச் சாப்பிட்டான். பெரிதாக ஏப்பம் விட்டான்.

அவர் கோபம் தணிந்து விட்டது. இனி ஆபத்து இல்லை என்று இருவரும் நினைத்தனர்.

அவனுக்கு வெற்றிலை, பாக்கு கொடுத்தனர். அவற்றையும் அவன் வாயில் போட்டு மென்றான்.

""நல்ல சாப்பாடு போட்டீங்க. இப்படி எங்கேயும் சாப்பிட்டது இல்லை.நீங்க நல்லா இருக்கணும்,'' என்று வாழ்த்தினான் அவன்.

தங்களை என்ன செய்ய நினைத்தார் என்பதை அறிய விரும்பினான் மதன்.
""சாமி! நீங்க எங்க வீட்டுத் திண்ணையில் அமர்ந்தீங்க. அந்த ஊரில் செய்தது போல இங்கேயும் செய்ய வேண்டியதுதான் என்றீங்க. அந்த ஊரில் என்ன செய்தீங்க?'' என்று கேட்டான்.

""இதே போல ஒரு ஊரில் பிச்சை கேட்டு அலைஞ்சேன். யாரும் பிச்சை போடவில்லை. ஒரு வீட்டுத் திண்ணை யில் இன்று பட்டினி என்றபடியே படுத்துக் கொண்டேன். அந்த ஊரில் செய்தது போல இங்கும் செய்ய வேண்டியதுதான் எனச் சொன்னேன்,'' என்றான் பிச்சைக்காரன்.
தாங்கள் ஏமாந்ததை எண்ணி இருவரும் திகைத்து நின்றனர்.

-Dinamalar

Friday, November 7, 2014

என் கற்பனைக் காதலி (சந்தக்கவிதை)


கன்னத்தில் குழிவிழும் அழகியவள் -கால்
சலங்கையில் ஜதி சொல்லும் யுவதியவள் !

வார்த்தைகள் ஒவ்வொன்றும் இனித்திருக்கும் -அவள்
திருமுகம் பார்த்திட மனம் துடிக்கும் !

தினம்தினம் புதிதாய்க் காதலிப்பாள் -என்னுள்
திரும்பிய திசையெல்லாம் சிரித்திருப்பாள் !

உயிருடன் நடந்திடும் ஓவியமே -என்னை
உனதொரு ரசிகனாய் மாற்றிவிட்டாய் !

பார்வைகள் ஒவ்வொன்றும் இனிய சுகம் -மனம்
கவிதைகள் படைத்திடும் புதியவிதம் !

இனியவளே உன்னைக் காதலித்தேன்-என்
உயிராய் உன்னைத் தினம் நினைத்தேன்!

இளமை மாறா இளங்கிளியே -நித்தம்
வருவாயோ என்னை மகிழ்த்திடவே!

என் தாள்களில் எல்லாம் கவிதைச் சத்தம் -உன்னைக்
கண்டதும் கேட்பேன் நூறு முத்தம்!!

- ராஜ்குமார்

Tuesday, November 4, 2014

அன்பென்ற மழையில்! (கவிதை)


அவள் விழியின் ஈரத்தில்,
நானும் நனைந்திருந்தேன்.

பலநாளும் அவள் அழுததுண்டு.
என்மேல் வரும் கோபத்தால்!
இருந்தும் புன்னகைப்பாள்..
என் மனம் குளிர்வதற்கு.

அன்புக் குழந்தையை,
அடிவயிற்றில் சுமந்தபடி,
நித்தம் பல கனவோடு,
வாழ்கின்றாள் என்னவள்!

அன்றைய பொழுதுகளில்,
அப்படி நான் இருக்கவில்லை.

சமுதாயக் கோபத்தில்,
வேலையிழந்த ஏக்கத்தில்,
என்னை மறந்தபடி
வாழ்ந்த அந்நாட்களில்,
என்னவள் கனவுகளை-நான்
கண்டுகொள்ளத் துணியவில்லை!

அன்புகாட்டி அவள் ஊட்டும் சோற்றுக்கும்,
அக்கறையாய் அவள் செய்யும் சேவைக்கும்,
இரக்கம் சிறிதுமின்றி-உடல்
வேதனையை விலையாய்க் கொடுத்தேன்!

அன்றொருநாள் நள்ளிரவில்,
நடுங்கிக் கிடந்தேன் குளிர் சுரத்தில்!
"அம்மா! அம்மா!" என்ற வார்த்தையன்றி,
ஏதும் சொல்லத்துணிவின்றிக் கிடந்தேன்!

அழுது பரபரத்து -என்னவள்
மருத்துவமனை சேர்த்தாள்!
விடியல் வரை உறக்கம் தொலைத்து,
என்னை மடியில் சுமந்திருந்தாள்!

அவள்முகம் பார்த்தேன் விழிகள் திறந்து!
கண்டுகொள்ளா நேரத்திலும்,
காதல் மழை பொழிந்தவள்.
அடைந்துகிடந்த இதயத்தில்
அன்பை வாரித் தெளித்தவள்!

சொல்லி அழ வார்த்தைகள் வரவில்லை.
அவள் வளைகை இறுகப் பற்றிக்கொண்டு ,
விரல்களில் முத்தமிட்டேன்!

சிரித்தபடி அழுதாள்!-அன்று
அவள் விழியின் ஈரத்தில்,
நானும் நனைந்திருந்தேன்.

- ராஜ்குமார் 

சராசரி இந்தியனின் நள்ளிரவுக் கனவு!


முடியாத இரவினிலும்,
விடிந்த பொழுதினிலும்,
புரியாமல் வருகின்ற,
கனவுகள் ஏராளம்!

கண்ணுறங்கும் நிமிடம் மட்டும்
வருவதில்லை கனவுகள்.
காத்திருக்கும் நொடிகளில்,
காணாத ஏக்கத்தில்,
எண்ணும்பொருள் ஏதுமின்றி பிறந்துமடியும் கனவுகள்,
தினம் தினம் ஏராளம்.

அன்றொருநாள் அப்படித்தான்,
நல்லதொரு கனவுகண்டேன்.
சாலை ஓரமாக,
சத்தமின்றி நடந்திருந்தேன்.
வருடிய தென்றலில் உள்ளம் சில்லிட்டது!

பிளாஸ்டிக் இல்லாத தெருக்கள்,
பிளவுகள் இல்லாத சாலைகள்.
ஆட்கள் நிறைந்தபோதும்,
கூச்சல் இல்லை அங்கு!

என் நாட்டை சுற்றிப் பார்த்திட-இங்கு
ஏராளப் பயணிகள்.!
சுயவேலைகள் பெருக்கியதில்,
குறைந்த விலைகளால்-குறைவில்லா வாழ்க்கை!


எல்லோரும் ஓர் நிறை!
என் நாட்டில் இன்று,
சுற்றுலாஅமைச்சருக்கும் நுழைவுச்சீட்டு கேட்கப்படுகிறது!
நடிகர் நடிகை மோகம் சுவடின்றி ஒழிந்திருக்கிறது.

சாதிச் சண்டைகளோ,
கொலை,குற்றச் செய்திகளோ,
சீர்கெட்ட நடிகையின் நடுப்பக்கப் படங்களோ,
நிச்சயமாய் இல்லை,
என் கையில் உள்ள நாளிதழில்.

ஒப்பற்ற என் நாடு,
ஒளிர்கிறது இன்று,
சத்தமின்றி வாழும் இந்தச் சராசரி இந்தியனின்
நம்பிக்கை நிறைந்த –ஒரு
நள்ளிரவுக் கனவினில்....!

- ராஜ்குமார்

படித்ததில் பிடித்தது 12-கழுதை வாத்து கதை!


ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தது. வாத்துக்கள் எல்லாம் கூட்டமாக வெள்ளத்தில் நீந்தியபடி, இரை தேடிக் கொண்டிருந்தன.
ஆற்றங்கரையில் கழுதைகளும் கூட்டமாக நின்று கொண்டு, புற்களை மேய்ந்து கொண்டி ருந்தன. அந்தக் கழுதைகள் வாத்துக்களை நோக்கின.
""நண்பர்களே! நம்மை விட உருவத்தில் சிறிய இந்த வாத்துக்கள் என்ன மாதிரி தண்ணீரில் நீந்துகின்றன. அவைகள் எல்லாம் தண்ணீருக்குள் மூழ்கியபடி சாகசத்தை நடத்துகிறதே! நம்மால் இந்த அளவுக்குத் தண்ணீரில் இறங்கி சாகசங் களைச் செய்ய முடிய வில்லையே!'' என்று கவலையுடன் கூறியது ஒரு கழுதை.

அதைக் கேட்ட மற்ற கழுதைகளும், ""ஆமாம் நண்பனே! நீ சொல்வ தெல்லாம் உண்மைதான். அதில், எந்தவிதமான மாற்றமும் இல்லை. வாத்துக்கள் எல்லாம் மகிழ்ச்சியோடுதான் வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கின்றன. ஒன்றையொன்று தண்ணீருக்குள் நீந்தியபடி கலகலப்பாக வாழ்க்கை நடத்திக் கொண்டிருக் கின்றன. நாமும் அந்த வாத்துக்களைப் போன்று வாழ வேண்டும்! அதற்கு என்ன செய்யலாம் என்பதை சேர்ந்து முடிவெடுப்போம்!'' என்றது.
"நண்பர்களே! இது நல்ல யோசனைதான். நாம் வாத்துக்களைப் போல தண்ணீரில் நீந்த வேண்டுமென்றால், நமக்கு இறக்கைகள் முளைக்க வேண்டும். இறக்கைகள் மட்டும் நமக்கு முளைத்து விட்டால், நாம் வாத்துக் களைப் போன்று பறக்கலாம்; தண்ணீரிலும் நீந்தலாம்,'' என்றது ஒரு கழுதை.
மற்றொரு கழுதையோ அதை மறுத்தது.

"நண்பர்களே! நான் ஒரு போதும் இதற்கு ஒத்துக்கொள்ள மாட்டேன். நமக்கு இறக்கை கள் முளைத்து விட்டால் மட்டும் நாம் பறந்து விட முடியாது. நாம் வாத்துக்களைப் போன்று குள்ள உருவமாக மாறவேண்டும். இன்னும் சொல்லப் போனால், நாம் வாத்துக்களாக மாறி விட வேண்டும். அப்போதுதான் நாம் வாத்துக் களுக்கு இணையாக தண்ணீரில் நீந்தியபடி சாகசங்களை நிகழ்த்திக் காட்ட முடியும். அந்த வாத்துக்களுக்குப் போட்டியாக நம்முடையத் திறமைகளை எல்லாம் வெளிப்படுத்த முடியும்!'' என்றது.
அந்தக் கழுதையின் கருத்தை எல்லா கழுதைகளும் ஒரு மனதாக ஏற்றுக் கொண்டன.

"நண்பனே! நீ சொல்வது சரி! நீ கூறியதில் ஆழமான கருத்தும் இருக்கிறது. நாம் வாத்துக் களாக மாறி விட்டால், நாம் நினைப்பது எல்லாம் எளிதாக முடிந்து விடும். அதன் பின்னர் நமக்கு எந்தக் கவலையும் இல்லை. ஆனால், நாம் வாத்துக்களாக மாற என்ன செய்ய வேண்டும்? அதனைப் பற்றியும் நீயே ஒரு கருத்தினைத் தெரியப்படுத்து. அந்தக் கருத்துக்களின்படியே நாங்கள் எல்லாரும் நடந்து கொள்கிறோம்,'' என்றது.

உடனே அந்தக் கழுதையும் சிறிது நேரம் யோசனையில் ஆழ்ந்தது. பின்னர் மற்றக் கழுதைகளை நோக்கியது.

"நண்பர்களே! நான் சொல்வதை கவனமாக கேட்டுக் கொள்ளுங்கள். நாம் அனைவரும் இந்த ஆற்றங்கரையில் அமர்ந்து ஆண்டவனை நினைத்து தவம் இருப்போம்! நாம் எல்லாரும் ஒரு மனதாக ஆண்டவனைக் குறித்து தவம் இருந்தோமானால் நம்முடைய தவத்திற்கு மனமிரங்கி, ஆண்டவன் நம் முன்னே வருவார். உடனே, நாம் அவரிடம், "ஆண்டவா! ஆண்டவா! நாங்கள் எல்லாரும் வாத்துக்களாக இருக்க வேண்டும். எங்களது கழுதை வடிவத்தை தவிர்த்து, நாங்கள் எல்லாரும் வாத்துக்களாக மாற வேண்டும். உடனே எங்களை வாத்துக்களாக மாற்றிவிடு' என்று ஆண்டவனை வேண்டுவோம்.
"நாம் அவ்வாறு ஆண்டவனை வேண்டுகிற நேரத்தில், அவரும் மனம் இரங்கி, நமக்கு உதவிகளைச் செய்வார். நாமும் மகிழ்ச்சியோடு வாத்துக்களாக உருவம் மாறிக் கொள்ளலாம்,'' என்றது.

அந்தக் கழுதையின் யோசனையைக் கேட்டு, மற்ற கழுதைகள் எல்லாம், "ஆஹா அற்புதம்... அற்புதம்!'' என்று புகழத் தொடங்கின.

உடனே எல்லாக் கழுதைகளும் அமைதி யோடு வானத்தைப் பார்த்தபடி, ஆண்டவனை வேண்டத் தொடங்கின.

நீண்ட நேரமாக தங்களின் கால்களின் வலியைப் பொருட்படுத்தாமல், ஆகாயத்தைப் பார்த்துக் கொண்டிருந்தன.

தண்ணீரில் நீந்திக் கொண்டிருந்த வாத்துக் களோ கழுதைகளின் செயல்களை கவனித்தன.

"நண்பர்களே! அங்கே பாருங்கள் அந்தக் கழுதைகள் எல்லாம் கூட்டமாக ஒற்றுமையுடன் வானத்தை நோக்கிப் பார்த்தவாறு நின்று கொண்டிருக்கின்றன,'' என்றது ஒரு வாத்து.

"நண்பர்களே! கழுதைகள் அழகாக இருப்பது உண்மைதான். அவை உடலெங்கும் ரோமங்கள் அடர்ந்து காணப்படுகின்றன. அது மட்டுமில்லாமல் அவைகள் நம்மை விட அளவில் உயரமாகக் காணப்படுகின்றன. அவைகளுக்கு நீண்ட வெள்ளை மூக்கு இருக்கிறது. முடிகள் எல்லாம் அடர்த்தியாக இருக்கிறது. வால் ஒன்று பட்டுக் குஞ்சலம் போன்று பின்புறம் தொங்கிக் கொண்டிருக் கிறது. அது மட்டுமில்லாமல், அவைகளுக்கு நான்கு கால்கள் இருக்கின்றன... அடேயப்பா! இந்தக் கழுதைகளின் அழகை நாம் வர்ணித்துக் கொண்டே இருக்கலாம் போன்று தோன்று கிறதே!'' என்று கூறியது மற்றொரு வாத்து.

"பிறந்தால் இந்தக் கழுதைகளைப் போன்று பிறக்க வேண்டும். இப்படி நாம் வாத்துக் களாக வாழ்ந்து தண்ணீரிலேயே துன்பப்பட்டபடி காலத்தை ஓட்டிக் கொண்டி ருக்கிறோமே!'' என்று கவலையுடன் கூறியது இன்னொரு வாத்து.
"நண்பர்களே! நாம் எல்லாருமே நம்மை நினைத்து கவலைப்பட்டுக் கொண்டிருக் கிறோம்! அந்தக் கவலைகளில் இருந்து நாம் விடுபட வேண்டுமானால் நாம் கழுதைகளாக உருவம் மாற வேண்டும்,'' என்றது ஒரு வாத்து.

"நண்பர்களே! நாம் கழுதைகளைப் போல உருவம் மாற ஆண்டவனை வேண்டினால் போதும். நாம் எல்லாரும் ஒற்றுமையுடன் நமது பிரார்த்தனையை ஆண்டவனிடம் தெரியப்படுத்தினால் அவர் நிச்சயமாக நமக்கு அருள் தருவார். நாமும் நம்முடைய விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ளலாம்,'' என்றது வேறொரு வாத்து.
உடனே எல்லா வாத்துக்களும் ஆண்டவ னிடம் தங்களது பிரார்த்தனையைத் தெரியப் படுத்த வேண்டும் என்று முடிவு செய்தன.

வாத்துக்கள் எல்லாம் தண்ணீரை விட்டு கரையேறிக் கொண்டன.
கரையில் நின்றபடி எல்லா வாத்துக்களும் தங்களது பிரார்த்தனையை ஆண்டவனிடம் தெரியப்படுத்த வானத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தன.

அந்த நேரத்தில் ஆற்றங்கரையில் ஆமை ஒன்று மெல்ல, மெல்ல ஊர்ந்து வந்து கொண்டிருந்தது.
அந்த ஆமையானது கழுதைகளின் அருகே வந்தது. ஏன் எல்லாரும் ஒன்று சேர்ந்தபடி ஆகாயத்தையேப் பார்த்துக் கொண்டிருக் கிறீர்கள்?'' என்று கேட்டது ஆமை.

"ஆமையே! நாங்கள் எல்லாரும் ஆண்டவன் எப்போது வருவார் என்று ஆகாயத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக் கிறோம். நாங்கள் எல்லாரும் வாத்துக்களைப் போன்று உருவம் மாறலாம் என்று முடிவு செய்துள்ளோம்,'' என்றது ஒரு கழுதை.

அதனைக் கேட்ட ஆமை, "" நீங்கள் ஏன் வாத்துக்களைப் போன்று உருவம் மாற வேண்டும்?'' என்று கேட்டது.

"ஆமையே! எங்களால் தண்ணீரில் நீந்தி விளையாட முடியவில்லை. நாங்கள் வாத்துக் களைப் போன்று உருவம் மாறிக்கொண்டால், தண்ணீரில் நீந்தி விளையாடலாமே! அதனால் தான் வாத்துக்களைப் போன்று உருவம் மாறிக் கொள்ள வேண்டும் என்று நாங்கள் எல்லாரும் கடவுளைக் காண வேண்டி வானத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்,'' என்றன கழுதைகள்.

"கழுதைகளே நீங்கள் வாத்துக்களைப் போன்று இருக்க வேண்டும் என்று ஆண்ட வனைக் குறித்து தவம் இருப்பதைப் பார்க்கிற போது எனக்கு மிகவும் வேடிக்கையாகத்தான் இருக்கிறது,'' என்றபடி கூறிக்கொண்டு சென்றது ஆமை.
பின்னர் அது மெல்ல, மெல்ல வாத்துக் களின் அருகே நகர்ந்து வந்தது.
"வாத்துக்களே! நீங்களும் கழுதைகளைப் போன்று வானத்தைப் பார்த்துக் கொண்டிருக் கிறீர்கள்! எதனால் இப்படி இருக்கிறீர்கள்? கழுதைகளோ உங்களைப் போன்று மாற வேண்டும் என்று கடவுளை வேண்டிக் கொண்டிருக்கின்றன. நீங்கள் யாரைப் போன்று மாற வேண்டும் என்று வானத்தைப் பார்த்தபடி இருக்கிறீர்கள்?'' என்று கேட்டது ஆமை.
" நாங்கள் கழுதைகளைப் போன்று உருவம் மாறிக் கொள்ள வேண்டும் என்று கடவுளைக் குறித்து வேண்டுகிறோம்!'' என்றது ஒரு வாத்து.

அதைக் கேட்ட ஆமைக்கு சிரிப்பு வந்தது.

"வாத்துக்களே! நீங்கள் எல்லாரும் கழுதையைப் போன்ற உருவம் மாற வேண்டும் என்று ஆண்டவனிடம் வேண்டிக் கொண்டிருக் கிறீர்கள்! கழுதைகளோ உங்களைப் போன்று உருவம் மாறிக்கொள்ள வேண்டும் என்று வேண்டிக் கொண்டிருக்கிறது. நீங்கள் உங்களின் அருமையை உணர்ந்து கொள்ளாமல், ஒருவரையொருவர் உருவம் மாற வேண்டும் என்று நினைக்கிறீர்கள்! ஒருவருக்கொருவர் அறியாமலேயே இதனை செய்து கொண்டிருக்கிறீர்கள். முதலாவதாக, நீங்கள் உங்கள் பிறப்பின் உருவத்திற்கு மதிப்புக் கொடுங்கள். உங்களை நீங்களே மதியுங்கள்!'' என்று கூறியபடி சென்றது ஆமை. ஆமையின் கருத்தைக் கேட்ட வாத்துக்கள், தங்கள் தவறை உணர்ந்தன. உடனே அவைகள் எல்லாம் கழுதை களிடம் வந்தன. கழுதைகளிடமும் ஆமை கூறிய கருத்தினை தெரியப்படுத்தின. வாத்துக்களும், கழுதைகளும் தங்களின் தவறை உணர்ந்து தெளிவடைந்தன. அதன் பின்னர் இப்படிப்பட்ட முட்டாள் தனமான எண்ணங்களுக்கு இடம் கொடுக்கவில்லை.

- தினமலர்

Wednesday, October 15, 2014

படித்ததில் பிடித்தது 11 - சிறிய தூண்டில்

நம் நாட்டிலிருந்து வெளிநாட்டுக்கு வேலை தேடிச் சென்றார் ஒருவர்.
அங்கே ஒரு விற்பனை நிலையத்தில்....


"சேல்ஸ் துறையில் உனக்கு முன் அனுபவம் இருக்கிறதா?" மேனேஜர் கேட்க,
"நான் எனது நாட்டில் சேல்ஸ்மேனாகத்தான் வேலை பார்த்தேன்" என்றார் நம்மாளு.

"அப்படியானால் உனக்கு நான் வேலை தருகிறேன். நாளை முதல் நீ வேலையைத் தொடங்கலாம். கடை மூடும்பொழுது நீ எப்படி வேலை பார்த்தாய் எனப் பார்ப்பதற்கு நான் வருவேன்"

முதல் நாள் கடை மூடும் நேரம் மேனேஜர் வருகிறார்.
"இன்று எத்தனை நபர்களிடம் சேல்ஸ் செய்தாய்?"

"ஒருவரிடம் மட்டும்…"

"என்ன ஒருத்தர் மட்டுமா? ... உன்னுடன் வேலை பார்க்கும் மற்றவர்களெல்லாம் நாள் ஒன்றுக்கு 20லிருந்து 30 வரை செய்யக் கூடியவர்கள். உன் வேலை நிரந்தரமாக வேண்டுமானால் நீயும் இவர்களைப் போல் முயற்சி செய்ய வேண்டும். சரி எவ்வளவு டாலருக்கு விற்றாய்?"

"$1012347.64"

"ஒரே ஒரு நபரிடம் இவ்வளவு டாலருக்கா? என்னென்ன விற்றாய்?"

"முதலில் அவரிடம் சிறிய தூண்டில்,
கொஞ்சம் பெரிய தூண்டில்,
அதைவிடப் பெரிய தூண்டில்,
ஃபிஷிங் ராட்,
ஃபிஷிங் கியர் எல்லாம் விற்றேன்.
பிறகு அவரிடம் “எங்கே மீன் பிடிக்கிறீர்கள்?” என்று கேட்டேன்.

அவர் கரையில் அமர்ந்து மீன் பிடிப்பதாகச் சொன்னார். உடனே நமது போட்டிங் டிபார்ட்மெண்ட் சென்று ஒரு போட்டை விற்றுக் கொடுத்தேன். அவர் என்னுடைய கார் இந்த போட்டை இழுக்குமா எனத் ன்று தெரியவில்லையே என்றார். நான் நமது ஆட்டோமோடிவ் டிபார்ட்மெண்ட் சென்று ஒரு 4x4 ட்ரக் விற்றுக் கொடுத்தேன். 

பின்னர் அவரிடம் நீங்கள் எங்கு தங்கியிருக்கிறார் எனக் கேட்டேன். இப்போதைக்கு இடம் எதுவும் இல்லை என்று சொன்னார். உடனே நான் அவருக்கு 4 பேர் தங்கக் கூடிய அளவுள்ள “டெண்ட்” –ம் விற்றுக் கொடுத்தேன்"
"என்ன ஒரு தூண்டில் வாங்க வந்தவரிடமா இவ்வளவும் விற்றாய்?"

மேனேஜர் அதிசயமாய்க் கேட்க, நம்மாளு சொன்னார்,

"அய்யோ! இல்லை சார்! அவர் தலைவலிக்காக அனாசின் மாத்திரை வாங்க வந்தார். நான்தான் மீன் பிடித்தால் மனசுக்கு ரொம்ப ரிலாக்ஸ் - ஆக இருக்கும். எப்போதும் உங்களுக்குத் தலைவலியே வராது என்று கூறினேன்"

--இணையத்திலிருந்து

Friday, September 19, 2014

தெரிந்து கொள்ளுங்கள் !

• நாம் இறந்த பிறகும் கண்கள் 6 மணிநேரம் பார்க்கும் தன்மையுடையது.

• சுகபிரசவம் அல்லாமல் தன் தாயின் வயிற்றில் இருந்து கிழித்து வெளியே எடுக்கப்பட்டவர் ஜூலியஸ் சீசர். அதனால்தான் இந்த முறைக்கு ‘சீசரியன்’ என்று பெயர் வந்தது.
•பிறந்து ஆறுமுதல் எட்டு வாரங்கள் வரை குழந்தைகள் அழுதால் கண்ணீர்வராது.
•  நான்குவயது குழந்தைகள் ஒருநாளைக்கு சுமார் 400 கேள்விகள் கேட்கும்.
• கருவில் முதன்முதலில் உருவாகும் உறுப்பு இதயம்.மனிதன் இறந்து போனதும் முதலில்செயலிழக்கும் உறுப்பு - இதயம்.

• மனித உடல்களில் சுமார் 6 கோடியே 50 லட்சம் செல்கள் இருகின்றன.
• ஒரு தலைமுறை என்பது 33 ஆண்டுகள்.

•மார்க்கோபோலோ என்கிற சிகரெட்நிறுவனத்தின் முதல்உரிமையாளர் நுரையீரல் புற்றுநோய்தாக்கி இறந்துப்போனார்.
• பழமரங்களில் நீண்டகாலம் விளைச்சல் தருவது ஆரஞ்சுமரம். சுமார் 400 ஆண்டுகளாக தொடர்ந்துஅது விளைச்சல் தரும்.


• ஒருதர்பூசணிபழம் இருந்தால் அதில் இருந்து 6 லட்சம்தர்பூசணிபழங்களை உற்பத்தி செய்துவிடலாம்.

• பொதுவாக தாவரங்கள்நகராது. ஆனால் கிலாமிடோமொனாஸ் என்றஒருசெல்தாவரம் நகர்ந்துபோகும் தன்மைஉடையது.
• பச்சோந்தியின் நாக்கு தன் உடலின் நீளத்தை விட இரண்டு மடங்குஅதிகமாகஇருக்கும்.

• நாக்கை நீட்டமுடியாதஒரே விலங்கு முதலை.

• நீலதிமிங்கலத்தின்எடை 22 யானைகளின் எடைக்கு சமம். அதன்இதயம்ஒருசிறியகார் அளவில் இருக்கும்.
• யானையின் கால்தடத்தின் நீளம் அளந்து, அதை ஆறால் பெருக்கி வரும் விடையே - யானையின்உயரம்.

• ஒருபுள்ளி அளவு இடத்தை 70,000 (எழுபதாயிரம்) அமிபாக்களால் நிரப்பமுடியும்.

• தரையில் முதுகுபடும்படி உறங்கும் ஒரேஉயிரினம் - மனிதன்.

•முன்னால் பின்னால் பக்கவாட்டில் என அனைத்து பக்கங்களிலும் பறக்க முடிந்தபறவை - தேன்சிட்டு.
• தேன்சிட்டு, மரங்கொத்தி, போன்றபறவைகளுக்கு நடக்கத்தெரியாது.

Friday, June 27, 2014

வாழ்க்கை என்னும் பரிசு!


ஒரு போட்டியில் உங்களுக்கு ஒரு பரிசு கிடைத்திருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள்.

பரிசு என்னவென்றால்,ஒவ்வொரு நாள் காலையிலும் உங்கள் வங்கிக் கணக்கில் 86,400 ரூபாய் உங்கள் சொந்த செலவுக்காக வரவு வைக்கப்படும்.

ஆனால் இந்தப் பரிசுக்கு சில நிபந்தனைகள் உண்டு.

அவை :
1) அந்த நாளில் நீங்கள் செலவு செய்யாத பணம் உங்கள் கணக்கிலிருந்து எடுக்கப்பட்டுவிடும்.
2) உங்கள் பணத்தை நீங்கள் வேறு கணக்கிற்கு மாற்ற முடியாது.
3) அதை செலவு செய்ய மட்டுமே உங்களுக்கு உரிமை உண்டு
4) ஒவ்வொரு நாளும் விடியும்போது உங்கள் வங்கிக் கணக்கில் அந்த நாளின் செலவிற்காக 86400 ரூபாய் வரவு வைக்கப்படும்
5) எப்போது வேண்டுமானாலும் வங்கி இந்த ஆட்டத்தை முன்னறிவிப்பு இல்லாமல் நிறுத்திக்கொள்ளலாம்.
6) வங்கி - "முடிந்தது கணக்கு" என்று சொன்னால் அவ்வளவுதான். வங்கிக் கணக்கு மூடப்படும், மேற்கொண்டு பணம் வரவு வைக்கப்படமாட்டாது.
 

 இப்படி இருக்கும் பட்சத்தில் நீங்கள் என்ன செய்வீர்கள்?
உங்களுக்கு பிடித்த எல்லாம் வாங்குவீர்கள் இல்லையா?
உங்களுக்கு மட்டுமல்லாமல் உங்கள் மனதுக்கு பிடித்தவர்களுக்கும் வாங்கித்தருவீர்கள் இல்லையா? உங்களுக்கு முன்பின் அறிமுகம் இல்லாதவர்களுக்காகவும் செலவு செய்வீர்கள்.


ஏனென்றால் அவ்வளவு பணத்தையும் உங்களுக்காக மட்டுமே செலவு செய்வது சாத்தியமில்லை என்பதால் - அப்படித்தானே? முடிந்தவரை ஒவ்வொரு ரூபாயையும் எப்படியாவது செலவு செய்து உபயோகிப்பீர்கள்தானே?

உண்மையில் இது ஆட்டமில்லை - நிதர்சனமான உண்மை!!

ஆம் ..

நம் ஒவ்வொருவருக்கும் இப்படியான ஒரு வங்கிக் கணக்கு இருக்கிறது. நாம் தான் அதை கவனிக்கவில்லை.அந்த ஆச்சரிய வங்கிக்கணக்கின் பெயர் - காலம்.


ஒவ்வொரு நாள் காலையும் நாம் எழுந்திருக்கும் போது வாழ்க்கையின் அதியுன்னத பரிசாக 86400வினாடிகள் நமக்கு வழங்கப்படுகிறது.
இரவு தூங்கப் போகும் போது நாம் மிச்சம் வைக்கும் நேரம் நமக்காக சேமித்து வைக்கப் படுவதில்லை.
அன்றைய பொழுது நாம் வாழாத வினாடிகள் தொலைந்தது தொலைந்தது தான்.நேற்றைய பொழுது போனது போனது தான். 


ஒவ்வொரு நாள் காலையிலும் புத்தம் புதிதாக நம் கணக்கில்
86400நொடிகள். எச்சரிக்கையே இல்லாமல் எப்போது வேண்டுமானாலும் வங்கி உங்கள் கணக்கை முடக்க முடியும். அப்படியிருக்கும் பட்சத்தில் நீங்கள் என்ன செய்வீர்கள்? 


உண்மையில் 86400வினாடிகள் என்பது அதற்கு சமமான அல்லது அதற்கும் மேலான பணத்தை விடவும் மதிப்பு வாய்ந்தது அல்லவா?
இதை ஞாபகம் வைத்துக்கொண்டால் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் நாம் கொண்டாடிக் கழிக்க மாட்டோமா? காலம் நாம் நினைப்பதை விட வேகமாக ஓடிவிடும். 


எனவே உங்களைப் பொன் போல பேணுங்கள் - சந்தோஷமாக இருங்கள் - சுற்றியுள்ளவர்களை ஆழமாக நேசியுங்கள் - வாழ்க்கையைக் கொண்டாடுங்கள்.

படித்ததில் பிடித்தது 10 - கடவுள் கதைகள்

1.கடவுளின் மனைவி


குளிர் நிரம்பிய பொழுதொன்றில் காலணிகள் கடையின் ஜன்னல் வழியே ஏக்கத்துடன் காலணிகளைப் பார்த்துக் கொண்டிருந்த சிறுவனின் தோளில் கரமொன்று படிந்தது.

புன்னகை முகத்துடன் பெண்மணி ஒருவர், “என்ன பார்க்கிறாய்” என்று கேட்டார்.

“எனக்கு ஒரு ஜோடி காலணிகள் தருமாறு கடவுளைக் கேட்டுக்கொண்டிருந்தேன்”.

சிறுவனை உள்ளே தூக்கிச் சென்ற பெண்மணி, புழுதி படிந்த அவனுடைய பிஞ்சுப் பாதங்களைக் கழுவி, பொருத்தமான காலுறைகளையும் காலணிகளையும் தேர்ந்தெடுத்து அணிவித்தார்.

தான்தான் கடை உரிமையாளர் என்பதை சிறுவன் யூகித்திருப்பான் என்று நம்பி , “நான் யார் தெரியுமா!” என்றார்.

சிறுவன் சொன்னான். “தெரியுமே! நீங்கள்தான் கடவுளின் மனைவி!!”

கனிவை வெளிப்படுத்தும் போதெல்லாம் கடவுளாகிறோம்.


2. ஆப்பிள் கடவுள்


நர்சரி பள்ளி ஒன்றின் உணவறையில் ஒரு கூடை நிறைய ஆப்பிள்கள் வைக்கப்பட்டிருந்தன.

 அந்தக் கூடையின் மேல், "ஒன்றுக்கு மேல் எடுக்காதீர்கள்;
கடவுள் பார்த்துக்கொண்டிருக்கிறார்" என எழுதி இருந்தது.

சற்று தொலைவில் ஒரு பெட்டி நிறைய சாக்லேட்டுகள் வைக்கப்பட்டிருந்தன.


அந்தச் சாக்லேட் பெட்டியின் மீது ஒரு குழந்தை பின்வருமாறு எழுதியது:
'எவ்வளவு வேண்டுமோ எடுத்துக்கொள்ளுங்கள்; கடவுள், ஆப்பிளைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்!'

Monday, April 28, 2014

படித்ததில் பிடித்தது 9 - எதற்கும் கவலை கொள்ளாதே! (குட்டிக்கதை)



ஒரு ஊரில் பல ஆண்டுகளாக வயல்களில் ஒரு வயது முதிர்ந்த விவசாயி வேலை செய்து கொண்டிருந்தார். அவர் தனது வீட்டில் ஒரு குதிரையை வளர்த்து வந்தார். ஒரு நாள் அந்த குதிரை எங்கேயோ ஓடி போய்விட்டது. அந்த விஷயத்தை அறிந்த அக்கம் பக்கத்தினர் அவரிடம் சென்று, "என்ன ஒரு கெட்ட அதிர்ஷ்டம்!" என்று கனிவோடு பேசினர். அதற்கு அந்த விவசாயி "ம்..அப்படிக் கூட இருக்கலாம்" என்று சொன்னார்.


மறுநாள் காலையில் ஓடிப் போன அந்த குதிரை திரும்ப வந்துவிட்டது. ஆனால் வரும் போது மூன்று குதிரைகளோடு வந்தது. அதை அறிந்தவர்கள், அவரிடம் "எவ்வளவு அற்புதம்.அதிர்ஷ்டக்காரன் நீ" என்று ஆச்சரியத்தோடு வந்து பேசினர். அதற்கும் அவர் "இருக்கலாம்" என்று கூறினார்.


அடுத்த நாள் அந்த விவசாயி மகன் அந்த குதிரையின் மீது சவாரி செய்ய ஆசைப்பட்டு, குதிரையின் மீது ஏறினான். ஆனால் அந்த குதிரையோ அவனை கீழே தள்ளிவிட்டது. அதனால் அவனது கால் உடைந்துவிட்டது. உடனே பக்கத்து வீட்டுக்காரர்கள், அவரிடம் மறுபடியும் கனிவோடு பேசினர். அதற்கும் அவர் அதே பதிலைச் சொன்னார்.


மறுநாள் இராணுவ அதிகாரிகள் அந்த கிராமத்திற்கு இளைஞர்களை அழைத்து செல்ல வந்தனர். அப்போது கால் உடைந்த அந்த இளைஞனை மட்டும் விட்டுவிட்டுச்  அழைத்துச் சென்றனர் . உடனே அக்கம்பக்கத்தினர் அந்த அவரிடம் வந்து "என்ன பாக்கியம் செய்தீர்களோ உங்கள் மகனை விட்டு சென்றுவிட்டனர்" என்று கூறி வாழ்த்துக்களை தெரிவித்தனர். அதற்கும் அந்த விவசாயி "இருக்கலாம்" என்றே கூறினார்.


நீதி:

"எது வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் நடக்கும். எனவே எதற்கும் கவலை கொள்ளாமல் எல்லாம் நன்மைக்கே என்று ஏற்றுக் கொள்ளும் மனநிலையே நிம்மதியான வாழ்க்கையின் அடிப்படையாகும்!"

Tuesday, March 11, 2014

உயிரான உணர்வுகள்!

( உயிர் எழுத்துகளைக் கொண்டு துவங்கப்பட்ட உண்மை வரிகள்!)




           வளைப்பற்றி எழுதும் முதல் வரியை கற்பனையில் பார்க்கின்றேன்.அதன் பொருள்செறிந்த வார்த்தைகளில் லயித்துவிடுகின்றேன்.அதனைப் படித்துமுடித்து இரண்டாம் வரியை என் பார்வை தீண்டுகையில்,மொத்த வார்த்தைகளும் வரிசை தெரியாமல் மறைந்துவிடுகின்றன.அழியாத நினைவுகளை,உன்னத உணர்வுகளை எழுத்தாய் தீட்டி வைப்பது கடினம்தான்.

           துவரையில் பேசிய வார்த்தைகள் இரண்டோ மூன்றோதான் இருக்கும்.நேராய் அவள்முகத்தை பார்த்தது கிடையாது.சிலநேரம் கண்கள்,சிலநேரம் அவள் புன்னகை.அவ்வளவுதான்.அவளைப்பற்றி எழுதத் துவங்கி இன்றோடு ஆறுமாதங்கள் நிறைவடைகின்றன.அவ்வப்போது ஒரு வரிக்கவிதை எட்டிப்பார்க்கும்.எழுதிக்கொள்வேன்.


           தயம் விரைவாய்த்துடித்தது,மூச்சு திக்கித்திணறியது என்று சொல்வது உயர்வுநவிற்சி என நினைத்தால்கூட,உண்மை அதுவே.அந்த முதல் சந்திப்பை என்றும் மறக்க முடியாது.அன்று இரண்டொரு வார்த்தைகள்.கொஞ்சம் புன்னகை.ஆறுதலாய் அவள் பார்வை.


           ன்றைய என் பயணம்கூட புதிதாய் இருந்தது.பார்க்கும் மனிதர்களும் விந்தையாய்த் தெரிந்தனர்.கனவில் மிதந்தபடி இல்லம் சேர்ந்தேன்.அன்று இரவுத் தூக்கம் தொலைத்து,அவளுடனான கற்பனை உரையாடல்களை அரங்கேற்றம் செய்துகொண்டிருந்தேன்.முதல் வரிசையில் அமர்ந்து முழுதாய் ரசித்தவனும் நான் தான்.


           வள் எப்படிப்பட்டவள்?அவளின் கனவுகள் எதைப்பற்றியது?என்ன நினைக்கிறாள் என்னைப் பற்றி?இப்படி பதில் தெரியாத ஆயிரம் கேள்விகள்,தினமும் அவளைப் பார்க்கும் நொடிப்பொழுதில் மின்னி மறைகின்றன.


ராஜ்குமார்...
(29-jul-13)

Friday, February 28, 2014

படித்ததில் பிடித்தது 8 - உயிர் உடைத்த புகைப்படம்!


புலிட்சர் விருதின் (Pulitzer Prize) வாயிலாக உலகப் புகழ்பெற்ற இந்தப் படத்தை எடுத்த கெவின் கார்ட்டர் (Kevin Carter-[1960-1994]) தற்கொலை செய்து கொண்டார். ஏன்?

கெவின் கார்ட்டர்- தென்னாப்பிரிக்காவின் அழகிய ஊரான ஜோஹன்ஸ்பர்க்கைச் சேர்ந்தவர். உலகப் புகழ்பெற்ற புகைப்படக்காரர். எல்லா சிறந்த புகைப்படக்காரர்களைப் போன்றே இவருக்கும் நல்ல புகைப் படங்களை எடுக்க வேண்டுமென்ற ஆசையும் ஆர்வமும் இருந்தன. இந்த ஆர்வம் அவரை நாடு,நகரம்,கிராமம்,காடு, மலை என்று கொண்டு சென்றது.

 
 1993 இல் இந்த ஆர்வம் அவரைத் தனது சக புகைப்படப் பத்திரிக்கையாளர்களுடன் சூடானுக்குக் கொண்டு சென்றது. அப்போது சூடான் வரலாறு காணாத பஞ்சத்தில் சிக்கித் தவித்துக் கொண்டு இருந்தது.

குறிப்பாக சூடானின் தென்பகுதி மக்கள் உண்ண உணவின்றி, பருகநீரின்றி பசி, தாகத்தில் தவித்துக் கொண்டிருந்தனர்.

பசி பஞ்சத்தில் தவிக்கும் மக்களின் நிலைகளைக் காமிராவில் பதிவு செய்ய கெவின் தொலைதூர கிராமங்கள் வரை சென்றார்.

இறுதியாக அவர் முயற்சி கைகூடியது. ஒரு நாள் தன் காமிராவை தோளில் தொங்க விட்டுக் கொண்டு உள்ளத்தை உலுக்கக் கூடிய படத்துக்கான காட்சியைத் தேடியலைந்து கொண்டிருந்தபோது அப்படிப்பட்ட காட்சி தென்பட்டது அவரது நற்பேறு என்றுதான் கூற வேண்டும்.

பசி பஞ்சத்தால் அடிபட்ட நோஞ்சன் நிலையில் உள்ள ஒரு சிறுமி நடக்கக் கூட இயலாத நிலையில், எலும்புக் கூடு போன்ற தன்னுடலை தவழ்ந்து இழுத்துக் கொண்டு மெல்ல மெல்ல ஊர்ந்து செல்வதைக் கண்டார்.

அந்தச் சிறுமி ஐக்கிய நாடுகளின் சபையின் சார்பாக அமைக்கப்பட்டு இருந்த உணவு வழங்கும் முகாமை நோக்கி தள்ளாடியபடி தவழ்ந்து கொண்டிருந்தது உண்மையிலேயே இதயத்தைப் பிழியக் கூடியதாக இருந்தது.

தோளில் இருந்து காமிராவை இறக்கி கோணம் பார்த்த கெவினுக்கு இன்னொரு வியப்பும் காத்திருந்தது.

ஆம்; அந்த எலும்பும் தோலுமான சிறுமிக்கும்ப் பின்னாலேயே சிறிது தொலைவில் ஒரு பிணம் தின்னிக்கழுகும் சிறுமியின் மீது பார்வையை நிலை நிறுத்திக் கொண்டு இருந்தது.

எப்போது சிறுமியின் உடலை விட்டு உயிர் பிரியும்; மீதியுள்ள அந்தத் தோலையும் அதைச் சுற்றி இருக்கும் சிறிது மாமிசத்தையும் எப்போது சாப்பிடலாம் எனக் காத்திருந்தது பிணம் தின்னிக்கழுகு.

கெவின் கேமரா லென்சை கண்ணுக்கு ஒத்திக் கொண்டார்.
ழுகு தன் இறக்கையை விரிக்குமென கார்ட்டர் 20 நிமிடம் காத்திருந்தார். அது விரிக்கவில்லை. எனவே குழந்தையும் கழுகும் இடம்பெறும் வகையில் இக்கோரக்காட்சியைப் புகைப்படமாக எடுத்துவிட்டுக் கழுகை விரட்டினார்.

இப்போது அவரது புகைப்படக்கருவியில் மிக அரிதினும் அரிதான படம் பதிவாகி விட்டது.

இதை விற்றால் நல்ல விலை கிடைக்கும் என்ற மகிழ்ச்சியில் காமிராவைத் தோளில் மாட்டிக் கொண்டு தனது வண்டியை ஸ்டார்ட் செய்தார்; பறந்து விட்டார். இந்த அரிதான படத்தை ‘நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிக்கைக்கு விற்று விட்டார்.

இந்தப் புகைப்படம் 1993 மார்ச் திங்கள் 26 ஆம் நாள் காலை நாளிதழில் முதல் பக்கத்தில் வெளியானது. இந்தப் படத்தைப் பார்த்ததும் ஆயிரக்கணக்கான வாசகர்கள் பத்திரிக்கை அலுவலகத்திற்கு தொலைப்பேசி மூலம் தொடர்புக் கொண்டனர்.

அனைவரும் ஒரே கேள்வியைத்தான் கேட்டனர். புகைப்படத்தில் உள்ள சிறுமி என்ன ஆனாள்? அவள் உயிருடன் பிழைத்தாளா அல்லது இறந்து விட்டாளா?
இந்தக் கேள்விக்கான பதில் பத்திரிக்கையின் தொலைப் பேசி ஆப்ரேட்டரிடமோ படத்தை எடுத்த கெவின் கார்ட்டர்டமோ இல்லை.

1994,மே 23 அன்று பெரும் கை தட்டல்களுக்கு இடையே கெவின் கார்ட்டர் கொலம்பியப் பல்கலைக்கழகத்தின் பிரமாண்டமான அரங்கத்தில் இந்த அரிதான புகைப்படத்திற்கான புலிட்சர் விருதப் பெற்றுக்கொண்டார் இந்த விருது புகைப்படத் துறையில் நோபல் விருதுக்கு இணையானது.

விருது பெற்ற சில நாட்களுக்குப்பின் கெவின் பெரும் மன உளைச்சலுக்கு ஆளானார்.

கெவினுக்கும் அங்கு இருந்த பிணம்தின்னிக் கழுகுக்கும் என்ன வேற்றுமை? இரண்டும் ஒரே விதமாகத்தான் செயல்பட்டுள்ளனர்.

‘குறைந்தபட்சம் புகைப்பட நிபுணர் கெவின் அந்த சிறுமிக்கு ஒரு வாய் தண்ணீர் அல்லது சாண்ட்விச் தந்து உயிரைக் காப்பாற்றி இருக்கலாம்; அல்லது தனது வலுவான கைகளினால் அந்தச் சிறுமியைத் தூக்கிச் சென்று உணவளிக்கும் அமைப்பு அலுவலகத்தின் வாயிலிலாவது சேர்த்து இருக்கலாம்; கல்லெடுத்து வீசி அந்தக் கழுகையாவது விரட்டி இருக்கலாம்; ஆனால் இவற்றில் எதையும் செய்யாமல் வெறும் ஒரு படத்தை எடுத்தார்; அதை அதிக விலை தந்த பத்திரிக்கைக்கு விற்று விட்டார் என்று ஒருவர் அவர் மீது குற்றம் சாட்டியதுதான் காரணம்.

1994 ஆம் ஆண்டு ஜீலை 27 ஆம் நாள் கார்ட்டர் தனது மகிழுந்தைத் தான் சிறு வயதில் விளையாடிய ஆற்றங்கரையருகில் கொண்டு நிறுத்தினார். மோட்டார் புகைபோக்கிச் செயல்முறையைப் பயன்படுத்திக் கார்பன் மோனாக்சைடு நச்சால் தன் வாழ்வை முடித்துக் கொண்டார். மரணத்தின் போது அவருக்கு வயது 33.

அவரது பிணத்திற்கு அருகில் காவல்துறைக்கு ஒரு கடிதம் கிடைத்தது. அதில் சில வரிகளே இருந்தன. 

"
நான் மனத்தளர்ச்சி அடைந்துள்ளேன். ...தொலைபேசி இல்லாமல்....வாடகைக்குப் பணம்; இல்லாமல்....குழந்தை ஆதரவுக்குப் பணம் இல்லாமல்.....கடனடைக்கப் பணம் இல்லாமல்....பணம்!!!..... நான் கொலைகளின் தெளிவான நினைவுகளாலும் பிணங்கள், கோபம் மற்றும் வலியினாலும் பாதிக்கப்பட்டுள்ளேன். பசியால் வாடும் மற்றும் காயம்பட்ட குழந்தைகளாலும்.... "

இன்று பல்வேறு செய்தி சேனல்களிலும் அடிபட்டும் விபத்துக்குள்ளாகியும் இரத்தச் சிதறலில் துடித்துக் கிடப்பவர்களைப் படங்களாய்ப் பார்க்கும் போதும் அவர்களின் அபயக் குரலைக் கேட்கும் போதும் ஏனோ கெவின் கார்ட்டர் நினைவுக்கு வருகிறார்.



நன்றி:
Wikipedia    Facebook

Wednesday, January 8, 2014

படித்ததில் பிடித்தது 7 - உருவமும் குணமும் (குட்டிக்கதை)

ஒரு வயதான பெண்மணி விமான நிலையத்தில் விமானத்துக்காக காத்துக்  கொண்டிருந்தார்.விமானம் வர தாமதமாகும் என்ற அறிவிப்பைக்  கேட்டவுடன் கடைக்குச் சென்று படிக்க புத்தகமும், சாப்பிட பிஸ்கட்டும் வாங்கி வர சென்றார்.
ஒரு இருக்கையில் அமர்ந்து தான் வாங்கி வந்த புத்தகத்தை பிரித்து படிக்க ஆரம்பித்தார்.அவருக்கு அருகில் ஒரு வாட்ட சாட்டமான ஒருவர் உட்கார்ந்து இருந்தார்.

சிறிது நேரத்தில் அந்த நபர் குட் டே பிஸ்கட் பாக்கெட்டை பிரித்து ஒரு பிஸ்கெட் சாப்பிட்டுவிட்டு காலியாக இருந்த சேரின் மீது வைத்தார்.

அந்த பெண்மணி அவரை பார்த்து முறைத்து விட்டு ஒரு பிஸ்கட் எடுத்து சாப்பிட்டார்.
அந்த நபர் மறுபடியும் ஒரு பிஸ்கெட் எடுத்து சாப்பிட்டார்.

அந்த பெண்மணிக்கு கோபம் வந்து விட்டது. இருந்தாலும் அந்த நபரின் உருவத்தை பார்த்துவிட்டு எதுவும் சொல்லாமல் இவரும் ஒரு பிஸ்கட் எடுத்து சாப்பிட்டார்.

அந்த முரட்டு மனிதன் மறுபடியும் ஒரு பிஸ்கட் எடுத்து சாப்பிட்டார்.

"ச்சே! பிஸ்கட்டை திருடி திண்கிறானே, இவனுக்கு கொஞ்சம்
கூட வெட்கம்,மானம் இல்லையா?" என்று நினைத்து கொண்டே, அந்த பெண்மணி தானும் ஒரு பிஸ்கட் எடுத்து சாப்பிட்டார்.

இப்படியே இருவரும் மாறி, மாறி பிஸ்கட் சாப்பிட்டு கொண்டே இருந்தனர்.கடைசியாக ஒரே ஒரு பிஸ்கட் இருந்தது.

இருவரும் அந்த பிஸ்கட்டை பார்த்தனர்.சிறிது நேரம் அமைதியாக இருந்தனர்.

அந்த முரட்டு மனிதன் அந்த பிஸ்கட்டை இரண்டாக உடைத்து , பாதியை அவர் சாப்பிட்டு விட்டு மீதியை அந்த இருக்கையில் வைத்தார்.

அந்த பெண்மணி மீதி பாதி பிஸ்கட்டை சாப்பிட்டு விட்டு விமானம் ஏற கிளம்பி விட்டார்.

விமானத்தில் ஏறி அமர்ந்தவுடன், என்ன மோசமான மனிதன் பிஸ்கெட் வேண்டும் என்றால் கேட்டு வாங்கி சாப்பிட வேண்டியது தானே.

இப்படியா திருடி திண்பது,உலகத்தில் இப்படியும் சில ஜென்மங்கள் இருக்கத்தான் செய்கின்றன என்று நினைத்துக் கொண்டே தண்ணீர் குடிப்பதற்கு பையில் கையை விட்டார்.

அவருக்கு ஒரே ஆச்சரியம்,இவர் கடையில் வாங்கிய பிஸ்கட் பாக்கெட் பையில் அப்படியே இருந்தது.

அப்படின்னா நான் இவ்வளவு நேரம் அங்கு சாப்பிட்ட பிஸ்கட் அந்த முரட்டு மனிதனுடையதா…

நான் தான் பிஸ்கெட் திருடி சாப்பிட்டேனா…என்று சொல்லிக்கொண்டே தன் செயலுக்காக வருந்தினார்.

இந்தக் கற்பனைக் கதை நமக்கு உணர்த்துவது,

”எப்பவுமே ஒருவருடைய உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது.

அவர் நல்லவராகவும் இருக்கலாம்,மோசமானவராகவும் இருக்கலாம்.

ஏன் அவர் நம்மைக் காட்டிலும்,

எல்லாவற்றிலும் ஒழுக்க சீலராகவும்,

உயர்ந்த பண்புடையவராகவும் கூட இருக்கலாம்.

அடுத்தவரிடம் நாம் அதிர்ச்சியடைகிற அளவுக்குப் பார்க்கிற குறை,

பெரும்பாலும் நாம் சுமந்து கொண்டிருப்பது தான்.

என்ன கொஞ்சம் வித்தியாசமாக, மறைவாக, அல்லது வேறு விதமாக நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிற அளவுக்கு இருப்பது தான்!

நம்மிடம் இருக்கும் குறை பெரிதாக, தீமை இல்லாததாகத் தெரிவது, அடுத்தவரிடம் பார்க்கும் போது பூதாகாரமாகத் தெரிகிறது!

எனவே,

அடுத்தவர்கள் மேல் குறை காணும் முன் நாம் அதற்கு முற்றிலும் தகுதியானவரா என்று ஒரு நொடி நினைத்துப் பார்க்க வேண்டும்.....!

Wednesday, January 1, 2014

புதுவருடமே வருக வருக!

 தமிழர்கள் என்றால் தமிழ் புத்தாண்டை மட்டுமே சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்றில்லை.தம்மையும் பிற இனத்தையும் அவர்களின் கலாச்சாரத்தையும் என்றுமே தமிழன் மதிக்கத் தவறியதில்லை.
ஆகவே,ஆங்கில புத்தாண்டைக் கொண்டாடுவதில் எந்த பாவமும் நம்மை வந்தடையாது.அதை விடுத்து  கொண்டாட்டத்தால் தமிழ் கலாச்சாரம் குழையும்,அழிந்துவிடும் என்றெல்லாம் கதை கிளப்புவது நன்றல்ல!


நீண்ட விடுப்பில் இருந்து இன்றுதான் அலுவலகம் வந்தடைந்தேன்.புத்தாண்டுக்கு லீவா இருக்கும்.எதுக்கும் ஆபிஸ் ல கேளு! என்று அம்மா நேற்று சொன்னபோது எனக்கே சந்தேகம் வந்துவிட்டது.போன வருஷ பிறப்பன்று அலுவலகம் வந்தது நினைவிருக்கிறது.இருப்பினும் நண்பனைக் கேட்டு உறுதிசெய்துகொண்டேன்.

காலைப் பனியில் காதுகளை மூடிக்கொண்டு ஒருமணி நேரம் பயணம்.ஜன்னல் காட்சிகளில் எதோ புதுமை இருப்பதாகவே தெரிந்தது.என்றும் காணப்படும் வாகன நெரிசல்,குழம்பிய முகங்கள் என எதுவும் தென்படவில்லை.சாலை நெடுக Happy New Year வாழ்த்து செய்திகள் சுண்ணாம்பினால் எழுதப்பட்டிருந்தது.இரவுக்கொண்டாட்டத்தில் வெடிக்கப்பட்ட பட்டாசுக் காகிதங்கள் சாலையின் ஓரங்களை நிறைத்திருந்தது.

புதுவருடம் ஒவ்வொருவருக்கும் விதவிதமாய் விடிகிறது.சிலரின் காதல் நேற்று இரவில் சொல்லப்பட்டிருக்கும்,அதே போல நாளை புதிய வாகனம் வாங்கி வருடத்தை வண்டி எண்ணாக பதிவு செய்ய சிலர் யோசனை செய்துகொண்டிருப்பார்கள்,பலரின் புதிய தொழில் முயற்சிகள் புதிய வருடத்தில் சந்தைப்படுத்தப்படும்! இப்படி புத்துணர்வில் பிறக்கிறது புதுவருடம்.கண்களை மூடி யோசித்துப்பார்த்தால், ஏதோ வழி தெரியாத நீண்ட சோலைக்குள் பயணம் செய்ய தயாராகிக் கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது.அனைவரும் அப்படித்தான் சோலைக்குள் நுழைகிறோம்.பலர் பாதை தவறிவிடுகிறார்கள். சிலரே நினைத்ததை அடைகிறார்கள்.

உங்கள் எண்ணங்கள் ஈடேற என் இனிய வாழ்த்துகள்.இது ஒரு நல்ல விடியல்.இனிய ஆண்டின் இன்பமயமான ஆரம்பம்! அனுபவியுங்கள் உங்கள் ஸ்டைலில் :)

தத்துவம்:
"உன்னை நாணயமான மனிதனாக்கிகொள்! அதன்மூலம் உலகில் அயோக்கியன் எண்ணிக்கையில் ஒன்று குறைந்துவிட்டது என நீ தைரியமாக நம்பலாம்! "


அன்புடன் 
ராஜ்குமார்.