Wednesday, January 8, 2014

படித்ததில் பிடித்தது 7 - உருவமும் குணமும் (குட்டிக்கதை)

ஒரு வயதான பெண்மணி விமான நிலையத்தில் விமானத்துக்காக காத்துக்  கொண்டிருந்தார்.விமானம் வர தாமதமாகும் என்ற அறிவிப்பைக்  கேட்டவுடன் கடைக்குச் சென்று படிக்க புத்தகமும், சாப்பிட பிஸ்கட்டும் வாங்கி வர சென்றார்.
ஒரு இருக்கையில் அமர்ந்து தான் வாங்கி வந்த புத்தகத்தை பிரித்து படிக்க ஆரம்பித்தார்.அவருக்கு அருகில் ஒரு வாட்ட சாட்டமான ஒருவர் உட்கார்ந்து இருந்தார்.

சிறிது நேரத்தில் அந்த நபர் குட் டே பிஸ்கட் பாக்கெட்டை பிரித்து ஒரு பிஸ்கெட் சாப்பிட்டுவிட்டு காலியாக இருந்த சேரின் மீது வைத்தார்.

அந்த பெண்மணி அவரை பார்த்து முறைத்து விட்டு ஒரு பிஸ்கட் எடுத்து சாப்பிட்டார்.
அந்த நபர் மறுபடியும் ஒரு பிஸ்கெட் எடுத்து சாப்பிட்டார்.

அந்த பெண்மணிக்கு கோபம் வந்து விட்டது. இருந்தாலும் அந்த நபரின் உருவத்தை பார்த்துவிட்டு எதுவும் சொல்லாமல் இவரும் ஒரு பிஸ்கட் எடுத்து சாப்பிட்டார்.

அந்த முரட்டு மனிதன் மறுபடியும் ஒரு பிஸ்கட் எடுத்து சாப்பிட்டார்.

"ச்சே! பிஸ்கட்டை திருடி திண்கிறானே, இவனுக்கு கொஞ்சம்
கூட வெட்கம்,மானம் இல்லையா?" என்று நினைத்து கொண்டே, அந்த பெண்மணி தானும் ஒரு பிஸ்கட் எடுத்து சாப்பிட்டார்.

இப்படியே இருவரும் மாறி, மாறி பிஸ்கட் சாப்பிட்டு கொண்டே இருந்தனர்.கடைசியாக ஒரே ஒரு பிஸ்கட் இருந்தது.

இருவரும் அந்த பிஸ்கட்டை பார்த்தனர்.சிறிது நேரம் அமைதியாக இருந்தனர்.

அந்த முரட்டு மனிதன் அந்த பிஸ்கட்டை இரண்டாக உடைத்து , பாதியை அவர் சாப்பிட்டு விட்டு மீதியை அந்த இருக்கையில் வைத்தார்.

அந்த பெண்மணி மீதி பாதி பிஸ்கட்டை சாப்பிட்டு விட்டு விமானம் ஏற கிளம்பி விட்டார்.

விமானத்தில் ஏறி அமர்ந்தவுடன், என்ன மோசமான மனிதன் பிஸ்கெட் வேண்டும் என்றால் கேட்டு வாங்கி சாப்பிட வேண்டியது தானே.

இப்படியா திருடி திண்பது,உலகத்தில் இப்படியும் சில ஜென்மங்கள் இருக்கத்தான் செய்கின்றன என்று நினைத்துக் கொண்டே தண்ணீர் குடிப்பதற்கு பையில் கையை விட்டார்.

அவருக்கு ஒரே ஆச்சரியம்,இவர் கடையில் வாங்கிய பிஸ்கட் பாக்கெட் பையில் அப்படியே இருந்தது.

அப்படின்னா நான் இவ்வளவு நேரம் அங்கு சாப்பிட்ட பிஸ்கட் அந்த முரட்டு மனிதனுடையதா…

நான் தான் பிஸ்கெட் திருடி சாப்பிட்டேனா…என்று சொல்லிக்கொண்டே தன் செயலுக்காக வருந்தினார்.

இந்தக் கற்பனைக் கதை நமக்கு உணர்த்துவது,

”எப்பவுமே ஒருவருடைய உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது.

அவர் நல்லவராகவும் இருக்கலாம்,மோசமானவராகவும் இருக்கலாம்.

ஏன் அவர் நம்மைக் காட்டிலும்,

எல்லாவற்றிலும் ஒழுக்க சீலராகவும்,

உயர்ந்த பண்புடையவராகவும் கூட இருக்கலாம்.

அடுத்தவரிடம் நாம் அதிர்ச்சியடைகிற அளவுக்குப் பார்க்கிற குறை,

பெரும்பாலும் நாம் சுமந்து கொண்டிருப்பது தான்.

என்ன கொஞ்சம் வித்தியாசமாக, மறைவாக, அல்லது வேறு விதமாக நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிற அளவுக்கு இருப்பது தான்!

நம்மிடம் இருக்கும் குறை பெரிதாக, தீமை இல்லாததாகத் தெரிவது, அடுத்தவரிடம் பார்க்கும் போது பூதாகாரமாகத் தெரிகிறது!

எனவே,

அடுத்தவர்கள் மேல் குறை காணும் முன் நாம் அதற்கு முற்றிலும் தகுதியானவரா என்று ஒரு நொடி நினைத்துப் பார்க்க வேண்டும்.....!

Wednesday, January 1, 2014

புதுவருடமே வருக வருக!

 தமிழர்கள் என்றால் தமிழ் புத்தாண்டை மட்டுமே சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்றில்லை.தம்மையும் பிற இனத்தையும் அவர்களின் கலாச்சாரத்தையும் என்றுமே தமிழன் மதிக்கத் தவறியதில்லை.
ஆகவே,ஆங்கில புத்தாண்டைக் கொண்டாடுவதில் எந்த பாவமும் நம்மை வந்தடையாது.அதை விடுத்து  கொண்டாட்டத்தால் தமிழ் கலாச்சாரம் குழையும்,அழிந்துவிடும் என்றெல்லாம் கதை கிளப்புவது நன்றல்ல!


நீண்ட விடுப்பில் இருந்து இன்றுதான் அலுவலகம் வந்தடைந்தேன்.புத்தாண்டுக்கு லீவா இருக்கும்.எதுக்கும் ஆபிஸ் ல கேளு! என்று அம்மா நேற்று சொன்னபோது எனக்கே சந்தேகம் வந்துவிட்டது.போன வருஷ பிறப்பன்று அலுவலகம் வந்தது நினைவிருக்கிறது.இருப்பினும் நண்பனைக் கேட்டு உறுதிசெய்துகொண்டேன்.

காலைப் பனியில் காதுகளை மூடிக்கொண்டு ஒருமணி நேரம் பயணம்.ஜன்னல் காட்சிகளில் எதோ புதுமை இருப்பதாகவே தெரிந்தது.என்றும் காணப்படும் வாகன நெரிசல்,குழம்பிய முகங்கள் என எதுவும் தென்படவில்லை.சாலை நெடுக Happy New Year வாழ்த்து செய்திகள் சுண்ணாம்பினால் எழுதப்பட்டிருந்தது.இரவுக்கொண்டாட்டத்தில் வெடிக்கப்பட்ட பட்டாசுக் காகிதங்கள் சாலையின் ஓரங்களை நிறைத்திருந்தது.

புதுவருடம் ஒவ்வொருவருக்கும் விதவிதமாய் விடிகிறது.சிலரின் காதல் நேற்று இரவில் சொல்லப்பட்டிருக்கும்,அதே போல நாளை புதிய வாகனம் வாங்கி வருடத்தை வண்டி எண்ணாக பதிவு செய்ய சிலர் யோசனை செய்துகொண்டிருப்பார்கள்,பலரின் புதிய தொழில் முயற்சிகள் புதிய வருடத்தில் சந்தைப்படுத்தப்படும்! இப்படி புத்துணர்வில் பிறக்கிறது புதுவருடம்.கண்களை மூடி யோசித்துப்பார்த்தால், ஏதோ வழி தெரியாத நீண்ட சோலைக்குள் பயணம் செய்ய தயாராகிக் கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது.அனைவரும் அப்படித்தான் சோலைக்குள் நுழைகிறோம்.பலர் பாதை தவறிவிடுகிறார்கள். சிலரே நினைத்ததை அடைகிறார்கள்.

உங்கள் எண்ணங்கள் ஈடேற என் இனிய வாழ்த்துகள்.இது ஒரு நல்ல விடியல்.இனிய ஆண்டின் இன்பமயமான ஆரம்பம்! அனுபவியுங்கள் உங்கள் ஸ்டைலில் :)

தத்துவம்:
"உன்னை நாணயமான மனிதனாக்கிகொள்! அதன்மூலம் உலகில் அயோக்கியன் எண்ணிக்கையில் ஒன்று குறைந்துவிட்டது என நீ தைரியமாக நம்பலாம்! "


அன்புடன் 
ராஜ்குமார்.