Tuesday, November 18, 2014

படித்ததில் பிடித்தது 13- சாமியாரா இருக்கப் போறாரு! (குட்டிக்கதை)


ஒரு கிராமத்தில் மதன் என்பவன் மனைவியோடு வாழ்ந்து வந்தான். அவர்கள் இருவரும் பிச்சைக்காரர்களுக்கு ஒரு பிடி சோறு போட மாட்டார்கள். இதனால் பிச்சைக்காரர்கள் யாரும் அவர்கள் வீட்டுக்கு வருவது இல்லை.

இரவு நேரம், வெளியூரில் இருந்து பிச்சைக்காரன் ஒருவன் அங்கே வந்தான். காவி வேட்டி கட்டியிருந்த அவன், சாமியாரைப் போலக் காட்சி அளித்தான்.
அந்த வீட்டைப் பார்த்த அவன் கதவைத் தட்டினான்.

""அம்மா! தாயே! இந்த ஏழைக்குப் பிச்சை போடுங்கள்,'' என்று குரல் கொடுத்தான்.

கதவைத் திறந்த மதன், ""பிச்சை எதுவும் கிடையாது. வேறு இடம் பார்,'' என்று கோபத்துடன் சொல்லி விட்டு, கதவைப் படீரென்று சாத்தினான்.
இரவாகி விட்டது. வேறு எங்கும் செல்ல முடியாது. இங்கேயே தங்கிவிட வேண்டியதுதான் என்று நினைத்தான் அவன்.
""இந்த வீட்டில் பிச்சை கிடைக்க வில்லை. அதனால், அந்த ஊரில் செய்தது போல செய்துவிட வேண்டியதுதான். வேறு வழி இல்லை,'' என்றபடியே திண்ணை யில் அமர்ந்தான்.
அவன் பேசியது வீட்டிற்குள் இருந்த இருவருக்கும் கேட்டது.
""என்னங்க... வந்தவர் பெரிய சாமியார்னு நினைக்கிறேன். நாம வேற பிச்சை இல்லேன்னு சொல்லிட்டோம். அவர் கோபமாக இருக்காரு. அந்த ஊரில் செய்தது போல செய்யப் போறேங்கறாரு. என்ன செய்யப் போறாரோ தெரியவில்லை. எனக்குப் பயமா இருக்கு,'' என்று நடுக்கத்துடன் சொன்னாள்.
""அவர் பேசியதைக் கேட்டு எனக்கும் பயமாகத்தான் இருக்குது. பிச்சைக்காரன்னு நினைச்சு அவர்கிட்ட கோபமா பேசிட்டேன். அவர் நம்மைச் சபிச்சாலும் சபிச்சுடுவார். இப்ப என்ன செய்யறது?'' என்று கலக்கத் துடன் கேட்டான் அவன்.
""அவர் கால்ல விழுந்து மன்னிப்பு கேட்போம். பெரியவரான அவர் நம்மை மன்னிச்சுடுவார்,'' என்றாள் அவள்.
கதவைத் திறந்த இருவரும் அந்த பிச்சைக்காரன் காலில் விழுந்தனர்.
""எங்களை மன்னிச்சிடுங்க... நீங்க யார்னு தெரியாம அப்படிப் பேசிட்டோம். சிறிது நேரம் பொறுமையா இருங்க. உங்களுக்கு விருந்தே போடுகிறோம்,'' என்றனர்.
ஏதும் பேசாமல் அமைதியாக இருந்தான் பிச்சைக்காரன்.
"அவர் கோபம் தீரவில்லை' என்று இருவரும் நினைத்தனர்.
சமையல் அறைக்குள் சென்ற அவள் சமைக்கத் தொடங்கினாள். மதனும் உதவி செய்தான்.
சுடச் சுட விருந்து தயாரானது.
வெளியே வந்த அவர்கள் இருவரும் அவனைப் பணிவுடன் அழைத்தனர்.
பசியுடன் இருந்த பிச்சைக்காரன் அவர்கள் தந்த விருந்தைச் சுவைத்துச் சாப்பிட்டான். பெரிதாக ஏப்பம் விட்டான்.

அவர் கோபம் தணிந்து விட்டது. இனி ஆபத்து இல்லை என்று இருவரும் நினைத்தனர்.

அவனுக்கு வெற்றிலை, பாக்கு கொடுத்தனர். அவற்றையும் அவன் வாயில் போட்டு மென்றான்.

""நல்ல சாப்பாடு போட்டீங்க. இப்படி எங்கேயும் சாப்பிட்டது இல்லை.நீங்க நல்லா இருக்கணும்,'' என்று வாழ்த்தினான் அவன்.

தங்களை என்ன செய்ய நினைத்தார் என்பதை அறிய விரும்பினான் மதன்.
""சாமி! நீங்க எங்க வீட்டுத் திண்ணையில் அமர்ந்தீங்க. அந்த ஊரில் செய்தது போல இங்கேயும் செய்ய வேண்டியதுதான் என்றீங்க. அந்த ஊரில் என்ன செய்தீங்க?'' என்று கேட்டான்.

""இதே போல ஒரு ஊரில் பிச்சை கேட்டு அலைஞ்சேன். யாரும் பிச்சை போடவில்லை. ஒரு வீட்டுத் திண்ணை யில் இன்று பட்டினி என்றபடியே படுத்துக் கொண்டேன். அந்த ஊரில் செய்தது போல இங்கும் செய்ய வேண்டியதுதான் எனச் சொன்னேன்,'' என்றான் பிச்சைக்காரன்.
தாங்கள் ஏமாந்ததை எண்ணி இருவரும் திகைத்து நின்றனர்.

-Dinamalar

Friday, November 7, 2014

என் கற்பனைக் காதலி (சந்தக்கவிதை)


கன்னத்தில் குழிவிழும் அழகியவள் -கால்
சலங்கையில் ஜதி சொல்லும் யுவதியவள் !

வார்த்தைகள் ஒவ்வொன்றும் இனித்திருக்கும் -அவள்
திருமுகம் பார்த்திட மனம் துடிக்கும் !

தினம்தினம் புதிதாய்க் காதலிப்பாள் -என்னுள்
திரும்பிய திசையெல்லாம் சிரித்திருப்பாள் !

உயிருடன் நடந்திடும் ஓவியமே -என்னை
உனதொரு ரசிகனாய் மாற்றிவிட்டாய் !

பார்வைகள் ஒவ்வொன்றும் இனிய சுகம் -மனம்
கவிதைகள் படைத்திடும் புதியவிதம் !

இனியவளே உன்னைக் காதலித்தேன்-என்
உயிராய் உன்னைத் தினம் நினைத்தேன்!

இளமை மாறா இளங்கிளியே -நித்தம்
வருவாயோ என்னை மகிழ்த்திடவே!

என் தாள்களில் எல்லாம் கவிதைச் சத்தம் -உன்னைக்
கண்டதும் கேட்பேன் நூறு முத்தம்!!

- ராஜ்குமார்

Tuesday, November 4, 2014

அன்பென்ற மழையில்! (கவிதை)


அவள் விழியின் ஈரத்தில்,
நானும் நனைந்திருந்தேன்.

பலநாளும் அவள் அழுததுண்டு.
என்மேல் வரும் கோபத்தால்!
இருந்தும் புன்னகைப்பாள்..
என் மனம் குளிர்வதற்கு.

அன்புக் குழந்தையை,
அடிவயிற்றில் சுமந்தபடி,
நித்தம் பல கனவோடு,
வாழ்கின்றாள் என்னவள்!

அன்றைய பொழுதுகளில்,
அப்படி நான் இருக்கவில்லை.

சமுதாயக் கோபத்தில்,
வேலையிழந்த ஏக்கத்தில்,
என்னை மறந்தபடி
வாழ்ந்த அந்நாட்களில்,
என்னவள் கனவுகளை-நான்
கண்டுகொள்ளத் துணியவில்லை!

அன்புகாட்டி அவள் ஊட்டும் சோற்றுக்கும்,
அக்கறையாய் அவள் செய்யும் சேவைக்கும்,
இரக்கம் சிறிதுமின்றி-உடல்
வேதனையை விலையாய்க் கொடுத்தேன்!

அன்றொருநாள் நள்ளிரவில்,
நடுங்கிக் கிடந்தேன் குளிர் சுரத்தில்!
"அம்மா! அம்மா!" என்ற வார்த்தையன்றி,
ஏதும் சொல்லத்துணிவின்றிக் கிடந்தேன்!

அழுது பரபரத்து -என்னவள்
மருத்துவமனை சேர்த்தாள்!
விடியல் வரை உறக்கம் தொலைத்து,
என்னை மடியில் சுமந்திருந்தாள்!

அவள்முகம் பார்த்தேன் விழிகள் திறந்து!
கண்டுகொள்ளா நேரத்திலும்,
காதல் மழை பொழிந்தவள்.
அடைந்துகிடந்த இதயத்தில்
அன்பை வாரித் தெளித்தவள்!

சொல்லி அழ வார்த்தைகள் வரவில்லை.
அவள் வளைகை இறுகப் பற்றிக்கொண்டு ,
விரல்களில் முத்தமிட்டேன்!

சிரித்தபடி அழுதாள்!-அன்று
அவள் விழியின் ஈரத்தில்,
நானும் நனைந்திருந்தேன்.

- ராஜ்குமார் 

சராசரி இந்தியனின் நள்ளிரவுக் கனவு!


முடியாத இரவினிலும்,
விடிந்த பொழுதினிலும்,
புரியாமல் வருகின்ற,
கனவுகள் ஏராளம்!

கண்ணுறங்கும் நிமிடம் மட்டும்
வருவதில்லை கனவுகள்.
காத்திருக்கும் நொடிகளில்,
காணாத ஏக்கத்தில்,
எண்ணும்பொருள் ஏதுமின்றி பிறந்துமடியும் கனவுகள்,
தினம் தினம் ஏராளம்.

அன்றொருநாள் அப்படித்தான்,
நல்லதொரு கனவுகண்டேன்.
சாலை ஓரமாக,
சத்தமின்றி நடந்திருந்தேன்.
வருடிய தென்றலில் உள்ளம் சில்லிட்டது!

பிளாஸ்டிக் இல்லாத தெருக்கள்,
பிளவுகள் இல்லாத சாலைகள்.
ஆட்கள் நிறைந்தபோதும்,
கூச்சல் இல்லை அங்கு!

என் நாட்டை சுற்றிப் பார்த்திட-இங்கு
ஏராளப் பயணிகள்.!
சுயவேலைகள் பெருக்கியதில்,
குறைந்த விலைகளால்-குறைவில்லா வாழ்க்கை!


எல்லோரும் ஓர் நிறை!
என் நாட்டில் இன்று,
சுற்றுலாஅமைச்சருக்கும் நுழைவுச்சீட்டு கேட்கப்படுகிறது!
நடிகர் நடிகை மோகம் சுவடின்றி ஒழிந்திருக்கிறது.

சாதிச் சண்டைகளோ,
கொலை,குற்றச் செய்திகளோ,
சீர்கெட்ட நடிகையின் நடுப்பக்கப் படங்களோ,
நிச்சயமாய் இல்லை,
என் கையில் உள்ள நாளிதழில்.

ஒப்பற்ற என் நாடு,
ஒளிர்கிறது இன்று,
சத்தமின்றி வாழும் இந்தச் சராசரி இந்தியனின்
நம்பிக்கை நிறைந்த –ஒரு
நள்ளிரவுக் கனவினில்....!

- ராஜ்குமார்

படித்ததில் பிடித்தது 12-கழுதை வாத்து கதை!


ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தது. வாத்துக்கள் எல்லாம் கூட்டமாக வெள்ளத்தில் நீந்தியபடி, இரை தேடிக் கொண்டிருந்தன.
ஆற்றங்கரையில் கழுதைகளும் கூட்டமாக நின்று கொண்டு, புற்களை மேய்ந்து கொண்டி ருந்தன. அந்தக் கழுதைகள் வாத்துக்களை நோக்கின.
""நண்பர்களே! நம்மை விட உருவத்தில் சிறிய இந்த வாத்துக்கள் என்ன மாதிரி தண்ணீரில் நீந்துகின்றன. அவைகள் எல்லாம் தண்ணீருக்குள் மூழ்கியபடி சாகசத்தை நடத்துகிறதே! நம்மால் இந்த அளவுக்குத் தண்ணீரில் இறங்கி சாகசங் களைச் செய்ய முடிய வில்லையே!'' என்று கவலையுடன் கூறியது ஒரு கழுதை.

அதைக் கேட்ட மற்ற கழுதைகளும், ""ஆமாம் நண்பனே! நீ சொல்வ தெல்லாம் உண்மைதான். அதில், எந்தவிதமான மாற்றமும் இல்லை. வாத்துக்கள் எல்லாம் மகிழ்ச்சியோடுதான் வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கின்றன. ஒன்றையொன்று தண்ணீருக்குள் நீந்தியபடி கலகலப்பாக வாழ்க்கை நடத்திக் கொண்டிருக் கின்றன. நாமும் அந்த வாத்துக்களைப் போன்று வாழ வேண்டும்! அதற்கு என்ன செய்யலாம் என்பதை சேர்ந்து முடிவெடுப்போம்!'' என்றது.
"நண்பர்களே! இது நல்ல யோசனைதான். நாம் வாத்துக்களைப் போல தண்ணீரில் நீந்த வேண்டுமென்றால், நமக்கு இறக்கைகள் முளைக்க வேண்டும். இறக்கைகள் மட்டும் நமக்கு முளைத்து விட்டால், நாம் வாத்துக் களைப் போன்று பறக்கலாம்; தண்ணீரிலும் நீந்தலாம்,'' என்றது ஒரு கழுதை.
மற்றொரு கழுதையோ அதை மறுத்தது.

"நண்பர்களே! நான் ஒரு போதும் இதற்கு ஒத்துக்கொள்ள மாட்டேன். நமக்கு இறக்கை கள் முளைத்து விட்டால் மட்டும் நாம் பறந்து விட முடியாது. நாம் வாத்துக்களைப் போன்று குள்ள உருவமாக மாறவேண்டும். இன்னும் சொல்லப் போனால், நாம் வாத்துக்களாக மாறி விட வேண்டும். அப்போதுதான் நாம் வாத்துக் களுக்கு இணையாக தண்ணீரில் நீந்தியபடி சாகசங்களை நிகழ்த்திக் காட்ட முடியும். அந்த வாத்துக்களுக்குப் போட்டியாக நம்முடையத் திறமைகளை எல்லாம் வெளிப்படுத்த முடியும்!'' என்றது.
அந்தக் கழுதையின் கருத்தை எல்லா கழுதைகளும் ஒரு மனதாக ஏற்றுக் கொண்டன.

"நண்பனே! நீ சொல்வது சரி! நீ கூறியதில் ஆழமான கருத்தும் இருக்கிறது. நாம் வாத்துக் களாக மாறி விட்டால், நாம் நினைப்பது எல்லாம் எளிதாக முடிந்து விடும். அதன் பின்னர் நமக்கு எந்தக் கவலையும் இல்லை. ஆனால், நாம் வாத்துக்களாக மாற என்ன செய்ய வேண்டும்? அதனைப் பற்றியும் நீயே ஒரு கருத்தினைத் தெரியப்படுத்து. அந்தக் கருத்துக்களின்படியே நாங்கள் எல்லாரும் நடந்து கொள்கிறோம்,'' என்றது.

உடனே அந்தக் கழுதையும் சிறிது நேரம் யோசனையில் ஆழ்ந்தது. பின்னர் மற்றக் கழுதைகளை நோக்கியது.

"நண்பர்களே! நான் சொல்வதை கவனமாக கேட்டுக் கொள்ளுங்கள். நாம் அனைவரும் இந்த ஆற்றங்கரையில் அமர்ந்து ஆண்டவனை நினைத்து தவம் இருப்போம்! நாம் எல்லாரும் ஒரு மனதாக ஆண்டவனைக் குறித்து தவம் இருந்தோமானால் நம்முடைய தவத்திற்கு மனமிரங்கி, ஆண்டவன் நம் முன்னே வருவார். உடனே, நாம் அவரிடம், "ஆண்டவா! ஆண்டவா! நாங்கள் எல்லாரும் வாத்துக்களாக இருக்க வேண்டும். எங்களது கழுதை வடிவத்தை தவிர்த்து, நாங்கள் எல்லாரும் வாத்துக்களாக மாற வேண்டும். உடனே எங்களை வாத்துக்களாக மாற்றிவிடு' என்று ஆண்டவனை வேண்டுவோம்.
"நாம் அவ்வாறு ஆண்டவனை வேண்டுகிற நேரத்தில், அவரும் மனம் இரங்கி, நமக்கு உதவிகளைச் செய்வார். நாமும் மகிழ்ச்சியோடு வாத்துக்களாக உருவம் மாறிக் கொள்ளலாம்,'' என்றது.

அந்தக் கழுதையின் யோசனையைக் கேட்டு, மற்ற கழுதைகள் எல்லாம், "ஆஹா அற்புதம்... அற்புதம்!'' என்று புகழத் தொடங்கின.

உடனே எல்லாக் கழுதைகளும் அமைதி யோடு வானத்தைப் பார்த்தபடி, ஆண்டவனை வேண்டத் தொடங்கின.

நீண்ட நேரமாக தங்களின் கால்களின் வலியைப் பொருட்படுத்தாமல், ஆகாயத்தைப் பார்த்துக் கொண்டிருந்தன.

தண்ணீரில் நீந்திக் கொண்டிருந்த வாத்துக் களோ கழுதைகளின் செயல்களை கவனித்தன.

"நண்பர்களே! அங்கே பாருங்கள் அந்தக் கழுதைகள் எல்லாம் கூட்டமாக ஒற்றுமையுடன் வானத்தை நோக்கிப் பார்த்தவாறு நின்று கொண்டிருக்கின்றன,'' என்றது ஒரு வாத்து.

"நண்பர்களே! கழுதைகள் அழகாக இருப்பது உண்மைதான். அவை உடலெங்கும் ரோமங்கள் அடர்ந்து காணப்படுகின்றன. அது மட்டுமில்லாமல் அவைகள் நம்மை விட அளவில் உயரமாகக் காணப்படுகின்றன. அவைகளுக்கு நீண்ட வெள்ளை மூக்கு இருக்கிறது. முடிகள் எல்லாம் அடர்த்தியாக இருக்கிறது. வால் ஒன்று பட்டுக் குஞ்சலம் போன்று பின்புறம் தொங்கிக் கொண்டிருக் கிறது. அது மட்டுமில்லாமல், அவைகளுக்கு நான்கு கால்கள் இருக்கின்றன... அடேயப்பா! இந்தக் கழுதைகளின் அழகை நாம் வர்ணித்துக் கொண்டே இருக்கலாம் போன்று தோன்று கிறதே!'' என்று கூறியது மற்றொரு வாத்து.

"பிறந்தால் இந்தக் கழுதைகளைப் போன்று பிறக்க வேண்டும். இப்படி நாம் வாத்துக் களாக வாழ்ந்து தண்ணீரிலேயே துன்பப்பட்டபடி காலத்தை ஓட்டிக் கொண்டி ருக்கிறோமே!'' என்று கவலையுடன் கூறியது இன்னொரு வாத்து.
"நண்பர்களே! நாம் எல்லாருமே நம்மை நினைத்து கவலைப்பட்டுக் கொண்டிருக் கிறோம்! அந்தக் கவலைகளில் இருந்து நாம் விடுபட வேண்டுமானால் நாம் கழுதைகளாக உருவம் மாற வேண்டும்,'' என்றது ஒரு வாத்து.

"நண்பர்களே! நாம் கழுதைகளைப் போல உருவம் மாற ஆண்டவனை வேண்டினால் போதும். நாம் எல்லாரும் ஒற்றுமையுடன் நமது பிரார்த்தனையை ஆண்டவனிடம் தெரியப்படுத்தினால் அவர் நிச்சயமாக நமக்கு அருள் தருவார். நாமும் நம்முடைய விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ளலாம்,'' என்றது வேறொரு வாத்து.
உடனே எல்லா வாத்துக்களும் ஆண்டவ னிடம் தங்களது பிரார்த்தனையைத் தெரியப் படுத்த வேண்டும் என்று முடிவு செய்தன.

வாத்துக்கள் எல்லாம் தண்ணீரை விட்டு கரையேறிக் கொண்டன.
கரையில் நின்றபடி எல்லா வாத்துக்களும் தங்களது பிரார்த்தனையை ஆண்டவனிடம் தெரியப்படுத்த வானத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தன.

அந்த நேரத்தில் ஆற்றங்கரையில் ஆமை ஒன்று மெல்ல, மெல்ல ஊர்ந்து வந்து கொண்டிருந்தது.
அந்த ஆமையானது கழுதைகளின் அருகே வந்தது. ஏன் எல்லாரும் ஒன்று சேர்ந்தபடி ஆகாயத்தையேப் பார்த்துக் கொண்டிருக் கிறீர்கள்?'' என்று கேட்டது ஆமை.

"ஆமையே! நாங்கள் எல்லாரும் ஆண்டவன் எப்போது வருவார் என்று ஆகாயத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக் கிறோம். நாங்கள் எல்லாரும் வாத்துக்களைப் போன்று உருவம் மாறலாம் என்று முடிவு செய்துள்ளோம்,'' என்றது ஒரு கழுதை.

அதனைக் கேட்ட ஆமை, "" நீங்கள் ஏன் வாத்துக்களைப் போன்று உருவம் மாற வேண்டும்?'' என்று கேட்டது.

"ஆமையே! எங்களால் தண்ணீரில் நீந்தி விளையாட முடியவில்லை. நாங்கள் வாத்துக் களைப் போன்று உருவம் மாறிக்கொண்டால், தண்ணீரில் நீந்தி விளையாடலாமே! அதனால் தான் வாத்துக்களைப் போன்று உருவம் மாறிக் கொள்ள வேண்டும் என்று நாங்கள் எல்லாரும் கடவுளைக் காண வேண்டி வானத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்,'' என்றன கழுதைகள்.

"கழுதைகளே நீங்கள் வாத்துக்களைப் போன்று இருக்க வேண்டும் என்று ஆண்ட வனைக் குறித்து தவம் இருப்பதைப் பார்க்கிற போது எனக்கு மிகவும் வேடிக்கையாகத்தான் இருக்கிறது,'' என்றபடி கூறிக்கொண்டு சென்றது ஆமை.
பின்னர் அது மெல்ல, மெல்ல வாத்துக் களின் அருகே நகர்ந்து வந்தது.
"வாத்துக்களே! நீங்களும் கழுதைகளைப் போன்று வானத்தைப் பார்த்துக் கொண்டிருக் கிறீர்கள்! எதனால் இப்படி இருக்கிறீர்கள்? கழுதைகளோ உங்களைப் போன்று மாற வேண்டும் என்று கடவுளை வேண்டிக் கொண்டிருக்கின்றன. நீங்கள் யாரைப் போன்று மாற வேண்டும் என்று வானத்தைப் பார்த்தபடி இருக்கிறீர்கள்?'' என்று கேட்டது ஆமை.
" நாங்கள் கழுதைகளைப் போன்று உருவம் மாறிக் கொள்ள வேண்டும் என்று கடவுளைக் குறித்து வேண்டுகிறோம்!'' என்றது ஒரு வாத்து.

அதைக் கேட்ட ஆமைக்கு சிரிப்பு வந்தது.

"வாத்துக்களே! நீங்கள் எல்லாரும் கழுதையைப் போன்ற உருவம் மாற வேண்டும் என்று ஆண்டவனிடம் வேண்டிக் கொண்டிருக் கிறீர்கள்! கழுதைகளோ உங்களைப் போன்று உருவம் மாறிக்கொள்ள வேண்டும் என்று வேண்டிக் கொண்டிருக்கிறது. நீங்கள் உங்களின் அருமையை உணர்ந்து கொள்ளாமல், ஒருவரையொருவர் உருவம் மாற வேண்டும் என்று நினைக்கிறீர்கள்! ஒருவருக்கொருவர் அறியாமலேயே இதனை செய்து கொண்டிருக்கிறீர்கள். முதலாவதாக, நீங்கள் உங்கள் பிறப்பின் உருவத்திற்கு மதிப்புக் கொடுங்கள். உங்களை நீங்களே மதியுங்கள்!'' என்று கூறியபடி சென்றது ஆமை. ஆமையின் கருத்தைக் கேட்ட வாத்துக்கள், தங்கள் தவறை உணர்ந்தன. உடனே அவைகள் எல்லாம் கழுதை களிடம் வந்தன. கழுதைகளிடமும் ஆமை கூறிய கருத்தினை தெரியப்படுத்தின. வாத்துக்களும், கழுதைகளும் தங்களின் தவறை உணர்ந்து தெளிவடைந்தன. அதன் பின்னர் இப்படிப்பட்ட முட்டாள் தனமான எண்ணங்களுக்கு இடம் கொடுக்கவில்லை.

- தினமலர்