Tuesday, January 6, 2015

அவைகளும் நானும் (சிறுகதை)



தினமும் நான் அலுவலகம் செல்லும் அந்த வழியில் நிறைய நாய்கள் உண்டு.ஒரே  குடும்பத்தைச் சேர்ந்த அந்த நாய்களை என்றுமே நான் பெரிதாக  கண்டுகொள்வதில்லை.அதே போல் தான்  அவைகளும் என்னை ஒரு பொருட்டாகவே நினைத்ததில்லை .இந்த உலகத்தில் நம்மைப்போலவே அனைவரும்  இருந்துவிட்டால் என்ன ஆவது? அது நம் ஐந்து விரல்களும் ஒரே அளவாக  இருக்கவேண்டும் என எதிர்பார்ப்பதற்குச் சமமானது.அழகாகத்தான் தெரியும்.ஆனால்  பயனற்ற ஒன்று நாம் எதிர்பார்க்கும் இந்த மாறுதல் . அழகான இந்தத் தத்துவத்தை நீங்கள் ஆராயாமல் அனுபவித்துக்கொண்டிருக்கும் நேரத்தில் அதே தெருவில்  நான் அடிக்கடி பார்க்கும் இன்னொருவரைப்பற்றி சொல்லிவிட ஆசைப்படுகிறேன்..

அவர் அடையாளம் சொல்கிறேன்.அந்த தெரு வழியாக ஒருவேளை நீங்கள் நடக்க  நேர்ந்தால், அவரைப் பார்த்து ஒரு வணக்கம் சொல்லிவிட்டுப் போனால் நான்  சந்தோசப்படுவேன்.அவருக்கு வயது சுமார் 50 இருக்கும்.நல்ல உயரம்,ஒல்லியான  தேகம்.சீப்பைப் பார்க்காத நரைத்த தலை,தொள தொள-வென அவரை விட  பெரியதாய் இருக்கும் அழுக்கு அரைக்கைச் சட்டை,அடர் நிறத்தில் கால்  சட்டை,வேகமான நடை அப்புறம் அந்த நாய்களுக்கு அடிக்கடி உணவிடும்  ஒரேமனிதர் அவர்தான்.எனவே,அவர் அந்த வீதியில் நடக்கும் போது நான் சொன்ன  அந்த நாய்கள் கூட்டம் அன்பாக அவரைச் சூழ்ந்துகொள்ளும்.

இன்றுவரை எனக்கு புதிராகத்தான் தெரிகிறார் அந்த மனிதர்.அதே தெருவில் உள்ள  ஒரு பட்டறையில் வேலை செய்கிறார் என்று நினைக்கிறேன்.ஏனெனில், சிலமுறை  தேநீர் நிரம்பிய பைகளுடன் அந்தப் பட்டறையினுள் நுழைவதைப் பார்த்திருக்கிறேன்.  நீண்ட நேரமாக திரும்ப மாட்டார்.ஆக அவர் தேநீர் விற்பவரில்லை அல்லவா. அதை  வைத்துத் தான் அவர் அங்கே வேலை செய்கிறார் என்ற முடிவுக்கு வந்தேன்.மற்றபடி  எங்கே தங்கியிருக்கிறார்..எவ்வளவு சம்பாதிக்கிறார்,அந்த நாய்களுக்கு உணவிட  தினமும் எவ்வளவு செலவு செய்கிறார் என எதுவுமே எனக்குத் தெரியாது.

நள்ளிரவு சுமார் 1 மணி இருக்கும்.நான் அந்த வீதியில் தனியாக  வந்துகொண்டிருந்தேன்.யாரும் என்னைப்பார்த்து பயப்படவேண்டாம்.ஒரு  தமிழ்ப்படத்தின் இரவுக்காட்சி பார்த்துவிட்டு அறைக்குத்  திரும்பிக்கொண்டிருந்தேன்.திரையரங்கிலிருந்து எனது அறை நடக்கும்  தொலைவுதான்.அது ஒரு நீண்ட நெடிய ஆள் அரவமற்ற சாலை.இருமருங்கிலும்  பாதரசவிளக்குகள் ஒளியைப்பாய்ச்சிக்கொண்டிருந்தன.அந்த வீதியில் வீடுகள்  மிகவும் குறைவு.பட்டறைகள் மற்றும் மாலைவரை செயல்படும் சிறுதொழில்  அலுவலங்கள் தான் அதிகம்.இரவுக்குளிர்க்காற்றை முகத்தில் வாங்கிகொண்டு  மெதுவாக நடந்துகொண்டிருந்தேன்.இதோ பாதி வழி தாண்டியாயிற்று.

இதுவரை என்னைக் கண்டுகொள்ளவில்லை என எந்த நாய்களைப் பற்றி மேலே  குறிப்பிட்டேனோ, அதே அழகு நாய்க்குட்டிகள் அன்று என்னை வைத்தகண்  வாங்காமல் பார்த்தன.என்னையும் அறியாமல் முகத்தில் கலவரம்  பரவியது.இருந்தும் மெதுவாய் நடந்தேன்.இன்னுமொரு 2 நிமிடம் நடந்தால்  அறைக்குச் சென்றுவிடலாம்.அப்போது பார்த்து, ஒரு நாய் குரைக்கத்  துவங்கியது.அதைத் தொடர்ந்து அனைத்து நாய்களும் ஒருசேர கூப்பாடு  போட்டன.அந்த திடீர் சத்தத்தில் சப்தநாடிகளும் அடங்கி நிலைகுழந்திருந்த எனக்கு, நாய்கள் நெருங்குவதைப் பார்க்கையில் மேலும் திகில் பரவியது.இதுவரை எந்த நாயிடமும்  கடி வாங்கியதில்லை என்ற பெருமை எனக்கு எப்போதும் உண்டு.இன்றோடு அது தொலைந்தது  என்றே நினைத்துக்கொண்டேன்.

அலைபேசியை எடுத்து, அப்படி நாய்கள் கடித்தால் யாரை அழைத்து தகவல்  சொல்வது என பார்த்துக்கொண்டிருந்தேன்.அவ்வாப்போது ஊய்..போ..என்றெல்லாம்  நாய்களைப்பார்த்து சத்தமிட்டபடி முன்னேறினேன்.ஒன்றிரண்டு நாய்கள்  கால்களுக்குள் புகுந்து வெளியே வந்தவாறு பயமுறுத்தின.அந்த வினாடியில் இதயம் அப்படியே வாய்வரை வந்து விட்டு  உள்ளே செல்வது போலிருந்தது.ஆபத்துதவி ஆண்டவன்  என நான் இந்த நேரம் சொல்ல  வேண்டுமென்றால்,எங்கிருந்தோ வந்த அந்தப் பெண் நாயைச் சொல்வேன். தூரத்தில் ஊளையிட்ட அதனைப் பார்த்தவுடன் இவை என்னை விட்டுவிட்டு அந்தப் பெண் நாயைத் துரத்தத் துவங்கின.அப்பாடா..இப்போது அப்படி ஒரு நிம்மதி என் மனதில். அறைக்கு வேகமாக வந்த நான் , ஒரு குவளை நீரை மூச்சுவிடாமல் குடித்து முடித்தேன்.இயல்புநிலைக்குத் திரும்பி உறங்குவதற்கு சிறிது நேரம் பிடித்தது.

அடுத்தநாள் காலையில் அலுவலகம் கிளம்பும்போது, என் அறைக்கு முன் இருக்கும் மளிகைக்கடையில்  இரண்டு ரொட்டித்துண்டு பொட்டலங்களை வாங்கிகொண்டேன்.என்றும்போல  என்னை அந்த நாய்கள் கண்டுகொள்ளவில்லை. ஆனால், நான் அருகில்  சென்றேன்.இரவு இருந்த பயம் இப்போது இல்லை. மெதுவாக நெருங்கி  ரொட்டித்துண்டுகளை அவைகளிடம் வீசினேன்.ஒரே பாய்ச்சலில் வந்து  ஆர்வமாய் சாப்பிடத்துவங்கின.சிலவினாடிகள் பார்த்துவிட்டு,மகிழ்ச்சியாக அலுவலகம் நோக்கிப்  புறப்பட்டேன்.இந்த மனநிறைவு உணர்வுக்கு,எவ்வளவு பணம் வேண்டுமானாலும் செலவு செய்யலாம் எனத் தோன்றியது.சிறிதுதூரம் நடந்த நான், மெல்லத் திரும்பினேன்.அங்கே வாலைக் குழைந்தபடி அந்த  நாய்கள் என்னையே பார்த்துக்கொண்டிருந்தன.


- ராஜ்குமார் 

1 comment:

படித்த அடையாளத் தடத்தை இங்கே விட்டுச் செல்லுங்கள் - அன்புடன் ராஜ்குமார்