Thursday, March 5, 2015

படித்ததில் பிடித்தது 15-அழகுப்பெண் மிருதுளா (மந்திரக் கதை)

என்னையும் சேர்த்து அனைவருக்கும் சிறுவயதில் கதை கேட்பது மிகவும் பிடிக்கும்!அதுவும்,மாயாஜால கதைகள் என்றால் கேட்க வேண்டுமா? கைகளை கன்னத்தில் ஊன்றிக்கொண்டு கண் இமைக்காமல் கதை கேட்போம்.எனக்கு  இன்னும் அதுபோன்ற கதைகள் கேட்பதில்,படிப்பதில் ஆர்வம் குறைந்ததாகவே தெரியவில்லை.அவ்வளவு பிடிக்கிறது! நீண்ட நாட்களுக்குப் பிறகு,அரக்கன்,காடு,அழகு பெண்,எலியின் உதவி,கூழாங்கல் மலையாக வளர்வது போன்ற வரிகளைப் படித்து பூரித்தேன்.இதோ அந்த அற்புதக் கதை உங்களுக்காக...

- ராஜ்குமார் 
                                                                     ---------------

முன்னொரு காலத்தில் மடகாஸ்கர் தீவில் மூன்று பணக்கார சகோதரிகள் வசித்து வந்தனர். இவர்களில் கடைசி சகோதரியின் பெயர் மிருதுளா. மூத்த சகோதரிகள் இருவரையும் விட இவள் மிகவும் பேரழகி.
தங்களை விடத் தங்கள் தங்கை அதிக அழகாக இருப்பதால் மூத்த சகோதரிகளுக்கு எப்போதுமே அவள் மீது பொறாமை உண்டு. அவர்களது பெற்றோரும் கடைசி தங்கை மீது மட்டும் பாசமாக இருப்பதால், மூத்த சகோதரிகளுக்கு, அவள் மீது ஆத்திரம் ஏற்பட்டது.
எப்படியாவது அவளைக் கொன்றுவிட வேண்டும் என்று இருவரும் தீர்மானித்தனர்.

சகோதரிகள் இருவரும் காய், கனி, கிழங்குகளைச் சேகரித்து வர அடிக்கடி கானகத்துக்குப் போவது வழக்கம். அதன்படி ஒருநாள் மிருதுளாவையும் அழைத்துக் கொண்டு கானகத்துக்குக் கிளம்பினர். கள்ளங்கபடமற்ற மிருதுளா தன் சகோதரிகளுக்கு உதவுவதற்கு எப்போதும் விருப்பமுடையவள்.
அவர்கள் கானகத்துக்கு உள்ளே சென்றனர். எப்போதும் அவர்கள் கானகத்துக்கு செல்லும் போது வெகுதூரம் செல்ல மாட்டார்கள். ஏனென்றால், கானகத்தின் நடுவே அரக்கனின் தோட்டம் இருக்கிறது. அதில் மிகப் பெரியதும் மிக்க சுவையுடையதுமான பழங்களும், கிழங்குகளும் கிடைக்கும். ஆனால், அரக்கனிடம் சிக்கிக் கொண்டால் அவ்வளவுதான். சிக்கியவர்களை அவன் சுவைத்து விடுவான். ஆகவே, யாரும் கானகத்தின் மையப் பகுதிக்குப் போக மாட்டார்கள்.

மூத்த சகோதரிகள் இருவரும் திட்டமிட்டு வந்திருந்ததால், கொஞ்ச தூரம் கானகத்தில் இங்கும் அங்கும் சேர்ந்தே உணவுப் பொருள்களைச் சேகரித்து விட்டுப் பிறகு, ""நாம் வெவ்வேறு திசைகளில் போய் நிறையப் பழங்களைச் சேமித்து வருவோம்,'' என்று கூறி மிருதுளாவை அரக்கனின் தோட்டம் உள்ள பாதையில் போகச் செய்து இவ்விருவரும் வேறு வேறு பாதைகளில் நல்லவர்களை போலப் பிரிந்து சென்று, மறுபடியும் சேர்ந்து வீட்டுக்குத் திரும்பி விட்டனர்.

மிருதுளாவுக்கு இவர்களுடைய கெட்ட எண்ணம் தெரியாததால் உற்சாகத்துடன் பழங்களையும், காய், கிழங்குகளையும் சேமித்தபடி அரக்கனின் தோட்டத்துக்குள் புகுந்து விட்டாள். அங்கு நிறையப் பழ மரங்களைக் கண்ட மிருதுளாவுக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. அதிலுள்ள அபாயத்தை உணராமல் பெரிய, பெரிய பழங்களாகப் பறித்துச் சேமிக்கலானாள்.

அதே சமயம் அரக்கனும் அவளைப் பிடித்துக் கொண்டான்.
""என் தோட்டத்துப் பழங்களைத் திருடிய நீ என்னுடன் வந்து விடு. உன்னை நான் அன்போடு வளர்க்கிறேன்,'' என்று கூறித் தன் குகைக்கு அழைத்துப் போனான். சின்னப் பெண்ணான மிருதுளா என்ன செய்வாள்? அரக்கனுக்கு அடிமையாகிப் போவதைத் தவிர அவளுக்கு வேறு வழி ஏது?
மிருதுளா வளர்ந்து பெரியவளானாள். அவளை விருந்தாக்கிக் கொள்ள அரக்கனும் ஒரு நாளை மனதுக்குள் குறித்து வைத்தான். அந்த நாளும் வந்தது. வழக்கப்படி வேட்டைக்குக் கிளம்பினான் அரக்கன்.

விபரீதத்தை அறியாமல் வீட்டு வேலை செய்து கொண்டிருந்த மிருதுளாவின் முன்னால் ஒரு சுண்டெலி வந்து நின்றது. அது மட்டுமல்ல. அது அவளை நோக்கிப் பேசவும் செய்தது.

ஆச்சரியப்பட்டுப் போன மிருதுளா, அதை அப்படியே தன் உள்ளங்கைகளில் அள்ளி அணைத்துக் கொண்டாள்.

""எனக்குக் கொஞ்சம் அரிசியும், வெல்லமும் கொடு. நான் ஒரு ரகசியத்தைச் சொல்லுகிறேன்,'' என்றது எலி.

""உனக்கு இல்லாத அரிசியா?'' என்று கூறி அதற்குச் சுவை மிக்க அரிசியும், வெல்லமும் கொடுத்தாள்.

அதை தின்று முடித்ததும் எலி சொல்லிற்று.

""கவனமாகக் கேட்டுக்கொள். அரக்கன் உன்னை இவ்வளவு தளதளவென்று வளர்ப்பது எதற்காகத் தெரியுமா? உன்னையே சாப்பிடுவதற்காகத்தான். அதுவும் இன்றைக்கே நீ அவனுக்கு உணவாகப் போகிறாய். நான் சொல்கிறபடி கேட்டாயானால் அவனிடமிருந்து நீ விரைவில் விடுபடலாம். நான் கொடுக்கும் இந்த பொருள்களை எடுத்துக் கொண்டு இங்கிருந்து ஓட்டம் பிடி. அரக்கன் உன்னை அணுகும் போது இப்பொருள்களை ஒவ்வொன்றாக அவன் முன்னால் போடு,'' என்று கூறிக் காட்டுச் செடிகளைக் கொண்டு தயாரித்த ஒரு துடைப்பத்தையும், ஒரு முட்டையையும், ஒரு மூங்கில் கழியையும், வழுவழுப்பான ஒரு கூழாங்கல்லையும் மிருதுளாவிடம் கொடுத்தது சுண்டெலி.

மிருதுளாவுக்கு ஒரே அதிர்ச்சியாக இருந்தது. சுண்டெலிக்குத் தன் நன்றியைத் தெரிவித்துவிட்டு அங்கிருந்து ஓடுவதற்குத் தயாரானாள். தன் படுக்கையில் ஒரு நெட்டி மரத்துண்டை வைத்து அதைப் போர்வையால் மூடினாள்.
அரக்கன் இரவு வீடு திரும்பினான். உள்ளே எட்டிப் பார்த்தான். படுக்கையில் போர்த்தியபடி மிருதுளா படுத்திருப்பதாக எண்ணி மகிழ்ந்தான்.

""குட்டி நன்றாகத் தின்று கொழுத்துக் கிடக்கிறாள். அதனால்தான் படுக்கையிலிருந்து எழுந்து வரக்கூட முடியாமல் தூங்குகிறாள்,'' என்று தனக்குள் சொல்லிக் கொண்டே ஈட்டியை வெகுவேகமாகப் படுக்கையில் பாய்ச்சினான்.

ஈட்டி நெட்டி மரத்துண்டில் போய்ப் பதிந்தது.

""என்ன சதைப் பிடிப்பான உடல்? ஈட்டி போய் நன்கு பதிந்து விட்டதே?'' என்று வியந்தபடி போர்வையை விலக்கினான். அடுத்த விநாடி அவன் முகம் கோபத்தினால் விகாரமாகியது.

மிருதுளாவின் கால் தடத்தைப் பின் பற்றிச் சென்ற அரக்கன் விரைவிலேயே அவளை நெருங்கினான்.

""என்னிடமிருந்து தப்பி ஓடி விடலாம் என்றா எண்ணினாய்? இதோ, உன்னைப் பிடித்து விட்டேன்,'' என்று ஓடி வந்தான்.

மிருதுளா தன்னிடமிருந்த துடைப்பத்தைக் கீழே போட்டாள். அடுத்த வினாடி காட்டுச் செடிகளாலான அந்தத் துடைப்பம் மிருதுளாவுக்கும், அரக்கனுக்கும் இடையே முட்கள் நிறைந்த குத்துச் செடிப் புதர்களாக வளர்ந்து சுவராக வழிமறித்தது. ஆனால், அரக்கன் தன் பலமான வாளினால் அந்த முட்புதர் சுவரை வெட்டி விலக்கி வழி ஏற்படுத்தி ""இதோ, உன்னைப் பிடித்து விட்டேன்,'' என்றபடி முன்னேறினான்.

மிருதுளா உடனே தன்னிடமிருந்த முட்டையைக் கீழே உருட்டி விட்டாள். அந்த முட்டை பூமியில் பட்டதும் இரண்டாகப் பிளந்து அதிலிருந்து வெள்ளமாக நீர் பெருகி அரக்கனை வழிமறித்தது. ஆனால், அந்தப் பொல்லாத அரக்கன், அத்தனை நீரையும் குடித்து விட்டு அவள் மீது பாய்ந்தான்.
""இந்தத் தடவை மிருதுளா சுண்டெலி கொடுத்த மூங்கில் கழியை கீழே போட்டு விட்டு ஓடினாள். உடனே அவளுக்கும் அவனுக்குமிடையே அந்த மூங்கில் கழி பெரிய அடர்ந்த மூங்கில் காடாக வளர்ந்து வழி மறித்து நின்றது. ஆனால், இந்தத் தடவையும் அரக்கன் தனது வலிமை மிக்க வாளினால் பின்னிப் பிணைந்து நின்ற மூங்கில் காட்டை வெட்டி வழி உண்டாக்கி முன்னேறினான்.

பாவம் மிருதுளா! இனி அவளிடம் இருப்பதெல்லாம் அந்த வழு வழு கூழாங்கல் தான். அதையும் கீழே போட்டுவிட்டுச் செய்வதறியாது நின்றாள்.
அடுத்த வினாடி அந்தக் கூழாங்கல் மள மளவென்று பெரிய மலையாக வளர்ந்தது. அதன் உச்சியிலே அவள் இருந்தாள். எவ்வளவு பெரிய மலை அது? அதன் பக்கங்கள் வழுவழுவென்றிருந்தன. யாராலும் அதைப் பற்றி ஏற முடியாது.

அரக்கன் அந்த வழுவழுப் பாறையில் தன் வலிமை மிக்க வாளினால் வெட்டிப் படிகளை உண்டாக்கி அதன் மீது ஏறினான். ஆனால், அவனால் அதிக தூரம் ஏறமுடியவில்லை. அவன் வாளின் முனை மழுங்கியது. பாறையை வெட்டிப் பாதை அமைக்க முடிய வில்லை.

"மிருதுளா! ஒரு கை கொடுத்து என்னைத் தூக்கு. நான் உன்னைத் துன்புறுத்த மாட்டேன்... என்னை நம்பு!'' என்று கெஞ்சினான் அரக்கன்.
""உன் கையில் இருக்கும் ஈட்டியைக் கீழே போடு,'' என்றாள் மிருதுளா.
அந்த அரக்கனும் கீழே இறங்கித் தன் கையிலிருந்த ஈட்டியை அதன் பலமான கைப்பிடி பூமியில் பதியக் குத்தி வைத்தது. ஈட்டியின் கூரானமுனை ஆகாயத்தை நோக்கிய படி குத்திட்டு நின்றது. மடகாஸ்கர் மக்கள் தங்கள் ஈட்டிகளை இம்முறையில்தான் பூமியில் குத்தி வைப்பர். மிருதுளா ஒரு கயிற்றை மேலிருந்து கீழே அனுப்பினாள்.

அக்கொடிய அரக்கன் அதைப் பற்றிக் கொண்டு மேலே ஏறினான். அந்த வழுக்குப் பாறையின் உச்சியைச் சமீபித்ததும், ""மிருதுளா! நான் உன்னை கடைசியில் பிடித்து விட்டேன். எத்தனை ருசியாய் இருப்பாய் நீ!'' என்றான்.
அவ்வளவு தான் மிருதுளா தான் பற்றி இருந்த கயிற்றை அப்படியே நழுவவிட்டாள். அரக்கன் மலை உச்சியிலிருந்து தலை குப்புறக் கீழே, பூமியில் நட்டு விட்டு வந்த ஈட்டியின் முனை மீது விழுந்தான். கழுவில் ஏற்றப்பட்ட அந்தக் கெட்ட அரக்கன் செத்து ஒழிந்தான்.
மலை உச்சியிலிருந்த மிருதுளா எப்படிக் கீழே இறங்குவது என்று யோசித்தாள்.

அப்போது பறவைகளின் கூட்டம் ஒன்று மிருதுளாவை நோக்கி வந்தது. அவள் ஆடையை தங்கள் அலகினால் பற்றிப் பறந்தபடி கீழே கொண்டு வந்து இறக்கின.

மிருதுளா பறவைகளுக்கு நன்றி கூறி விட்டு, மகிழ்ச்சியுடன் தன் வீட்டுக்கு போனான்.

மிருதுளாவை கண்டதும் அவள் பெற்றோர் மகிழ்ந்தனர். தன் பெற்றோரிடம் நடந்ததை கூறினாள் மிருதுளா. மூத்த சகோதரிகள் இரு வரையும் பெற்றோர் வீட்டை விட்டு வெளியே விரட்டியடித்தனர். பிறகு மிருதுளாவை நன்றாக பார்த்துக் கொண்டனர்.

நன்றி-தினமலர்

No comments:

Post a Comment

படித்த அடையாளத் தடத்தை இங்கே விட்டுச் செல்லுங்கள் - அன்புடன் ராஜ்குமார்