Tuesday, August 9, 2016

படித்ததில் பிடித்தது 16 - எது அமைதி (குட்டிக்கதை)

நாட்ல அப்பப்போ ஏதாவது போட்டிகள் நடத்தி; வெற்றி பெறுபவர்களுக்கு சன்மானம் அளிப்பது அந்த மன்னனின் வழக்கம்.

      ஒருமுறை 'அமைதி' ன்னா என்ன?  அப்படிங்கறத தத்ரூபமான ஓவியமா வரைபவர்களுக்கு மிகச் சிறந்த பரிசு வழங்கப்படும்னு அறிவிச்சாரு.

      இதையடுத்து நாட்டின் முன்னணி ஓவியர்கள் அமைதியை பிரதிபலிக்கும் வண்ணம் தத்ரூபமான பல ஓவியங்களை வரைந்து அரண்மனைக்கு எடுத்து வந்தாங்க.!

        மன்னன் ஒவ்வொரு ஓவியமா பார்வையிட்டுட்டே வந்தான். ஒவ்வொரு ஓவியரும் ஒரு மாதிரி பிரதிபலித்து இருந்தாங்க.!

   ஒருத்தர் அழகான ஏரியை ஒரு அழகிய மலையின் அடிவாரத்தில் இருக்கற மாதிரி வரைஞ்சிருந்தாரு. மலையின் பிம்பம் ஏரியில் பிரதிபலித்து பார்க்கவே ரம்மியமா இருந்தது.!!

      மற்றொருத்தர் பார்த்தவுடனே பறிக்கத் தூண்டும் வகையில் மலர்களை தத்ரூபமாக வரைஞ்சிருந்தாரு. இப்படி ஒவ்வொருவரும் அமைதியை தங்களுக்கு தோன்றினபடி ஓவியத்தில் பிரதிபலிச்சிருந்தாங்க.!

     ஆனா, ஒரே ஒரு ஓவியத்தில் ஒரு மலை மேலிருந்து ஆக்ரோஷமா கொட்டும் நீர்வீழ்ச்சியின் படம் வரையப்பட்டிருந்துச்சு. அதுமட்டுமா இடியோட மழை வேற கொட்டிட்டிருந்தது.
      இது அமைதியே அல்ல.  சற்று உற்று பார்த்தப்ப நீர்வீழ்ச்சியின் கீழே இருந்த மரம் ஒன்றில் கூடு கட்டியிருந்த பறவை ஒன்று கூட்டில் தனது குஞ்சுகளோட காணப்பட்டது.!!

   "இந்த ஓவியத்தை வரைந்தது யார்?" சம்பந்தப்பட்ட ஓவியர் எதிரே நிறுத்தப்பட்டாரு.!

     மன்னர்., " இந்த ஓவியம் தத்ரூபமாக பார்க்க அழகாக இருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை. ஆக்ரோஷத்துடன் கொட்டும் அருவி, இடியுடன் கூடிய மழை. கீழே மரத்தில் தனது கூட்டில் ஒரு பறவை. ஆனால் இதில் அமைதி எங்கே இருக்கிறது?" ன்னாரு.

       அதுக்கு ஓவியர், " மன்னா சப்தமும், பிரச்சனையும், போராட்டமும் இல்லாத இடத்தில் இருப்பது அமைதி அல்ல ...!

      இவை எல்லாம் இருக்கும் இடத்தின் நடுவே இருந்து கொண்டு, எதற்கும் கலங்காமல் எதுவும் தன்னை பாதிக்கவிடாமல் பார்த்துக்கொண்டு உள்ளுக்குள் அமைதியாக இருப்பதே உண்மையான அமைதி.!

    அப்படி பார்க்கும்போது குஞ்சுகளுடன் இருக்கும் இந்த பறவையே பரிபூரணமான அமைதியில் இருக்கிறது.!"

    "சபாஷ் .. அமைதிக்கு ஒரு அற்புதமான விளக்கம்" னு கைதட்டின மன்னன் அந்த ஓவியத்திற்கே முதல் பரிசு கொடுத்தான்!!.

   ஆக நண்பர்களே., அனைத்து சௌகரியங்களும் அமையப்பெற்று எந்த வித பிரச்சனையும் இல்லாத ஒரு சூழலில் வாழ்வது அமைதியல்ல. அது ஒரு வாழ்க்கையும் அல்ல.
     ஆயிரம் துன்பத்திற்கு நடுவே, " நிச்சயம் ஒருநாள் விடியும் " என்று விடாமுயற்சியோட தினசரி உழைச்சிட்டிருக்காங்களே அவர்களிடம் இருப்பது தான் அமைதி...!