Monday, April 22, 2013

படித்ததில் பிடித்தது 5 - ஆசைகள்



மாவீரன் அலெக்ஸாண்டரின் கடைசி ஆசைகள்


மாவீரன் அலெக்ஸாண்டர் எல்லா நாடுகளையும் கைப்பற்றி விட்டு தாய்நாடு திரும்பும் வழியில் நோய்வாய்ப்பட்டார். பல மாதங்கள் ஆகியும் அவருக்கு அந்த நோய் தீரவில்லை. சாவு தன்னை நெருங்குவதை உணர்ந்தார் அவர்.

ஒருநாள் தன்னுடைய தலைமை வீரர்களை அழைத்து, "என்னுடைய சாவு நெருங்கி விட்டது. எனக்கு மூன்று ஆசைகள் உள்ளன. அவற்றை நீங்கள் கண்டிப்பாக நிறைவேற்றி வைக்க வேண்டும்" என்று கட்டளையிட்டார்.

அவர்களும் அவற்றை நிறைவேற்றுவதாக வாக்களித்தனர்.

முதல் விருப்பமாக, "என்னுடைய சவப்பெட்டியை எனக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் மட்டுமே தூக்கி வர வேண்டும்."

இரண்டாவது, 'என்னைப் புதைக்கும் இடத்திற்குச் செல்லும் வழியானது நான் சம்பாதித்து வைத்த, விலைமதிப்பற்ற கற்களால் அலங்காரம் செய்யப்பட வேண்டும்."

மூன்றாவதாக, "என் கைகள் இரண்டையும் சவப்பெட்டிக்கு வெளியில் தெரியுமாறு வைக்க வேண்டும்."

வீரர்களுக்கு இந்த ஆசைகள் வித்தியாசமாகத் தெரிந்தன. என்ன காரணமாக இருக்கும் என்று கேட்கப் பயந்தார்கள்.

அதில் ஒருவன் தைரியமாக முன்வந்து, "அரசே! நாங்கள் தங்கள் ஆசையைக் கண்டிப்பாக நிறைவேற்றுகிறோம். ஆனால், இதற்கான காரணத்தை தாங்கள் விளக்க வேண்டும்" என்று கேட்க, அலெக்ஸாண்டர் அதற்கு விளக்கமளித்தார்.

1.
என்னுடைய சவப்பெட்டியை மருத்துவர்கள் தூக்கிச் செல்வதால், உலகில் உள்ள எல்லோரும் ஒரு விஷயத்தை அறிந்து கொள்வார்கள். மருத்துவர்களால் எந்த ஒரு நோயிலிருந்தும் ஒரு உயிரை நிரந்தரமாகக் காப்பாற்ற முடியாது. மரணத்தை அவர்களால் நிறுத்த முடியாது.

2.
வாழ்க்கையில் எவ்வளவு பணமும், நாடுகளும், இன்ன பிற செல்வங்களும் சம்பாதித்தாலும், அவற்றை உன்னுடன் எடுத்துச் செல்ல முடியாது. அது சவக்குழி வரை மட்டும்தான்! மனிதர்கள் வீணாக அதன் பின்னால் செல்ல வேண்டாம் என்பதைத் தெரியப்படுத்துவதற்காக!

3.
உலகையே வென்றவன் சாகும்போது கைகளில் ஒன்றுமில்லாதவனாகத்தான் இருக்கிறான் என்று அறிந்து கொள்வதற்காக.
 

கிடா விருந்து அழைப்பு!


சித்திரை மாசம் வந்தாலே பெரும்பாலான கிராமங்கள்ல திருவிழா களைகட்டும்.குறைஞ்சது 3வார விழாவ நடத்துவாங்க.பூப்போட்டு அம்மை அழைக்கிறதுல இருந்து,கம்பம் நட்டு,திருவிழா எடுத்து மஞ்சள்நீர்,மறுபூசை வரை பல கட்டமா,உற்சாகம் குறையாம ஊர் முழுக்க கொண்டாடுவாங்க.இத்தனை அலம்பல்ல, வராத மழை கூட வந்துடும்-ங்கிறது நம்பிக்கை.போன வருசம் கூட பருவம் மாறாம கொஞ்சம் மழை வந்துச்சு.இந்த ஒரு வருசமா சொட்டுத்தண்ணி கூட பார்க்கமுடியல.புயல் தள்ளிவிட்ட மேகங்கள் மட்டும் அப்பப்ப வந்து கண்ணீர்விட்டுட்டு போனது.போன வாரம் எங்க ஊருல கம்பம் நட்டு,இந்தவார விழா நடக்கப்போவதை உறுதி செய்திருந்தாங்க.அந்தன்னைக்கு மழை வரும்னு எல்லாரும் வானத்தைப் பார்த்துக் கிடந்தோம்.பூசாரி போட்ட தீர்த்தம் தான் மிச்சம்.


   சாமிவந்து ஆடின அந்த பூசாரி சிபிஐ கணக்கா ஒன்னு சொன்னாரு,"ஊர் எல்லையில எவனோ உரலைப் போட்டு வச்சிருக்கான்.அத எடுத்து எறிஞ்ச உடனே மழை வரும்"னு.நான் சிரிச்சுகிட்டே வீட்டுக்கு வந்துட்டேன்.சொல்லி ஒருவாரம் ஆனாலும் மழையைக் காணோம்.அதுக்காக, பூசாரிக்கு அருள்வரலை,சாமி வாக்கு சரியா குடுக்கலை அப்டினு முடிவு சொல்றேன்னு நினைக்கக் கூடாது.மக்களே மறந்தாச்சு.வர்ற நோம்பிக்கு கறிசோறு தின்னப்போறோம்னு சந்தோசமோ என்னமோ.ஆடு,கோழின்னு பக்தியோட வெட்டி சாமிக்கா ஊட்டி விடறோம்?நம்ம காசு.நம்ம வயிறு.சாமிக்கு என்ன தெரியும்னு நெனச்சாங்களோ என்னமோ?

நான் சொல்ல வந்ததை விட்டு எதையோ பேசிட்டிருக்கேன்.

   இந்த மாரியம்மன்கோவில் பொங்கல் விழாவுக்கு,கிடாய் வெட்டி சொந்தங்களை அழச்சு விருந்துபோடலாம்னு எங்க வீட்டுல முடிவு செஞ்சோம்.போன் பண்ணி எல்லாரையும் அழைச்சா போதும்னு வீட்டுல பேசிகிட்டாங்க.ஒரு பெரிய மனுசன் வாய வச்சுட்டு சும்மா இருக்காம,"அதென்ன போன்ல கூப்படறது?புதுவீடு கட்டிருக்கோம்.மொதவிருந்து அங்க போடப்போறோம்.நேர்ல கூப்பிட்டாதான் நல்லா இருக்கும்!"னு சொல்ல,.எல்லாரும் சரின்னு சொல்லிட்டங்க.அதுமட்டுமில்லாம,அந்த பெரிய மனுசனையே சொந்தக்காரங்களை அழைக்கபோகச் சொல்லிட்டாங்க. 

   அந்தப் பெரிய மனுசன் நான்தான்ங்கிறதால சனிக்கிழமை காலைல நேரமாவே வண்டிய விட்டேன்.கொளுத்துற வெயில்னு கேள்விப்பட்டிருக்கேன்.பதிலை நல்லா பட்டுத் தெரிஞ்சுகிட்டேன்.போற வீடுகள்ல தண்ணீர்பதார்த்தமா சாப்பிட்டதால,தாக்கம் பெருசா தெரியல (தாக்கம் தான். தாகம்-னு நினச்சு எனக்கு தமிழ் வராதுன்னு முடிவு கட்டிடாதீங்க).போன வாரம் நெறஞ்ச மழை பேஞ்சதால,சூடு கொறஞ்சிருக்குன்னு சில ஊர்ல சொன்னாங்க."அடே பாருடா.நம்ம ஊரு மாரியாத்தா இந்த ஊருக்கு இறைச்சுவிட்டிருக்கா!"னு மனசுக்குள்ள நினச்சுகிட்டேன்.

   வீடுவந்து சேர 5 மணி ஆகிடுச்சு.உத்தேசமா 120கல் தூரத்தை வண்டியில கடந்திருப்பேன்.சூட்டுல கண்ணு ரெண்டும் கோவப்பழமா சிவந்திடுச்சு.தலை நிறைய எண்ணெய பூசிகிட்டு,படுத்துகிட்டேன்.மெதுவா கண்ணைமுழிச்சு பார்த்தப்போ சென்னை அணி விளையாட்டு டிவிக்குள்ள நடந்துகிட்டுஇருந்தது.திடும்மென எழுந்து உட்கார்ந்து,அரைத்தூக்கத்தில கைதட்டிட்டிருந்தேன்.என்ன நடக்குதுன்னே காலைல வரை தெரிய.அவ்வளவு அலுப்பு.

   இந்தவாரம் வியாழக்கிழமை திருவிழா வரப்போகுது.அழைச்ச சொந்தக்காரங்க எல்லாம் வருவாங்க.அவங்களோட சேர்ந்து கிடா விருந்து சாப்பிடப்போறேன்.நாள் முழுக்க எங்கவீடு நெறைய உறவுகள் இருக்கப்போறாங்க.அடுத்த விசேசம் வரை காணக்கிடைக்காத காட்சி அது.இந்த எண்ணம் மனசுக்குள்ள வரும்போதே,அலுப்பு சலிப்பெல்லாம் தண்ணிவத்திப்போன பக்கத்து ஊரு ஆத்தோட போயிருது.

 இன்னொரு முக்கியமான விசயம்.படிக்கிற நீங்களும் எங்க வீட்டு விருந்துக்கு வந்துடுங்க.அப்புறம் சொல்லலனு கோவிச்சுக்கப்படாது.

மாரியம்மன் கோவில் சித்திரைத் திருவிழா

நாள் : 25 April வியாழன்,2013
இடம் : எங்க வீடு