Showing posts with label கதைகள். Show all posts
Showing posts with label கதைகள். Show all posts

Monday, November 19, 2018

குறுங்கதைகள்

Tech Geek

" Tech " என முன்புறமும்," Geek " என்று பின்னாலும் எழுதிய T-shirt அணிந்து கொண்டு, தான் முன்னே வாங்கி வைத்த வடையும்,இட்லியையும் எந்த டேபிளில் வைத்தோம் என்று தெரியாமல் திருதிருவென விழித்தபடி,ஒருகையில் காபி சிந்துவது கூடத் தெரியாமல்,இன்னொரு கையில் "Whatsapp status" பார்த்துக் கொண்டு சுற்றி சுற்றி நடந்த அந்த சக தொழிலாளியைப் பார்த்தபோது மனதில் சொல்லிக்கொண்டேன்..இவன் "
Tech Geek" இல்லை.."Tech Freak ".

கஜா புயல்..

  புயலால் மரங்கள் சரிந்து வெள்ளம் கரைபுரண்டு ஓடிய பொழுதில், சரிந்த மரங்கள் மீது நின்றும், வெள்ளத்தின் ஓரத்திலும் நின்று எடுக்கப்பட்ட selfie -கள் சமுதாயத்திற்கு சொல்வது என்ன?

வழி..

Google Map -ல் வழிதேடி எளிதில் நண்பன் வீட்டை வந்தடைந்தேன்..
ஆனால், திரும்பி வரும்போது தான் தெரிந்தது, எனது பயண அனுபவங்கள் எல்லாம் google map history -க்குள் முடங்கி விட்டன என்று..அதில் நான் தொலைத்தவை உணர்வுகளும்,பல மனித முகங்களும்...

அதற்குத் தக..

உதவி என்று கேட்டவர்களுக்கு உன் கைகள் உதவட்டும். ஒரு கை உனக்கு என்றால்,மற்றது,ஏழை எளியவர்களுக்கு கொடுப்பதற்கு என்ற ஒரு சினிமா வசனத்தைக் கேட்டுக்கொண்டே நகர்ந்த என்னிடம் ,"சாமி..சாப்பிட்டு நாலு நாள் ஆச்சு சாமி..எதாவது போடுங்க.." என்றது சிறுவனின் கூக்குரல்.."சில்லறை இல்ல.." என்று சொல்லிவிட்டு வழக்கம் போல அவனைக் கடந்து வந்துவிட்டேன்.யாரோ யாரையோ சத்தமாகத் திட்டியது காதில் விழுந்தது..மன்னிக்க வேண்டும்.அது எழுத இயலாத கெட்டவார்த்தை.
எனக்கு எனோ சுருக்கென்றது..


- ராஜ்குமார்
16-11-18 10:50

Wednesday, September 28, 2016

சின்னதாய் ஒரு காதல் கதை!

ஒரே பள்ளியில்,ஒரே வகுப்பில்சேர்ந்த இருவருக்கும் ஒரேவயதுதான்!மூன்று வயதில் காதல்வருமா? வந்தது அவனுக்கு!அவள்,அவனை விட படிப்பில் சுட்டி!அருகில் வந்து அனுமதிகேட்காமல் அமர்ந்து பேசுபவள்!

கடையில் என்ன வாங்கிவந்தாலும் பங்கிட்டு அவனுக்கும்கொடுப்பவள்!

இதுபோன்ற பல காரணங்கள்இருந்தது அவனது காதலுக்கு!

அன்று வகுப்பு துவங்கியது!அவனுக்கு கவனம் முழுக்க அவள் மீதுதான்!

உடன் இருந்த நண்பன்சொன்னான்!,"டேய்.அவகிட்ட லவ்சொல்லிடு.இல்லனா அந்தசோடாபுட்டி உஷார்

பண்ணிடுவான்!" என்று!

"அவ கிட்ட போனாவே, என்னமோமாதிரி இருக்குடா.எப்படிசொல்றது?" என்று நண்பனைக்கேட்டான்

"ஒன்னுமில்ல டா..எதுவும்பேசவேணாம்! அவ முன்னாடிபோய் நின்னு, உன் காதுல விரல்வச்சு,யானை காதாட்டுற மாதிரிபண்ணு!அதுக்கு பேர் தான்காதலிக்கிறது! அவபுரிஞ்சுக்குவா!" என்ற

விஞ்ஞானப்பூர்வ அறிவுரையைநண்பன் வழங்க,அதை முயற்சித்துப் பார்ப்பதென அவன்முடிவு செய்தான்!

வகுப்பு முடிந்து அனைவரும்வெளியே சென்றுவிட, அவளும்அவனும் தனியாக வகுப்பில்!

"சாப்பிடப் போகலயா?" என தனதுLunch Box எடுத்துக்கொண்டுஅவள் கேட்க, இவன் எதுவும்பேசாமல்

அவள் முன்னால் சென்று"காதலித்து"க் காட்டினான்!அவ்வளவுதான்! அவள் கீழேபுரண்டு புரண்டு அழ

ஆரம்பித்தாள். சத்தம் கேட்டு ஆயாஎன்னவெனக் கேட்க,அவள் என்னசொல்வாளோ என்ற பயத்தில்அவன் நின்று கொண்டிருந்தான்.

"எனக்கு அம்மா வேணும்! வரச்சொல்லுங்க!" என அவள்நிறுத்தாமல்அழுதுகொண்டிருந்தாள்!

ஆயா, அவளைக் கூட்டிக்கொண்டுவெளியே சென்ற உடனே, அவனும்ஒரே ஓட்டமாக வெளியேசென்றான்!

அறிவுரை சொன்ன நண்பனைக்கடிந்து கொண்டான்! "Bubble Gumலவிட்ட குமிழ் மாதிரி அழகா இருந்தஅவ முகத்தில் கண்ணீரைப்பார்க்க வச்சிட்டியே!.போடா!" எனதிட்டித் தீர்த்தான்.

அடுத்தநாள் அவளது போலிஸ்அம்மாவுடன் பள்ளிக்கு வந்து,ஆசிரியையிடம் ஏதோ புகார்செய்துகொண்டிருந்தாள்! அவள்அம்மா சொன்ன கடைசி வார்த்தைமட்டும் தெளிவாகக்

கேட்டது! "இனி என்பொண்ணுகிட்ட அந்தமாதிரி சொன்னான்னு தெரிஞ்சா,அப்புறம் நான் யார்னு காட்ட

வேண்டியதுவரும்!".அவ்வளவுதான்! அதன்பிறகு அவளை அவன் பார்ப்பதுகூட இல்லை.அவளும் தான்!

அவள் அம்மாவிடம் என்னசொல்லியிருப்பாள் என்றகேள்விக்கு கடைசிவரைஅவனுக்கு விடைகிடைக்கவில்லை.

வருடங்கள் கடந்தன! பள்ளியில்பிரிந்த காதல், கல்லூரியில்சேர்ந்தது! ஒரே அலுவலகத்தில்சேர்ந்த அவர்களுக்கு காதலிக்கநேரம் உண்மையில்இல்லாமல்தான் இருந்தது!பெற்றோர் எதிர்ப்பை சம்மதமாகமற்றிய பிறகே இருவரும்திருமணம் செய்துகொண்டனர்!

முதல் இரவில் தனது நீண்டகாலக்குழப்பத்தைப் பற்றி அவளிடம்கேட்டான்! "உனக்கு நியாபகம்இருக்கா! நான் School-ல உங்கிட்டஇப்டி பண்ணிக்காட்டினேன் ல.அப்போ எதுக்கு அழுத?.வீட்லஎன்ன சொன்ன?" என காதில்கைவைத்தபடியே கேட்டான்!

"பின்ன! கொழுக்மொழுக்னுஇருந்த என்னை பார்த்துயானைனு சொன்னா கோவம்வராதா?" எனக் குழந்தைத்தனமாகக் கேட்டாள்!அவனுக்குத்தூக்கிவாரிப்போட்டது! "அப்படியா நினைத்தாய்?" என

ஆச்சரியமாகக் கேட்டான். "வேறஎன்னவாம்? எனக்கு ரொம்பவருசம் கோபம் உன் மேல!அப்புறம் எனக்கே என்னை பார்க்கஅப்படி தெரிய ஆரம்பிச்சது!அப்புறம், 12 ஆம் வகுப்பு முடிஞ்ச

உடனே Slimஆகிட்டேன்! எல்லாம் நீசொன்ன comments தான்காரணம்!.நம்ம காதலுக்கும்உன்னோட அந்த அக்கறை தான்காரணம்" எனச் சொல்லிமுடித்தாள்!

அவன் எதுவும் பேசவில்லை.தனது அசட்டு நண்பனின்ஐடியாவையும், தனதுமுட்டாள்தனமான புரிதலையும்நினைத்துப் புன்னகைத்துக்கொண்டான்!

காரணம் புரியவில்லை எனினும்,அவளும் புன்னகைத்துக்கொண்டாள்!

கதை புன்னகையோடு முடிகிறது!

- ராஜ்குமார்

Tuesday, August 9, 2016

படித்ததில் பிடித்தது 16 - எது அமைதி (குட்டிக்கதை)

நாட்ல அப்பப்போ ஏதாவது போட்டிகள் நடத்தி; வெற்றி பெறுபவர்களுக்கு சன்மானம் அளிப்பது அந்த மன்னனின் வழக்கம்.

      ஒருமுறை 'அமைதி' ன்னா என்ன?  அப்படிங்கறத தத்ரூபமான ஓவியமா வரைபவர்களுக்கு மிகச் சிறந்த பரிசு வழங்கப்படும்னு அறிவிச்சாரு.

      இதையடுத்து நாட்டின் முன்னணி ஓவியர்கள் அமைதியை பிரதிபலிக்கும் வண்ணம் தத்ரூபமான பல ஓவியங்களை வரைந்து அரண்மனைக்கு எடுத்து வந்தாங்க.!

        மன்னன் ஒவ்வொரு ஓவியமா பார்வையிட்டுட்டே வந்தான். ஒவ்வொரு ஓவியரும் ஒரு மாதிரி பிரதிபலித்து இருந்தாங்க.!

   ஒருத்தர் அழகான ஏரியை ஒரு அழகிய மலையின் அடிவாரத்தில் இருக்கற மாதிரி வரைஞ்சிருந்தாரு. மலையின் பிம்பம் ஏரியில் பிரதிபலித்து பார்க்கவே ரம்மியமா இருந்தது.!!

      மற்றொருத்தர் பார்த்தவுடனே பறிக்கத் தூண்டும் வகையில் மலர்களை தத்ரூபமாக வரைஞ்சிருந்தாரு. இப்படி ஒவ்வொருவரும் அமைதியை தங்களுக்கு தோன்றினபடி ஓவியத்தில் பிரதிபலிச்சிருந்தாங்க.!

     ஆனா, ஒரே ஒரு ஓவியத்தில் ஒரு மலை மேலிருந்து ஆக்ரோஷமா கொட்டும் நீர்வீழ்ச்சியின் படம் வரையப்பட்டிருந்துச்சு. அதுமட்டுமா இடியோட மழை வேற கொட்டிட்டிருந்தது.
      இது அமைதியே அல்ல.  சற்று உற்று பார்த்தப்ப நீர்வீழ்ச்சியின் கீழே இருந்த மரம் ஒன்றில் கூடு கட்டியிருந்த பறவை ஒன்று கூட்டில் தனது குஞ்சுகளோட காணப்பட்டது.!!

   "இந்த ஓவியத்தை வரைந்தது யார்?" சம்பந்தப்பட்ட ஓவியர் எதிரே நிறுத்தப்பட்டாரு.!

     மன்னர்., " இந்த ஓவியம் தத்ரூபமாக பார்க்க அழகாக இருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை. ஆக்ரோஷத்துடன் கொட்டும் அருவி, இடியுடன் கூடிய மழை. கீழே மரத்தில் தனது கூட்டில் ஒரு பறவை. ஆனால் இதில் அமைதி எங்கே இருக்கிறது?" ன்னாரு.

       அதுக்கு ஓவியர், " மன்னா சப்தமும், பிரச்சனையும், போராட்டமும் இல்லாத இடத்தில் இருப்பது அமைதி அல்ல ...!

      இவை எல்லாம் இருக்கும் இடத்தின் நடுவே இருந்து கொண்டு, எதற்கும் கலங்காமல் எதுவும் தன்னை பாதிக்கவிடாமல் பார்த்துக்கொண்டு உள்ளுக்குள் அமைதியாக இருப்பதே உண்மையான அமைதி.!

    அப்படி பார்க்கும்போது குஞ்சுகளுடன் இருக்கும் இந்த பறவையே பரிபூரணமான அமைதியில் இருக்கிறது.!"

    "சபாஷ் .. அமைதிக்கு ஒரு அற்புதமான விளக்கம்" னு கைதட்டின மன்னன் அந்த ஓவியத்திற்கே முதல் பரிசு கொடுத்தான்!!.

   ஆக நண்பர்களே., அனைத்து சௌகரியங்களும் அமையப்பெற்று எந்த வித பிரச்சனையும் இல்லாத ஒரு சூழலில் வாழ்வது அமைதியல்ல. அது ஒரு வாழ்க்கையும் அல்ல.
     ஆயிரம் துன்பத்திற்கு நடுவே, " நிச்சயம் ஒருநாள் விடியும் " என்று விடாமுயற்சியோட தினசரி உழைச்சிட்டிருக்காங்களே அவர்களிடம் இருப்பது தான் அமைதி...!

Tuesday, June 2, 2015

எனக்குப் பிடித்த தத்துவங்கள் - ராஜ்குமார்


  • அடிக்கடி தவறு செய்பவன் அப்பாவி. ஒரே தவறைத் திரும்பத் திரும்ப செய்கிறவன் மூடன். ஒரு தவறுமே செய்யாதவன் மரக்கட்டை. தன்னையறியாமல் தவறு செய்து, தன்னையறிந்து திருத்திக் கொள்கிறவனே மனிதன்.

  • நிலத்தில் வளரும் களைகள் பெரிய மரங்களாவதில்லை. அற்ப ஆசைகள் பெரிய வெற்றியைத் தேடித் தருவதில்லை.

  • மலரைப் பார்; கொடியைப் பார்; வேர் எப்படி இருக்குமென்று பார்க்க முயற்சிக்காதே. அதைப் பார்க்க முயன்றால், நீ மலரையும் கொடியையும் பார்க்க முடியாது.

  •  ஒவ்வொரு மரணமும் அழுகையோடு முடிந்து விடுகிறது. ஒவ்வொரு அழுகையும் மரணத்தோடு முடிந்து விடுகிறது
  • மனிதன் சந்தோஷமாக இருக்கும் பொழுது தனக்கு ஏதாவது துன்பம் வந்து விடுமோ என்ற பயத்திலேயே வாழ்கிறான்.
    அந்த நேரத்தில் ஒரு சிறிய பயத்தைக் கொடுத்தாலும் அவன் அதிகமாக பயந்து விடுகிறான்.இதே கவலையான நேரத்தில் அந்தக் கவலையை விட தனக்கு வேறு துன்பம் இல்லை என்று அரட்டுகிறான்.


அறிவுரைகள்

·   அதிகம் நல்லவனாக இருக்க. நினைக்காதே.உன்னை நடிகன் என்று சொல்லிவிடுவார்கள்!

·   அதிகம் அன்போடு நடந்து கொள்ளாதே.அடிமையாக்கி விடுவார்கள்!

·    அதிகப் பொறுமையுடன் நடக்காதே.பொறுக்கியாக மாறும் வரை விடமாட்டார்கள்!

·   எல்லாம் வெளிப்படையாக இருக்க வேண்டும் என நினைக்காதே.பொறாமையால் உன்னை காணாமல் ஆக்கி விடுவார்கள்!

·  எல்லோரையும் நம்பி விடாதே.ஏமாற்றுபவர்கள் நிறைய இருக்கிறார்கள்!

·  கோபப்படாமலேயே இருந்து விடாதே.கோமாளியாக்கி விடுவார்கள்!
 24 குருமார்கள்
தத்தாத்ரேயர் காட்டில் சுற்றிக் கொண்டிருந்த போது, யது என்ற மன்னனைச் சந்தித்தார். தத்தாத்ரேயர் மிக மகிழ்ச்சியாக இருந்ததைக்கண்ட அவன், அவரது மகிழ்ச்சிக்கான காரணத்தையும், அவரது குரு யார் என்பதையும் கேட்டான்.

எனக்கு 24 குருமார்கள் இருக்கின்றனர்…’ என்றார்.

இந்தப் பதிலைக் கேட்டு ஆச்சரியப்பட்ட மன்னன், “சுவாமி! ஒரு வருக்கு ஒரு குரு தானே இருக்க முடியும்? தங்கள் பதில் வித்தியாசமாக உள்ளதே…’ என்றான்.

அவனிடம், “பஞ்சபூதங்களான ஆகாயம், நீர், நிலம், நெருப்பு, காற்று, சந்திரன், புறா, மலைப்பாம்பு, கடல், விட்டில்பூச்சி, வண்டு, தேனீ, குளவி, சிலந்தி, யானை, மான், மீன், பருந்து, பாம்பு ஆகியவையும், நாட்டியக் காரி பிங்களா, ஒரு குழந்தை, ஒரு பணிப்பெண், அம்பு தயாரிப் பவன், சூரியன் ஆகியோரும் என் குருக்கள் ஆவர்…’ என்றார் தத்தாத்ரேயர். மன்னன் ஏதும் புரியாமல் நின்றதைக் கண்ட தத்தாத்ரேயர் இதற்கு விளக்கமளித்தார்

மன்னா! பொறுமையை பூமியிடம் கற்றேன்; தூய்மையை தண்ணீரிடம் தெரிந்து கொண்டேன். பலருடன் பழகினாலும், பட்டும், படாமல் இருக்க வேண்டும் என்பதைக் காற்றிடம் படித்தேன். எதிலும் பிரகாசிக்க வேண்டும் என்பதை தீ உணர்த்தியது; பரந்து விரிந்த எல்லையற்ற மனம் வேண்டும் என்பதை ஆகாயம் தெரிவித்தது.

ஒரே சூரியன் இருந்தாலும் பல குடங்களில் உள்ள தண்ணீரில் பிரதிபலிப்பது போல மனம் ஒன்றாக இருந்தாலும் பலவாறாக சிந்திப்பதை உணர்ந்தேன்.

வேடன் ஒருவன் புறாக்குஞ்சு களைப் பிடித்தான். அவற்றின் மீது அன்பு கொண்ட தாய்ப்புறா தானும் வலியச் சென்று வலையில் சிக்கியது. இதில் இருந்து பாசமே துன்பத்திற்கு காரணம் என்பதை உணர்ந்தேன்.

எங்கும் அலையாமல் தன்னைத் தேடி வரும் உணவைப் பிடித்துக் கொள்வது போல, கிடைப்பதை உண்டு பிழைக்க வேண்டும் என்பதை மலைப்பாம்பிடம் கற்றேன். பல்லாயிரம் நதிகளை ஏற்றுக்கொள்ளும் கடல் போல, எவ்வளவு துன்பம் வந்தாலும் ஏற்கும் பக்குவத்தை கடலிடம் படித்தேன். பார்வையை சிதற விடாமல் ஒரே இடத்தில் மனதை செலுத்துவதை விட்டில் பூச்சி கற்றுத் தந்தது.

எல்லாவற்றையும் மறந்து மகிழ்ச்சியாயிருப்பதை தாயிடம் பால் குடிக்கும் குழந்தையிடம் கற்றேன். பணிப்பெண் ஒருத்தி அரிசி புடைக்கும்போது வளையல்கள் உரசி ஒலி எழுப்பின; இரண்டு வளையல்களில் ஒன்றை அவள் கழற்றியதும், ஒலி அடங்கியது. இதில் இருந்து இரண்டு பேர் இருந்தாலும் தேவையற்ற விவாதம் ஏற்படும் என்பதைப் புரிந்து கொண்டு, தனிமையே சிறந்ததென்ற முடிவுக்கு வந்தேன்.

பிங்களா என்ற நாட்டியக்காரி ஏற்கனவே பலரிடம் வருமானம் பார்த்தபின், இன்னும் யாராவது வரமாட்டார்களா எனக் காத்திருந்தாள். யாரும் வராததால், கிடைத்தது போதும் என்று உறங்கி விட்டாள். இதில் இருந்து ஆசையை விட்டால் எல்லாமே திருப்தியாகும் என்பதை புரிந்து கொண்டேன்.

புற்களால் குழிக்குள் மாட்டிக்கொண்ட பெண் யானையை பார்த்த ஆண் யானை, அதன் மேல் ஆசை கொண்டு அதுவும் வீழ்ந்தது. இதில் இருந்து, பெண்ணாசையும் துன்பத்துக்கு காரணம் என்பதை உணர்ந்தேன்…’ என்று ஒவ்வொரு பொருளுக்கும் விளக்கமளித்தார்.

இதைக் கேட்ட அரசன், தன் பதவியையே உதறித் தள்ளி விட்டு, ஆன்மிகத்தில் ஈடுபட்டான்.


வாழ்ந்து பாருங்கள்

ஒரு சிறுவன் நடந்து போய்க் கொண்டிருந்த போது சாலையில் நூறு ரூபாய் நோட்டு கிடப்பதைப் பார்த்தான்.
அன்று முதல் ஏதும் தரையில் கிடக்கிறதா என்று பூமியைப் பார்த்துக் கொண்டே நடந்தான்.
அடுத்த அறுபது வருடங்கள் அப்படியே இருந்தான். அவனுக்குக் கிடைத்தவை 768 ரூபாய், 2 மோதிரங்கள், 3 கொலுசுகள்.
ஆனால் அவன் இழந்திருந்தவை, 21900 சூர்யோதயங்கள், 630 வானவில் காட்சிகள்.
ஆயிரக்கணக்கான பூக்கள், பல்லாயிரம் குழந்தைகளின் புன்னகைகள் வாழ்க்கையைத் தொலைத்தவன் மீட்பதற்கு வாய்ப்பே இல்லை.
அதிர்ஷ்டம் காலை இடறினால் மட்டும் குனிந்து பாருங்கள்.
இல்லையென்றால் வாழ்க்கையைப் பாருங்கள், வாழ்ந்து பாருங்கள்!!