Monday, November 19, 2018

குறுங்கதைகள்

Tech Geek

" Tech " என முன்புறமும்," Geek " என்று பின்னாலும் எழுதிய T-shirt அணிந்து கொண்டு, தான் முன்னே வாங்கி வைத்த வடையும்,இட்லியையும் எந்த டேபிளில் வைத்தோம் என்று தெரியாமல் திருதிருவென விழித்தபடி,ஒருகையில் காபி சிந்துவது கூடத் தெரியாமல்,இன்னொரு கையில் "Whatsapp status" பார்த்துக் கொண்டு சுற்றி சுற்றி நடந்த அந்த சக தொழிலாளியைப் பார்த்தபோது மனதில் சொல்லிக்கொண்டேன்..இவன் "
Tech Geek" இல்லை.."Tech Freak ".

கஜா புயல்..

  புயலால் மரங்கள் சரிந்து வெள்ளம் கரைபுரண்டு ஓடிய பொழுதில், சரிந்த மரங்கள் மீது நின்றும், வெள்ளத்தின் ஓரத்திலும் நின்று எடுக்கப்பட்ட selfie -கள் சமுதாயத்திற்கு சொல்வது என்ன?

வழி..

Google Map -ல் வழிதேடி எளிதில் நண்பன் வீட்டை வந்தடைந்தேன்..
ஆனால், திரும்பி வரும்போது தான் தெரிந்தது, எனது பயண அனுபவங்கள் எல்லாம் google map history -க்குள் முடங்கி விட்டன என்று..அதில் நான் தொலைத்தவை உணர்வுகளும்,பல மனித முகங்களும்...

அதற்குத் தக..

உதவி என்று கேட்டவர்களுக்கு உன் கைகள் உதவட்டும். ஒரு கை உனக்கு என்றால்,மற்றது,ஏழை எளியவர்களுக்கு கொடுப்பதற்கு என்ற ஒரு சினிமா வசனத்தைக் கேட்டுக்கொண்டே நகர்ந்த என்னிடம் ,"சாமி..சாப்பிட்டு நாலு நாள் ஆச்சு சாமி..எதாவது போடுங்க.." என்றது சிறுவனின் கூக்குரல்.."சில்லறை இல்ல.." என்று சொல்லிவிட்டு வழக்கம் போல அவனைக் கடந்து வந்துவிட்டேன்.யாரோ யாரையோ சத்தமாகத் திட்டியது காதில் விழுந்தது..மன்னிக்க வேண்டும்.அது எழுத இயலாத கெட்டவார்த்தை.
எனக்கு எனோ சுருக்கென்றது..


- ராஜ்குமார்
16-11-18 10:50

ஈரமான நெஞ்சம்..

என்னவளிடம் கேட்டேன்..
என்னைப் போன்ற ஒருவனை நீ
சந்தித்தது உண்டா? என்று..

இல்லை என்று சொல்வாள் என
எண்ணிக் கேட்ட கேள்வி அது..

அலட்டல் இல்லாமல் அவள் சொன்னாள்
"உண்டு" என்று..

கோபத்தை உள்வைத்து
ஆர்வமாய் முகம் வைத்து,
"யாரென்று சொல் கண்ணே!" என்று
அமைதியாகக் கேட்டேன்..

நெருங்கி என்னிடம் வந்து,
நெற்றிமுடி வருடியபடி சொன்னாள் ..
" இரவு முடிந்த பின்னும்
மலரிதழ்களின் ஈரம் காய்ந்திடாது பெய்யும்
வான் மழையும் நீயும் ஒன்றுதானே!" என்றாள் ..

புன்சிரிப்பு என்னிடம்...குறும்புச் சிரிப்பு அவளிடம்...

- ராஜ்குமார்
16-11-18 23:45
 

Wednesday, November 14, 2018

அடிக் கள்ளி..


காதல் என்ற பொக்கிஷத்தின்
கள்ளச் சாவியைக்
கேட்டால் தருகிறேன் என்கிறது - உன்
கண்களின் வெட்கம்!

- ராஜ்குமார் (11-11-18 10:45)

தனிமை

பலநாள் கழித்து
என் வீட்டுக்குள் நுழைந்தேன்..

சிதறிக் கிடந்த தானியங்களை
எறும்புகள் தின்றிருந்தன.
சிறு பூச்சிகள் சிலந்திவலையில்
சிக்கிக் கிடந்தன..

வாடி உதிர்ந்த காகிதப் பூக்களைக்
காற்று எடுத்துச் சென்றிருந்தது..

ஆனால்,

என் தனிமை மட்டும்
தின்னப் படாமல்
எனக்காகக் காத்துக் கொண்டிருந்தது..!

                          *        *        *

என் தனிமையை இசை தின்று தீர்க்கிறது..
ஸ்வரங்கள் இனிமையில்
நான் தொலையும் தருணத்தில்
என்னையும் தின்றுவிட்டு
ஏப்பம் விடுகிறது இசை...!

- ராஜ்குமார் (02/11/18 11:00)

ரசிகை

என் எழுத்துகளுக்குக் காத்திருக்கின்றன
அவள் விழிகள்.
என் கவிதை பாடக் காத்திருக்கின்றன
அவள் மொழிகள்..!

என்ன எழுதிக்கொடுத்தாலும் - அவள்
படித்துக்கொண்டே இருப்பாள்!
நான் எழுதுவதை நிறுத்தினாலும் - அவள்
வாசிப்பு ஓய்ந்ததில்லை.

எனது வரிகளை
விழிகளால் சுவைத்து
விழுங்கத் துடிக்கும்
அவளது பசி ,குறையாதது!

அவள் மீது எனக்கும்,
என் கவிதைகள் மீது அவளுக்கும் ,
இழையோடும் உறவு
காதல் சேராதது...காமம் தோயாதது...!

கண்ணீராய், வெட்கங்களாய் ,
புன்னகையாய் ,பூரிப்பாய்
எனது எழுத்துக்களுக்கு-தினம்தினம்
அவளின் கைத்தட்டல்கள்...!

இதோ
எழுதுவதற்கு நான் தயாராகி விட்டேன்.
எங்கே எனது அந்த ரசிகை?

- ராஜ்குமார் (02/11/18 9:00)