Showing posts with label கட்டுரை. Show all posts
Showing posts with label கட்டுரை. Show all posts

Tuesday, December 26, 2017

கல்வி என்பது....

கற்பது எப்போது என்பது,பள்ளியில் சேர்ந்த நாள் அன்று முடிவு செய்யப்படுவது அல்ல.தேவைகள் தோன்றும்போது,கற்பது தானாகத் துவங்கிவிடுகிறது.அப்படியானால்,அதற்கு முடிவு எப்போது என்று மட்டும் கேட்காதீர்கள்.ஏனெனில்,எது முடிவு என்பதைக் கற்றுக்கொள்ளவே முழு ஆயுளும் போதாது.
ஆகவே விரலைப் பார்த்து நேர விரயம் செய்யாமல், நிலவைப் பார்த்து ரசியுங்கள்.கல்வி பற்றி எண்ணாமல்,கற்பதைத் தொடங்குங்கள்.

ஒன்றைத் தெரியவில்லை என்று எப்போது நாம் உணர்கிறோமோ,அதனைக் கற்பதன் தேவை என்ன என்பதை எப்போது புரிந்து கொள்கிறோமோ,அந்த நொடியில்,நீங்கள் கற்க எண்ணியவை கண்முன் தானாகாத் தோன்றும்.அது,
மற்றவர் சொல்லிலிருந்தோ,புத்தகமாகவோ அல்லது காற்றில் பறந்து நம்மை அடையும் காகிதக் குப்பையாகவோ நிச்சயம் நம்மை அடையும்.ஆகவே, கற்கும் வாய்ப்பிற்காக,விழிப்புடன் காத்திருங்கள்.

அனைத்து வாய்ப்புகளும் கதவைத் தட்டுவதில்லை.
கதவைத் தட்டும் அனைத்தும்.இன்றையநாளில்,வாய்ப்புகளாக இருப்பதில்லை!!!

- ராஜ்குமார் (26-12-17)

Thursday, September 22, 2016

உண்மை எனும் கானல் நீர்

உண்மை.
எத்தனையோ நேரங்களில் மறுக்கப்படுவது..
பணம் செல்வாக்கு பதவி கொண்டு மறைக்கப்படுவது..
வெளிப்பட வேண்டி காத்திருக்க வைப்பது.. வெளிவந்துவிடுமோ என பயப்பட வைப்பது..

உண்மை.
நல்லதா..கொடியதா?
நண்பனா துரோகியா?
ஆக்கமா அழிவுசக்தியா?

உண்மை...
மறைந்தால் ரகசியம்!
மறைத்தால் கபடம்!
வெளிப்பட்டால் அம்பலம்!
வணங்கினால் கடவுள்!
ஏய்த்தால் ஆயுதம்!

ஆக,கூர்ந்து நோக்கினால் ,நம் மனம் எல்லா பொழுதிலும் உண்மையை வேண்டுவதில்லை என்பதே கசப்பான உண்மை..!

ஆகவே தான், ரகசியங்கள்,கடவுள்கள் போற்றப்படுகின்றன.

உடைக்கப்பட்ட உண்மைகள் சுவாரஸ்யத்தை இழக்கின்றன.!

சிந்திப்போம்.சிறப்போம்👍

பொய் வாழவிடாது..!
உண்மை சாக விடாது..!

உண்மையை மறைக்க ஆயிரம் பொய் அவசியமாகிறது..
பொய்களைத் தவிர்க்க ஒரு உண்மை போதுமானதாகிறது☺☺

- ராஜ்குமார்

Wednesday, September 21, 2016

உன் வாழ்க்கை உன் கையில்

உணவு பிடிக்கவில்லை என்றால் தூக்கி எறிந்துவிட்டு பிடித்த உணவை வரவழைத்து உண்ணலாம்!
பிடித்த உறவுக்கு நம்மைப் பிடிக்கவில்லை எனில்,உணர்வுகளைப் புரியவைத்து மாற்றத்தை ரசிக்கலாம்!
உலகம் பிடிக்கவில்லைஎனில், உலகத்திற்கு ஏற்றபடி நம்மை மாற்றிக்கொள்ள முயற்சிக்கலாம்!

நம் வாழ்க்கையின் போக்கு என்றுமே நாம் நினைத்தபடி அமைய வேண்டுமெனில், மாறவேண்டும் நாம் சில நேரம்!

முத்து சிப்பிக்குள் சுரக்கும்போதுதான் ஒளி படைத்ததாக மாறுகிறது!
வைரம் தானாக இறுகுவதால்தான்,கண்ணாடியை அறுக்கும் கடினத்தன்மை பெறுகிறது!

முத்து,வைரம் என நம்மை நாம் மட்டுமே மாற்ற முடியும்!
அடுத்தவருக்காக உன்னை மாற்றத் துவங்கினால், இறுதியில் உன் தனித்துவத்தை இழந்துவிடுவாய்!

உன்னை உனக்குப் பிடித்தபடி மாற்றிக்கொள்!

குயவனுக்கு களிமண்ணை மட்டும் பானையாக மாற்றத்தெரியும்!
பொற்கொல்லனுக்கு தங்கம்,வெள்ளி போன்றவைகளை தட்டி நகையாக மாற்றமட்டும் தெரியும்!
சிற்பிக்கு கல்லுக்குள் மறைந்து கிடக்கும் சிற்பத்தை எழுப்ப மட்டும் தெரியும்!

ஒரு பொற்கொல்லனை பானையைத் தட்ட விடலாமா?
சிற்பியிடம் நகையை உளிகொண்டு உடைக்க விடலாமா?
குயவனிடம் தங்கம் கொடுத்து அழிக்க விடலாமா?

நாம் தங்கமா,களிமண்ணா அல்லது சிற்பமாகப்போகும் கல்லா என்பது நமக்கு மட்டுமே தெரியும்!
சிற்பியாக வேண்டுமா,கொல்லனாக வேண்டுமா என்பதை நாம் முடிவு செய்தால் தான் உருப்படியான பயன்கிடைக்கும்!

புரிந்துகொளுங்கள்! நினைத்தபடி வாழ பிடித்தபடி மாறுங்கள்! மாற்றுவதை விட, மாறுவது சிறப்பு!

÷ராஜ்குமார்

Friday, June 27, 2014

வாழ்க்கை என்னும் பரிசு!


ஒரு போட்டியில் உங்களுக்கு ஒரு பரிசு கிடைத்திருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள்.

பரிசு என்னவென்றால்,ஒவ்வொரு நாள் காலையிலும் உங்கள் வங்கிக் கணக்கில் 86,400 ரூபாய் உங்கள் சொந்த செலவுக்காக வரவு வைக்கப்படும்.

ஆனால் இந்தப் பரிசுக்கு சில நிபந்தனைகள் உண்டு.

அவை :
1) அந்த நாளில் நீங்கள் செலவு செய்யாத பணம் உங்கள் கணக்கிலிருந்து எடுக்கப்பட்டுவிடும்.
2) உங்கள் பணத்தை நீங்கள் வேறு கணக்கிற்கு மாற்ற முடியாது.
3) அதை செலவு செய்ய மட்டுமே உங்களுக்கு உரிமை உண்டு
4) ஒவ்வொரு நாளும் விடியும்போது உங்கள் வங்கிக் கணக்கில் அந்த நாளின் செலவிற்காக 86400 ரூபாய் வரவு வைக்கப்படும்
5) எப்போது வேண்டுமானாலும் வங்கி இந்த ஆட்டத்தை முன்னறிவிப்பு இல்லாமல் நிறுத்திக்கொள்ளலாம்.
6) வங்கி - "முடிந்தது கணக்கு" என்று சொன்னால் அவ்வளவுதான். வங்கிக் கணக்கு மூடப்படும், மேற்கொண்டு பணம் வரவு வைக்கப்படமாட்டாது.
 

 இப்படி இருக்கும் பட்சத்தில் நீங்கள் என்ன செய்வீர்கள்?
உங்களுக்கு பிடித்த எல்லாம் வாங்குவீர்கள் இல்லையா?
உங்களுக்கு மட்டுமல்லாமல் உங்கள் மனதுக்கு பிடித்தவர்களுக்கும் வாங்கித்தருவீர்கள் இல்லையா? உங்களுக்கு முன்பின் அறிமுகம் இல்லாதவர்களுக்காகவும் செலவு செய்வீர்கள்.


ஏனென்றால் அவ்வளவு பணத்தையும் உங்களுக்காக மட்டுமே செலவு செய்வது சாத்தியமில்லை என்பதால் - அப்படித்தானே? முடிந்தவரை ஒவ்வொரு ரூபாயையும் எப்படியாவது செலவு செய்து உபயோகிப்பீர்கள்தானே?

உண்மையில் இது ஆட்டமில்லை - நிதர்சனமான உண்மை!!

ஆம் ..

நம் ஒவ்வொருவருக்கும் இப்படியான ஒரு வங்கிக் கணக்கு இருக்கிறது. நாம் தான் அதை கவனிக்கவில்லை.அந்த ஆச்சரிய வங்கிக்கணக்கின் பெயர் - காலம்.


ஒவ்வொரு நாள் காலையும் நாம் எழுந்திருக்கும் போது வாழ்க்கையின் அதியுன்னத பரிசாக 86400வினாடிகள் நமக்கு வழங்கப்படுகிறது.
இரவு தூங்கப் போகும் போது நாம் மிச்சம் வைக்கும் நேரம் நமக்காக சேமித்து வைக்கப் படுவதில்லை.
அன்றைய பொழுது நாம் வாழாத வினாடிகள் தொலைந்தது தொலைந்தது தான்.நேற்றைய பொழுது போனது போனது தான். 


ஒவ்வொரு நாள் காலையிலும் புத்தம் புதிதாக நம் கணக்கில்
86400நொடிகள். எச்சரிக்கையே இல்லாமல் எப்போது வேண்டுமானாலும் வங்கி உங்கள் கணக்கை முடக்க முடியும். அப்படியிருக்கும் பட்சத்தில் நீங்கள் என்ன செய்வீர்கள்? 


உண்மையில் 86400வினாடிகள் என்பது அதற்கு சமமான அல்லது அதற்கும் மேலான பணத்தை விடவும் மதிப்பு வாய்ந்தது அல்லவா?
இதை ஞாபகம் வைத்துக்கொண்டால் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் நாம் கொண்டாடிக் கழிக்க மாட்டோமா? காலம் நாம் நினைப்பதை விட வேகமாக ஓடிவிடும். 


எனவே உங்களைப் பொன் போல பேணுங்கள் - சந்தோஷமாக இருங்கள் - சுற்றியுள்ளவர்களை ஆழமாக நேசியுங்கள் - வாழ்க்கையைக் கொண்டாடுங்கள்.

Tuesday, March 11, 2014

உயிரான உணர்வுகள்!

( உயிர் எழுத்துகளைக் கொண்டு துவங்கப்பட்ட உண்மை வரிகள்!)




           வளைப்பற்றி எழுதும் முதல் வரியை கற்பனையில் பார்க்கின்றேன்.அதன் பொருள்செறிந்த வார்த்தைகளில் லயித்துவிடுகின்றேன்.அதனைப் படித்துமுடித்து இரண்டாம் வரியை என் பார்வை தீண்டுகையில்,மொத்த வார்த்தைகளும் வரிசை தெரியாமல் மறைந்துவிடுகின்றன.அழியாத நினைவுகளை,உன்னத உணர்வுகளை எழுத்தாய் தீட்டி வைப்பது கடினம்தான்.

           துவரையில் பேசிய வார்த்தைகள் இரண்டோ மூன்றோதான் இருக்கும்.நேராய் அவள்முகத்தை பார்த்தது கிடையாது.சிலநேரம் கண்கள்,சிலநேரம் அவள் புன்னகை.அவ்வளவுதான்.அவளைப்பற்றி எழுதத் துவங்கி இன்றோடு ஆறுமாதங்கள் நிறைவடைகின்றன.அவ்வப்போது ஒரு வரிக்கவிதை எட்டிப்பார்க்கும்.எழுதிக்கொள்வேன்.


           தயம் விரைவாய்த்துடித்தது,மூச்சு திக்கித்திணறியது என்று சொல்வது உயர்வுநவிற்சி என நினைத்தால்கூட,உண்மை அதுவே.அந்த முதல் சந்திப்பை என்றும் மறக்க முடியாது.அன்று இரண்டொரு வார்த்தைகள்.கொஞ்சம் புன்னகை.ஆறுதலாய் அவள் பார்வை.


           ன்றைய என் பயணம்கூட புதிதாய் இருந்தது.பார்க்கும் மனிதர்களும் விந்தையாய்த் தெரிந்தனர்.கனவில் மிதந்தபடி இல்லம் சேர்ந்தேன்.அன்று இரவுத் தூக்கம் தொலைத்து,அவளுடனான கற்பனை உரையாடல்களை அரங்கேற்றம் செய்துகொண்டிருந்தேன்.முதல் வரிசையில் அமர்ந்து முழுதாய் ரசித்தவனும் நான் தான்.


           வள் எப்படிப்பட்டவள்?அவளின் கனவுகள் எதைப்பற்றியது?என்ன நினைக்கிறாள் என்னைப் பற்றி?இப்படி பதில் தெரியாத ஆயிரம் கேள்விகள்,தினமும் அவளைப் பார்க்கும் நொடிப்பொழுதில் மின்னி மறைகின்றன.


ராஜ்குமார்...
(29-jul-13)

Friday, February 28, 2014

படித்ததில் பிடித்தது 8 - உயிர் உடைத்த புகைப்படம்!


புலிட்சர் விருதின் (Pulitzer Prize) வாயிலாக உலகப் புகழ்பெற்ற இந்தப் படத்தை எடுத்த கெவின் கார்ட்டர் (Kevin Carter-[1960-1994]) தற்கொலை செய்து கொண்டார். ஏன்?

கெவின் கார்ட்டர்- தென்னாப்பிரிக்காவின் அழகிய ஊரான ஜோஹன்ஸ்பர்க்கைச் சேர்ந்தவர். உலகப் புகழ்பெற்ற புகைப்படக்காரர். எல்லா சிறந்த புகைப்படக்காரர்களைப் போன்றே இவருக்கும் நல்ல புகைப் படங்களை எடுக்க வேண்டுமென்ற ஆசையும் ஆர்வமும் இருந்தன. இந்த ஆர்வம் அவரை நாடு,நகரம்,கிராமம்,காடு, மலை என்று கொண்டு சென்றது.

 
 1993 இல் இந்த ஆர்வம் அவரைத் தனது சக புகைப்படப் பத்திரிக்கையாளர்களுடன் சூடானுக்குக் கொண்டு சென்றது. அப்போது சூடான் வரலாறு காணாத பஞ்சத்தில் சிக்கித் தவித்துக் கொண்டு இருந்தது.

குறிப்பாக சூடானின் தென்பகுதி மக்கள் உண்ண உணவின்றி, பருகநீரின்றி பசி, தாகத்தில் தவித்துக் கொண்டிருந்தனர்.

பசி பஞ்சத்தில் தவிக்கும் மக்களின் நிலைகளைக் காமிராவில் பதிவு செய்ய கெவின் தொலைதூர கிராமங்கள் வரை சென்றார்.

இறுதியாக அவர் முயற்சி கைகூடியது. ஒரு நாள் தன் காமிராவை தோளில் தொங்க விட்டுக் கொண்டு உள்ளத்தை உலுக்கக் கூடிய படத்துக்கான காட்சியைத் தேடியலைந்து கொண்டிருந்தபோது அப்படிப்பட்ட காட்சி தென்பட்டது அவரது நற்பேறு என்றுதான் கூற வேண்டும்.

பசி பஞ்சத்தால் அடிபட்ட நோஞ்சன் நிலையில் உள்ள ஒரு சிறுமி நடக்கக் கூட இயலாத நிலையில், எலும்புக் கூடு போன்ற தன்னுடலை தவழ்ந்து இழுத்துக் கொண்டு மெல்ல மெல்ல ஊர்ந்து செல்வதைக் கண்டார்.

அந்தச் சிறுமி ஐக்கிய நாடுகளின் சபையின் சார்பாக அமைக்கப்பட்டு இருந்த உணவு வழங்கும் முகாமை நோக்கி தள்ளாடியபடி தவழ்ந்து கொண்டிருந்தது உண்மையிலேயே இதயத்தைப் பிழியக் கூடியதாக இருந்தது.

தோளில் இருந்து காமிராவை இறக்கி கோணம் பார்த்த கெவினுக்கு இன்னொரு வியப்பும் காத்திருந்தது.

ஆம்; அந்த எலும்பும் தோலுமான சிறுமிக்கும்ப் பின்னாலேயே சிறிது தொலைவில் ஒரு பிணம் தின்னிக்கழுகும் சிறுமியின் மீது பார்வையை நிலை நிறுத்திக் கொண்டு இருந்தது.

எப்போது சிறுமியின் உடலை விட்டு உயிர் பிரியும்; மீதியுள்ள அந்தத் தோலையும் அதைச் சுற்றி இருக்கும் சிறிது மாமிசத்தையும் எப்போது சாப்பிடலாம் எனக் காத்திருந்தது பிணம் தின்னிக்கழுகு.

கெவின் கேமரா லென்சை கண்ணுக்கு ஒத்திக் கொண்டார்.
ழுகு தன் இறக்கையை விரிக்குமென கார்ட்டர் 20 நிமிடம் காத்திருந்தார். அது விரிக்கவில்லை. எனவே குழந்தையும் கழுகும் இடம்பெறும் வகையில் இக்கோரக்காட்சியைப் புகைப்படமாக எடுத்துவிட்டுக் கழுகை விரட்டினார்.

இப்போது அவரது புகைப்படக்கருவியில் மிக அரிதினும் அரிதான படம் பதிவாகி விட்டது.

இதை விற்றால் நல்ல விலை கிடைக்கும் என்ற மகிழ்ச்சியில் காமிராவைத் தோளில் மாட்டிக் கொண்டு தனது வண்டியை ஸ்டார்ட் செய்தார்; பறந்து விட்டார். இந்த அரிதான படத்தை ‘நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிக்கைக்கு விற்று விட்டார்.

இந்தப் புகைப்படம் 1993 மார்ச் திங்கள் 26 ஆம் நாள் காலை நாளிதழில் முதல் பக்கத்தில் வெளியானது. இந்தப் படத்தைப் பார்த்ததும் ஆயிரக்கணக்கான வாசகர்கள் பத்திரிக்கை அலுவலகத்திற்கு தொலைப்பேசி மூலம் தொடர்புக் கொண்டனர்.

அனைவரும் ஒரே கேள்வியைத்தான் கேட்டனர். புகைப்படத்தில் உள்ள சிறுமி என்ன ஆனாள்? அவள் உயிருடன் பிழைத்தாளா அல்லது இறந்து விட்டாளா?
இந்தக் கேள்விக்கான பதில் பத்திரிக்கையின் தொலைப் பேசி ஆப்ரேட்டரிடமோ படத்தை எடுத்த கெவின் கார்ட்டர்டமோ இல்லை.

1994,மே 23 அன்று பெரும் கை தட்டல்களுக்கு இடையே கெவின் கார்ட்டர் கொலம்பியப் பல்கலைக்கழகத்தின் பிரமாண்டமான அரங்கத்தில் இந்த அரிதான புகைப்படத்திற்கான புலிட்சர் விருதப் பெற்றுக்கொண்டார் இந்த விருது புகைப்படத் துறையில் நோபல் விருதுக்கு இணையானது.

விருது பெற்ற சில நாட்களுக்குப்பின் கெவின் பெரும் மன உளைச்சலுக்கு ஆளானார்.

கெவினுக்கும் அங்கு இருந்த பிணம்தின்னிக் கழுகுக்கும் என்ன வேற்றுமை? இரண்டும் ஒரே விதமாகத்தான் செயல்பட்டுள்ளனர்.

‘குறைந்தபட்சம் புகைப்பட நிபுணர் கெவின் அந்த சிறுமிக்கு ஒரு வாய் தண்ணீர் அல்லது சாண்ட்விச் தந்து உயிரைக் காப்பாற்றி இருக்கலாம்; அல்லது தனது வலுவான கைகளினால் அந்தச் சிறுமியைத் தூக்கிச் சென்று உணவளிக்கும் அமைப்பு அலுவலகத்தின் வாயிலிலாவது சேர்த்து இருக்கலாம்; கல்லெடுத்து வீசி அந்தக் கழுகையாவது விரட்டி இருக்கலாம்; ஆனால் இவற்றில் எதையும் செய்யாமல் வெறும் ஒரு படத்தை எடுத்தார்; அதை அதிக விலை தந்த பத்திரிக்கைக்கு விற்று விட்டார் என்று ஒருவர் அவர் மீது குற்றம் சாட்டியதுதான் காரணம்.

1994 ஆம் ஆண்டு ஜீலை 27 ஆம் நாள் கார்ட்டர் தனது மகிழுந்தைத் தான் சிறு வயதில் விளையாடிய ஆற்றங்கரையருகில் கொண்டு நிறுத்தினார். மோட்டார் புகைபோக்கிச் செயல்முறையைப் பயன்படுத்திக் கார்பன் மோனாக்சைடு நச்சால் தன் வாழ்வை முடித்துக் கொண்டார். மரணத்தின் போது அவருக்கு வயது 33.

அவரது பிணத்திற்கு அருகில் காவல்துறைக்கு ஒரு கடிதம் கிடைத்தது. அதில் சில வரிகளே இருந்தன. 

"
நான் மனத்தளர்ச்சி அடைந்துள்ளேன். ...தொலைபேசி இல்லாமல்....வாடகைக்குப் பணம்; இல்லாமல்....குழந்தை ஆதரவுக்குப் பணம் இல்லாமல்.....கடனடைக்கப் பணம் இல்லாமல்....பணம்!!!..... நான் கொலைகளின் தெளிவான நினைவுகளாலும் பிணங்கள், கோபம் மற்றும் வலியினாலும் பாதிக்கப்பட்டுள்ளேன். பசியால் வாடும் மற்றும் காயம்பட்ட குழந்தைகளாலும்.... "

இன்று பல்வேறு செய்தி சேனல்களிலும் அடிபட்டும் விபத்துக்குள்ளாகியும் இரத்தச் சிதறலில் துடித்துக் கிடப்பவர்களைப் படங்களாய்ப் பார்க்கும் போதும் அவர்களின் அபயக் குரலைக் கேட்கும் போதும் ஏனோ கெவின் கார்ட்டர் நினைவுக்கு வருகிறார்.



நன்றி:
Wikipedia    Facebook

Wednesday, January 1, 2014

புதுவருடமே வருக வருக!

 தமிழர்கள் என்றால் தமிழ் புத்தாண்டை மட்டுமே சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்றில்லை.தம்மையும் பிற இனத்தையும் அவர்களின் கலாச்சாரத்தையும் என்றுமே தமிழன் மதிக்கத் தவறியதில்லை.
ஆகவே,ஆங்கில புத்தாண்டைக் கொண்டாடுவதில் எந்த பாவமும் நம்மை வந்தடையாது.அதை விடுத்து  கொண்டாட்டத்தால் தமிழ் கலாச்சாரம் குழையும்,அழிந்துவிடும் என்றெல்லாம் கதை கிளப்புவது நன்றல்ல!


நீண்ட விடுப்பில் இருந்து இன்றுதான் அலுவலகம் வந்தடைந்தேன்.புத்தாண்டுக்கு லீவா இருக்கும்.எதுக்கும் ஆபிஸ் ல கேளு! என்று அம்மா நேற்று சொன்னபோது எனக்கே சந்தேகம் வந்துவிட்டது.போன வருஷ பிறப்பன்று அலுவலகம் வந்தது நினைவிருக்கிறது.இருப்பினும் நண்பனைக் கேட்டு உறுதிசெய்துகொண்டேன்.

காலைப் பனியில் காதுகளை மூடிக்கொண்டு ஒருமணி நேரம் பயணம்.ஜன்னல் காட்சிகளில் எதோ புதுமை இருப்பதாகவே தெரிந்தது.என்றும் காணப்படும் வாகன நெரிசல்,குழம்பிய முகங்கள் என எதுவும் தென்படவில்லை.சாலை நெடுக Happy New Year வாழ்த்து செய்திகள் சுண்ணாம்பினால் எழுதப்பட்டிருந்தது.இரவுக்கொண்டாட்டத்தில் வெடிக்கப்பட்ட பட்டாசுக் காகிதங்கள் சாலையின் ஓரங்களை நிறைத்திருந்தது.

புதுவருடம் ஒவ்வொருவருக்கும் விதவிதமாய் விடிகிறது.சிலரின் காதல் நேற்று இரவில் சொல்லப்பட்டிருக்கும்,அதே போல நாளை புதிய வாகனம் வாங்கி வருடத்தை வண்டி எண்ணாக பதிவு செய்ய சிலர் யோசனை செய்துகொண்டிருப்பார்கள்,பலரின் புதிய தொழில் முயற்சிகள் புதிய வருடத்தில் சந்தைப்படுத்தப்படும்! இப்படி புத்துணர்வில் பிறக்கிறது புதுவருடம்.கண்களை மூடி யோசித்துப்பார்த்தால், ஏதோ வழி தெரியாத நீண்ட சோலைக்குள் பயணம் செய்ய தயாராகிக் கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது.அனைவரும் அப்படித்தான் சோலைக்குள் நுழைகிறோம்.பலர் பாதை தவறிவிடுகிறார்கள். சிலரே நினைத்ததை அடைகிறார்கள்.

உங்கள் எண்ணங்கள் ஈடேற என் இனிய வாழ்த்துகள்.இது ஒரு நல்ல விடியல்.இனிய ஆண்டின் இன்பமயமான ஆரம்பம்! அனுபவியுங்கள் உங்கள் ஸ்டைலில் :)

தத்துவம்:
"உன்னை நாணயமான மனிதனாக்கிகொள்! அதன்மூலம் உலகில் அயோக்கியன் எண்ணிக்கையில் ஒன்று குறைந்துவிட்டது என நீ தைரியமாக நம்பலாம்! "


அன்புடன் 
ராஜ்குமார்.

Wednesday, November 27, 2013

கையெழுத்து!

நம் அன்றாட வாழ்க்கையில் பலவித மனிதர்களை ,பலவித காலகட்டங்களில் சந்திக்கின்றோம் .அவர்கள் பின்னாளில் நம் நண்பர்களாகவோ எதிரிகளாகவோ அல்லது  எவ்வித உறவுப்பிணைப்பும் இல்லாதவர்களாகவோ அடையாளப்படுத்தப் படுகின்றனர்.என்னைப்பொறுத்தவரையில் அவர்கள் எந்த வகையினராக இருந்தாலும் அவர்களிடம்  நாம் கற்றுக்கொள்ள ஒரு பாடமும் கேட்டறிய ஒரு கதையும் இருக்கவே செய்கிறது.

         அவ்வாறு என் வாழ்க்கையில் பலவித நல்லவை,கெட்டவைகளை பலரும்  அறியவைத்துள்ளனர்.நான் ஆறாம்வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன்.அந்த வருடம் இதற்கு முந்தியவை போல மகிழ்ச்சியான வருடமாக இல்லை.காரணம் இருவர்.அவர்கள்  என் வகுப்பில் சேரும்வரை முதலிடம் பிடித்திருந்த நான்,பிறகு மூன்றாம் இடம் தள்ளப்பட்டேன்.என்னால் அவர்களைப் போல ஏன் படிக்கமுடியவில்லை? என்ன ஆயிற்று எனக்கு என கேள்விகேட்டபடி படுக்கையில் தூக்கமின்றி துவண்டேன்.பெருக்கல் வாய்ப்பாடு மனப்பாடம் செய்ய முடியாமல் அடி வாங்கிய வருடமும் அதுதான்.ஆசிரியைகள் பள்ளி முடிந்த பிறகு எடுக்கும் சிறப்பு வகுப்புகளுக்கு செல்லத்  துவங்கினேன்.இருந்தாலும் கணக்குப்பாடம் என்பது அவ்வளவு பிடிப்பதாக இல்லை.

         ஏழாம்வகுப்பும் எப்படியோ கடந்து சென்றது.எட்டாம் வகுப்பு படிக்கையில் கிட்டத்தட்ட  என் எண்ணங்கள் முற்றிலும் மாறியிருந்தன.மதிப்பெண்கள் பற்றியோ எத்தனையாவது இடம் பிடிக்கிறேன் என்பதைப் பற்றியோ நான் கவலைப்படுவதே இல்லை.காரணம்  எனக்கு அமைந்த நண்பர்கள்.அவர்களை விட அதிக மதிப்பெண் என்பது மட்டுமே எனக்கு போதுமானதாக இருந்தது.நன்றாக படிப்பவர்களை நண்பர்களாக்கிக் கொண்டேன்.கணித வகுப்புகளில் கொடுக்கும் வீட்டுபாடங்களை, சிந்திக்காமல் அச்செடுக்க அவர்கள் மிகவும் உதவினார்கள்.அது போலவே, வகுப்பில் தினமும் வைக்கப்படும் தேர்வுத்தாள்களில் மதிப்பெண் இடுபவர்களும் அவர்களே என்பதால்,ஆசிரியையிடம் அடிவிழாமல் காப்பாற்றும் மதிப்பெண்கள் எனக்குக் கிடைப்பதை அவர்கள் உறுதி  செய்துவிடுவார்கள்.அவர்களில் முக்கியமானவர்கள் யமுனாதேவி மற்றும் கவிதா.


           கவிதா என் சொந்த ஊரைச் சேர்ந்த மாணவி.பக்கத்து வீடு கூட.ஆகவே படிப்பு சார்ந்த  குறிப்பாக கணிதம் சார்ந்த உதவிகள் நிறைய கிடைத்தன.சிலரைப் பற்றி நாம் நினைப்பது ஒன்றாக இருக்கும்.ஆனால் உண்மை வேறொன்றாக இருக்கும்.கவிதா மீது  முதலில் எனக்கு இருந்த கோபம் இப்போது மரியாதையாக மாறி இருந்தது.கவிதாவின் அழகான தமிழ் கையெழுத்து எனக்கு மிகவும் பிடிக்கும்.,சீரான இடைவெளியில்,நேர்த்தியாக  அழுத்தமாக எழுதப்படும்  அந்த வரிகளைக் கண்டு வியந்த உணர்வு இன்றும் அப்படியே இருக்கிறது.கவிதாவின் நோட்டு புத்தகங்களை வாங்கி வந்து,அவள் எழுதியதைப்  போலவே எழுத முயற்சித்தேன்.இரண்டு மூன்று வரிகள் அதேபோல எழுதிவிடுவேன்.பிறகு பழையபடி கையெழுத்து குழைந்துவிடும்.அப்படி எழுதுவதற்கு அதிக நேரம்  தேவைப்பட்டது.அடுத்த நாள் முதல், வகுப்புகளில் கவிதா எழுதுவதை உன்னிப்பாகக் கவனித்தேன்.பேனா பிடிப்பது,எந்தப்பக்கம் சாய்த்து எழுதுகிறாள் வார்த்தைகள் எப்படி  நேராய் அமைகின்றன என ஒவ்வொன்றையும் கூர்ந்துகவனிக்க துவங்கினேன்.

         அந்த வருடம் கல்வி சிறிது முன்னேற்றத்துடன் முடிவடைந்தது.வேறு பள்ளிக்கு மாற்றல் ஆனேன்.இன்னும் "கவிதாவின் கையெழுத்து" எனக்கு  பரிச்சயப்படவில்லை.நான் பத்தாம்வகுப்பு படிக்கும்போது,எனக்குள் கிடந்த கையெழுத்து ஆசை மீண்டும் தலைதூக்கியது.தினமும் பலமணிநேரம் அதற்காக பயிற்சி செய்தேன்.வீட்டுப்பாடம்  செய்யும்போதும்,பரிச்சைக்கு முன்னர் எழுதிப்பார்க்கும் போதும் கையெழுத்தின் மேன்மையில் அதிகம் கவனம் செலுத்தத் துவங்கினேன்.
    
          பத்தாம் வகுப்பு இறுதி தேர்வு  எழுதுகையில் ஓரளவு நன்றாகவே தேர்ந்துவிட்டேன்.கவிதாவின் எழுத்துகளுடன் ஒப்பிட முடியாது எனினும் நல்ல வடிவாக எழுதப் பழகியிருந்தேன்.

பத்துவருடங்களுக்கு  மேல் ஆகின்றன.இன்றும் என் கதை கவிதைகளைப் படிப்பவர்கள் "உன் கையெழுத்து அழகாக இருக்கிறது !" எனக் கூறினால்,சட்டென நினைவில் வந்துசெல்கிறாள் கவிதா  என்ற அந்தத் தோழி!

Wednesday, July 17, 2013

குழந்தைகள் முன்னிலையில் செய்யக்கூடாத சில!

(குறிப்பாக பெண்களுக்கு)
1. கணவன்-மனைவி சண்டை சச்சரவு குழந்தைகளுக்குத் தெரியக் கூடாது. அவர்கள் முன்னிலையில், சண்டையிட்டுக் கொள்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

2. குழந்தைகள் முன்னிலையில், பிறரை பற்றி தேவையில்லாமல் விமர்சிக்காதீர்கள். உதாரணமாக, "உங்கள் பிரண்ட் மகா கஞ்சனாக இருக்கிறாரே' என்று நீங்கள் உங்கள் கணவரிடம் கேட்டதை நினைவில் வைத்துக் கொண்ட குழந்தை, அவர் வரும் போது, "அம்மா கஞ்சன் மாமா வந்து இருக்கிறார்' என்று சொல்ல நேரிடலாம்.

3. தீய சொற்களை பேசுவதை தவிருங்கள். அதிலும் குழந்தைகள் முன்னிலையில் பேசுவதை அறவே தவிருங்கள். நீங்கள் பேசுவதை கவனித்து தான் உங்கள் குழந்தை பேசுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

4. சிறு குழந்தைகளை மிரட்டும் போது, "கொன்னுடுவேன், தலையை திருகிடுவேன், கையை உடைப்பேன்' போன்ற வார்த்தைகளை உபயோகிக்காதீர்கள்.

5. சில தாய்மார்கள் சில விஷயங்களை தங்கள் கணவரிடம் இருந்து மறைக்க விரும்புவர். எனவே, குழந்தைகளிடம், "அப்பாகிட்டே சொல்லிடாதே' என்று கூறுவர். அப்படி நீங்கள் சொன்னால், உங்கள் குழந்தை தன்னை பெரிய ஆளாக நினைத்துக் கொண்டு, உங்கள் கணவர் முன்னிலையிலேயே "அப்பாக்கிட்ட சொல்லிடுவேன்' என்று மிரட்டும்.

6. குழந்தைகளிடம் அவர்கள் டீச்சரைப் பற்றி கமென்ட் அடிக்கக் கூடாது. "உங்க டீச்சருக்கு வேற வேலை இல்லை; உங்க டீச்சருக்கே ஒண்ணும் தெரியலே' போன்ற வார்த்தைகளை அவர்களிடம் கூறக் கூடாது. அப்படி கூறினால், குழந்தைகள் அவர்கள் ஆசிரியர் மீது வைத்திருக்கும் மதிப்பு குறைந்து, அவர்கள் படிப்பை பாதிக்க வழிவகுக்கும்.

7. குழந்தைக்கு எதற்கெடுத்தாலும் காசு கொடுத்துப் பழக்கக் கூடாது. அதிலும் கமிஷன் கொடுத்து பழக்கப்படுத்துவது கூடவே கூடாது. " கடைக்குப் போய் ஷாம்பூ வாங்கிட்டு வந்தால், உனக்கு சாக்லேட் வாங்க காசு தருவேன்' என்பது போல பேசுவதை தவிருங்கள். இல்லாவிட்டால், நாளடைவில் ஒவ்வொன்றிற்கும் காசை எதிர்பார்க்க ஆரம்பித்து விடுவர்.

8. குழந்தைகள் முன்னிலையில் தரமான படங்களையே பார்க்க வேண்டும். நீங்கள் வாங்கும் புத்தகங்களும் தரமாக இருக்கிறதா என்று பார்த்து வாங்கவும்.

9. உங்கள் குழந்தையுடன் அடுத்த வீட்டுக் குழந்தையை ஒப்பிட்டுப் பேசாதீர்கள். அப்படி பேசினால், குழந்தையின் மனதில் தாழ்வு மனப்பான்மை வளரும்.

10. படிப்பு விஷயத்தில் குழந்தைகளைக் கண்டிக்கும் போது, "பாசிடிவ் அப்ரோச்' இருக்க வேண்டும். "நீ நன்றாக படித்தால் டாக்டராவாய்; நன்றாக விளையாடு பெரிய ஸ்போர்ட்ஸ்மேன் ஆகலாம்' என்று கூறி, ஊக்கப்படுத்த வேண்டும். "நீ படிக்கிற படிப்புக்கு பியூன் வேலை கூட கிடைக்காது. இந்த மார்க் வாங்கினா மாடு தான் மேய்க்கலாம்' என்றெல்லாம் பேசி, பிஞ்சு மனதை வேதனை அடைய செய்யக் கூடாது.

11. குழந்தை முன்னிலையில் உங்கள் கணவர், வீட்டில் இருக்கும் பிற நபர்கள் சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது, புகையிலை போன்ற செயல்களை மேற்கொள்ள ஒரு போதும் அனுமதிக்காதீர்கள்.

Monday, April 22, 2013

கிடா விருந்து அழைப்பு!


சித்திரை மாசம் வந்தாலே பெரும்பாலான கிராமங்கள்ல திருவிழா களைகட்டும்.குறைஞ்சது 3வார விழாவ நடத்துவாங்க.பூப்போட்டு அம்மை அழைக்கிறதுல இருந்து,கம்பம் நட்டு,திருவிழா எடுத்து மஞ்சள்நீர்,மறுபூசை வரை பல கட்டமா,உற்சாகம் குறையாம ஊர் முழுக்க கொண்டாடுவாங்க.இத்தனை அலம்பல்ல, வராத மழை கூட வந்துடும்-ங்கிறது நம்பிக்கை.போன வருசம் கூட பருவம் மாறாம கொஞ்சம் மழை வந்துச்சு.இந்த ஒரு வருசமா சொட்டுத்தண்ணி கூட பார்க்கமுடியல.புயல் தள்ளிவிட்ட மேகங்கள் மட்டும் அப்பப்ப வந்து கண்ணீர்விட்டுட்டு போனது.போன வாரம் எங்க ஊருல கம்பம் நட்டு,இந்தவார விழா நடக்கப்போவதை உறுதி செய்திருந்தாங்க.அந்தன்னைக்கு மழை வரும்னு எல்லாரும் வானத்தைப் பார்த்துக் கிடந்தோம்.பூசாரி போட்ட தீர்த்தம் தான் மிச்சம்.


   சாமிவந்து ஆடின அந்த பூசாரி சிபிஐ கணக்கா ஒன்னு சொன்னாரு,"ஊர் எல்லையில எவனோ உரலைப் போட்டு வச்சிருக்கான்.அத எடுத்து எறிஞ்ச உடனே மழை வரும்"னு.நான் சிரிச்சுகிட்டே வீட்டுக்கு வந்துட்டேன்.சொல்லி ஒருவாரம் ஆனாலும் மழையைக் காணோம்.அதுக்காக, பூசாரிக்கு அருள்வரலை,சாமி வாக்கு சரியா குடுக்கலை அப்டினு முடிவு சொல்றேன்னு நினைக்கக் கூடாது.மக்களே மறந்தாச்சு.வர்ற நோம்பிக்கு கறிசோறு தின்னப்போறோம்னு சந்தோசமோ என்னமோ.ஆடு,கோழின்னு பக்தியோட வெட்டி சாமிக்கா ஊட்டி விடறோம்?நம்ம காசு.நம்ம வயிறு.சாமிக்கு என்ன தெரியும்னு நெனச்சாங்களோ என்னமோ?

நான் சொல்ல வந்ததை விட்டு எதையோ பேசிட்டிருக்கேன்.

   இந்த மாரியம்மன்கோவில் பொங்கல் விழாவுக்கு,கிடாய் வெட்டி சொந்தங்களை அழச்சு விருந்துபோடலாம்னு எங்க வீட்டுல முடிவு செஞ்சோம்.போன் பண்ணி எல்லாரையும் அழைச்சா போதும்னு வீட்டுல பேசிகிட்டாங்க.ஒரு பெரிய மனுசன் வாய வச்சுட்டு சும்மா இருக்காம,"அதென்ன போன்ல கூப்படறது?புதுவீடு கட்டிருக்கோம்.மொதவிருந்து அங்க போடப்போறோம்.நேர்ல கூப்பிட்டாதான் நல்லா இருக்கும்!"னு சொல்ல,.எல்லாரும் சரின்னு சொல்லிட்டங்க.அதுமட்டுமில்லாம,அந்த பெரிய மனுசனையே சொந்தக்காரங்களை அழைக்கபோகச் சொல்லிட்டாங்க. 

   அந்தப் பெரிய மனுசன் நான்தான்ங்கிறதால சனிக்கிழமை காலைல நேரமாவே வண்டிய விட்டேன்.கொளுத்துற வெயில்னு கேள்விப்பட்டிருக்கேன்.பதிலை நல்லா பட்டுத் தெரிஞ்சுகிட்டேன்.போற வீடுகள்ல தண்ணீர்பதார்த்தமா சாப்பிட்டதால,தாக்கம் பெருசா தெரியல (தாக்கம் தான். தாகம்-னு நினச்சு எனக்கு தமிழ் வராதுன்னு முடிவு கட்டிடாதீங்க).போன வாரம் நெறஞ்ச மழை பேஞ்சதால,சூடு கொறஞ்சிருக்குன்னு சில ஊர்ல சொன்னாங்க."அடே பாருடா.நம்ம ஊரு மாரியாத்தா இந்த ஊருக்கு இறைச்சுவிட்டிருக்கா!"னு மனசுக்குள்ள நினச்சுகிட்டேன்.

   வீடுவந்து சேர 5 மணி ஆகிடுச்சு.உத்தேசமா 120கல் தூரத்தை வண்டியில கடந்திருப்பேன்.சூட்டுல கண்ணு ரெண்டும் கோவப்பழமா சிவந்திடுச்சு.தலை நிறைய எண்ணெய பூசிகிட்டு,படுத்துகிட்டேன்.மெதுவா கண்ணைமுழிச்சு பார்த்தப்போ சென்னை அணி விளையாட்டு டிவிக்குள்ள நடந்துகிட்டுஇருந்தது.திடும்மென எழுந்து உட்கார்ந்து,அரைத்தூக்கத்தில கைதட்டிட்டிருந்தேன்.என்ன நடக்குதுன்னே காலைல வரை தெரிய.அவ்வளவு அலுப்பு.

   இந்தவாரம் வியாழக்கிழமை திருவிழா வரப்போகுது.அழைச்ச சொந்தக்காரங்க எல்லாம் வருவாங்க.அவங்களோட சேர்ந்து கிடா விருந்து சாப்பிடப்போறேன்.நாள் முழுக்க எங்கவீடு நெறைய உறவுகள் இருக்கப்போறாங்க.அடுத்த விசேசம் வரை காணக்கிடைக்காத காட்சி அது.இந்த எண்ணம் மனசுக்குள்ள வரும்போதே,அலுப்பு சலிப்பெல்லாம் தண்ணிவத்திப்போன பக்கத்து ஊரு ஆத்தோட போயிருது.

 இன்னொரு முக்கியமான விசயம்.படிக்கிற நீங்களும் எங்க வீட்டு விருந்துக்கு வந்துடுங்க.அப்புறம் சொல்லலனு கோவிச்சுக்கப்படாது.

மாரியம்மன் கோவில் சித்திரைத் திருவிழா

நாள் : 25 April வியாழன்,2013
இடம் : எங்க வீடு

Friday, April 19, 2013

கன்னித்தமிழே வருக வருக!

நம் அனைவருக்குமே தெரிந்த ஒரு பொது அறிவு பதில், "தமிழ் என் தாய்மொழி!".சில பேருக்கு இது மறந்துவிட்டது என நினைக்கிறேன்.பாவம் அவர்கள் என்ன செய்வார்கள்?ஆங்கிலமொழியின் அதீத பயன்பாட்டினால் தமிழ் பேசவும்,தமிழைப் பற்றி சிந்திக்கவும் நேரம் கிடைப்பதில்லை.வேற்று மொழி கற்கும்போது கூட,அவர்கள் சொல்லும் முதல் அறிவுரை,தாய்மொழியின் வீச்சினைக் கட்டுப்படுத்துங்கள் என்றுதான்.(Kill your Mother toungue influence -Eg.Think in English, Speak in English).கட்டுப்படுத்திக் கட்டுப்படுத்தி, இன்று தாய்மொழி காணாமல்போய்விட்டது பலரின் நாவில்.




ஒருநாள்,உணவு இடைவேளைப் பொழுதில் இதுபற்றிய பேச்சு எழுந்தது."தமிழ் விழிப்புணர்வு இன்றைய இளைய சமுதாயத்தில் ஏற்பட்டிருக்கிறதா?" என்று.அனைவரும் ஆம் என்றே சொன்னார்கள்.கமலுக்கு ஆதரவாய் தமிழர் அனைவரும் உன் பின்னால் நிற்போம் என்கிறது ஒரு கூட்டம்

தனி ஈழம் எங்கள் கொள்கை.அங்கிருப்பவர்களும் எங்கள் உடன்பிறப்புகளே என்று பொங்கி எழுகின்றது ஒரு கூட்டம்."சென்னை சூப்பர் கிங்க்ஸ்-க்கு பெரியவிசில் போடு" என ஆர்ப்பரிக்கிறது ஒரு கூட்டம். 

எப்படியோ,தமிழன் என்ற வார்த்தை ஏதோ ஒரு வகையில் அனைவரிடமும் கொண்டுசெல்லப்பட்டிருக்கிறது என்பது மகிழ்ச்சியான செய்தி.அதேபோல, தமிழ் மொழிப்பற்று காட்டுத்தீயாய் பரவி வருவது இன்னொரு இனிப்புச் செய்தி.சமூக வலைதளங்கள்,இணையங்கள் மற்றும் கல்லூரி மாணவர்களின் தமிழ் சங்கங்கள்,தொலைக்காட்சி என மொழி விழிப்புணர்வினை ஏற்படுத்த ஏராளமான ஊடகங்கள் தற்போது காணக்கிடைக்கின்றன.உதாரணமாக,

சில உணர்வுகள் எல்லை மீறும்போது,அதன் விளைவுகள் கொஞ்சம் அச்சத்திற்குரியவையே.தமிழ்பற்று என்ற பெயரில் நாம் பார்ப்பவற்றையெல்லாம் மொழிமாற்றம் செய்யத்துணிகிறோம்.உதாரணமாக,FaceBook என்பதை முகப்புத்தகம் என்று அழைப்பதைப் பார்க்கமுடிகிறது.அது ஒரு நிறுவனத்தின் பெயரல்லவா?அதை உள்ளபடி உபயோகிப்பதே சிறப்பு! All clear Shampoo' என்பதை "எல்லாம் முடிந்தது" என்றோ,Microsoft என்பதை "சின்ன மென்மை" என்றோ நாம் அழைக்கிறோமா?மொழிபெயர்ப்பினை பெயர்களுக்கு பயன்படுத்த வேண்டியதில்லை.இதுபோன்ற மாற்றங்கள் கவனிக்கப்படவேண்டியவை.

Google தேடுதளத்தில்,"தமிழ்" என்று தேடியதில் கிடைத்த செய்திகள் இங்கே.



அதேபோல"English" என்று தேடியதில் கிடைத்த செய்திகள் இங்கே.


படங்களாகட்டும்,இணையபக்கங்களாகட்டும், தமிழ் இலக்கியம் தொடர்பானவை மிகக் குறைவே.இரண்டுபக்கங்கள் தாண்டினால்,இன்னும் படுமோசமான முடிவுகளைப் பார்க்கமுடிகிறது.
தமிழ்மொழியின் இணைய இலக்கியப் பதிவுகள் அதிகரிக்கப்பட வேண்டும்.தமிழ் கற்கும் தளங்கள் இன்னும் அதிகமாக துவக்கப்பட்வேண்டும்.நாளிதழகள் மற்றும் தொலைக்காட்சிகள் போல, தமிழ் பற்றிய அனைத்து புத்தகங்களும், இணையத்தில் படிக்கும்படி செய்யப்படவேண்டும்.

இன்றைய தமிழ்மொழி நிலை பற்றீய இன்னுமொரு பதிவு.இங்கே

இன்னும் பேசலாம் தமிழ்மொழியை சரியான பாதையில் வேர்விடவைக்க.

- அன்புடன் ராஜ்குமார்