Showing posts with label செய்திகள். Show all posts
Showing posts with label செய்திகள். Show all posts

Monday, November 19, 2018

குறுங்கதைகள்

Tech Geek

" Tech " என முன்புறமும்," Geek " என்று பின்னாலும் எழுதிய T-shirt அணிந்து கொண்டு, தான் முன்னே வாங்கி வைத்த வடையும்,இட்லியையும் எந்த டேபிளில் வைத்தோம் என்று தெரியாமல் திருதிருவென விழித்தபடி,ஒருகையில் காபி சிந்துவது கூடத் தெரியாமல்,இன்னொரு கையில் "Whatsapp status" பார்த்துக் கொண்டு சுற்றி சுற்றி நடந்த அந்த சக தொழிலாளியைப் பார்த்தபோது மனதில் சொல்லிக்கொண்டேன்..இவன் "
Tech Geek" இல்லை.."Tech Freak ".

கஜா புயல்..

  புயலால் மரங்கள் சரிந்து வெள்ளம் கரைபுரண்டு ஓடிய பொழுதில், சரிந்த மரங்கள் மீது நின்றும், வெள்ளத்தின் ஓரத்திலும் நின்று எடுக்கப்பட்ட selfie -கள் சமுதாயத்திற்கு சொல்வது என்ன?

வழி..

Google Map -ல் வழிதேடி எளிதில் நண்பன் வீட்டை வந்தடைந்தேன்..
ஆனால், திரும்பி வரும்போது தான் தெரிந்தது, எனது பயண அனுபவங்கள் எல்லாம் google map history -க்குள் முடங்கி விட்டன என்று..அதில் நான் தொலைத்தவை உணர்வுகளும்,பல மனித முகங்களும்...

அதற்குத் தக..

உதவி என்று கேட்டவர்களுக்கு உன் கைகள் உதவட்டும். ஒரு கை உனக்கு என்றால்,மற்றது,ஏழை எளியவர்களுக்கு கொடுப்பதற்கு என்ற ஒரு சினிமா வசனத்தைக் கேட்டுக்கொண்டே நகர்ந்த என்னிடம் ,"சாமி..சாப்பிட்டு நாலு நாள் ஆச்சு சாமி..எதாவது போடுங்க.." என்றது சிறுவனின் கூக்குரல்.."சில்லறை இல்ல.." என்று சொல்லிவிட்டு வழக்கம் போல அவனைக் கடந்து வந்துவிட்டேன்.யாரோ யாரையோ சத்தமாகத் திட்டியது காதில் விழுந்தது..மன்னிக்க வேண்டும்.அது எழுத இயலாத கெட்டவார்த்தை.
எனக்கு எனோ சுருக்கென்றது..


- ராஜ்குமார்
16-11-18 10:50

Thursday, December 10, 2015

உறுமீன் (திரை விமர்சனம் அல்ல)

இன்றைய காலங்களில் தமிழ் திரைப்படங்கள் எத்தனையோ மாறுதல்களைக் கண்டுள்ளது மகிழ்ச்சி நிறைந்த செய்தி.அதுவும்,"காதல்","தாய்","தங்கை" அல்லது கதாநாயகன் பெயரை படத்திற்குச் சூட்டாமல் வேறுபட்டு யோசிக்கின்றனர் இன்றைய இளம் திரை நண்பர்கள். அதுவும் அழகுத் தமிழில் வெளிவந்த சில படப்பெயர்கள் என்னை வியக்க வைத்தன.
அவைகளில் சில .."யான்"- நான்,ஐ - அழகு ,அநேகன்-ஒரே உருவில் மற்றொருவன்,அயன்-படைப்பவன்(பிரம்மா) இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்.

நேற்று குடும்பத்துடன் "உறுமீன்" படம் பார்க்கச் சென்றேன்.அந்தப் பெயர் கூட ஒரு பழைய தமிழ் செய்யுள் வரி போலத் தோன்றியது.படம் பார்க்கும்போதே அதன் பொருள் இதுவாகத்தான் இருக்கும் என எண்ணிக்கொண்டேன்.
நண்பர்கள் இன்று காலையில் மீண்டும் "உறுமீன்" பற்றிப் பேச,எனக்கு அதன் பொருளை அறிந்துகொள்ளும் ஆவல் இன்னும் அதிகமானது.அனைவரின் இலவச ஆசான்,"கூகிள்" உதவியுடன் அச்செய்யுளை நான் கண்டுபிடித்தேன்.

அவ்வையார் அருளிய "மூதுரை"-யில் இடம்பெற்றுள்ளது "உறுமீன்".
அடக்கம் உடையார் அறிவிலர் என்றெண்ணிக்
கடக்கக் கருதவும் வேண்டா - மடைத் தலையில்
ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும்
வாடி இருக்குமாம் கொக்கு. 16


பொருள்:
 ஆற்றின் கரையில் ஒருகாலை ஊன்றி நிற்கும் கொக்கு, சிறு மீன்களை ஓடவிட்டுவிட்டு வாடியதுபோல காத்திருப்பதற்குக் காரணம்,தனக்குப் போதுமான பெரியமீனைப் பிடிப்பதற்காகவே.அதைவிடுத்து, அக்கொக்கினை நாம் முட்டாள் என எண்ணிவிடக் கூடாது.
அதுபோலவே, அடக்கம் கொண்ட மக்கள், நீங்கள் கூறும் தூற்றல்களைக் கண்டுகொள்ளாமல் இருப்பதால்,அவர்களை முட்டாள்கள் என்று கூறி ஏமாறவேண்டாம்.அவர்கள் தம் வலிமைக்குச் சமமான எதிரியாக உம்மை நினைக்கவில்லை என்று அறிக.


நீதி:  யாரையும் குறைத்து மதிப்பிடாதே!

ஆக, நமது உறுமீன் பட நாயகன்,இரண்டு ஜென்மங்களாய் விட்டுவிட்ட தனது எதிரியை,தன்னை முட்டாள் என எண்ணிய பெரிய மீனை,மூன்றாம் ஜென்மத்தில் வென்றுவிட்டான்.உறுமீன் சிக்கி விட்டது.


Friday, September 19, 2014

தெரிந்து கொள்ளுங்கள் !

• நாம் இறந்த பிறகும் கண்கள் 6 மணிநேரம் பார்க்கும் தன்மையுடையது.

• சுகபிரசவம் அல்லாமல் தன் தாயின் வயிற்றில் இருந்து கிழித்து வெளியே எடுக்கப்பட்டவர் ஜூலியஸ் சீசர். அதனால்தான் இந்த முறைக்கு ‘சீசரியன்’ என்று பெயர் வந்தது.
•பிறந்து ஆறுமுதல் எட்டு வாரங்கள் வரை குழந்தைகள் அழுதால் கண்ணீர்வராது.
•  நான்குவயது குழந்தைகள் ஒருநாளைக்கு சுமார் 400 கேள்விகள் கேட்கும்.
• கருவில் முதன்முதலில் உருவாகும் உறுப்பு இதயம்.மனிதன் இறந்து போனதும் முதலில்செயலிழக்கும் உறுப்பு - இதயம்.

• மனித உடல்களில் சுமார் 6 கோடியே 50 லட்சம் செல்கள் இருகின்றன.
• ஒரு தலைமுறை என்பது 33 ஆண்டுகள்.

•மார்க்கோபோலோ என்கிற சிகரெட்நிறுவனத்தின் முதல்உரிமையாளர் நுரையீரல் புற்றுநோய்தாக்கி இறந்துப்போனார்.
• பழமரங்களில் நீண்டகாலம் விளைச்சல் தருவது ஆரஞ்சுமரம். சுமார் 400 ஆண்டுகளாக தொடர்ந்துஅது விளைச்சல் தரும்.


• ஒருதர்பூசணிபழம் இருந்தால் அதில் இருந்து 6 லட்சம்தர்பூசணிபழங்களை உற்பத்தி செய்துவிடலாம்.

• பொதுவாக தாவரங்கள்நகராது. ஆனால் கிலாமிடோமொனாஸ் என்றஒருசெல்தாவரம் நகர்ந்துபோகும் தன்மைஉடையது.
• பச்சோந்தியின் நாக்கு தன் உடலின் நீளத்தை விட இரண்டு மடங்குஅதிகமாகஇருக்கும்.

• நாக்கை நீட்டமுடியாதஒரே விலங்கு முதலை.

• நீலதிமிங்கலத்தின்எடை 22 யானைகளின் எடைக்கு சமம். அதன்இதயம்ஒருசிறியகார் அளவில் இருக்கும்.
• யானையின் கால்தடத்தின் நீளம் அளந்து, அதை ஆறால் பெருக்கி வரும் விடையே - யானையின்உயரம்.

• ஒருபுள்ளி அளவு இடத்தை 70,000 (எழுபதாயிரம்) அமிபாக்களால் நிரப்பமுடியும்.

• தரையில் முதுகுபடும்படி உறங்கும் ஒரேஉயிரினம் - மனிதன்.

•முன்னால் பின்னால் பக்கவாட்டில் என அனைத்து பக்கங்களிலும் பறக்க முடிந்தபறவை - தேன்சிட்டு.
• தேன்சிட்டு, மரங்கொத்தி, போன்றபறவைகளுக்கு நடக்கத்தெரியாது.

Monday, April 22, 2013

கிடா விருந்து அழைப்பு!


சித்திரை மாசம் வந்தாலே பெரும்பாலான கிராமங்கள்ல திருவிழா களைகட்டும்.குறைஞ்சது 3வார விழாவ நடத்துவாங்க.பூப்போட்டு அம்மை அழைக்கிறதுல இருந்து,கம்பம் நட்டு,திருவிழா எடுத்து மஞ்சள்நீர்,மறுபூசை வரை பல கட்டமா,உற்சாகம் குறையாம ஊர் முழுக்க கொண்டாடுவாங்க.இத்தனை அலம்பல்ல, வராத மழை கூட வந்துடும்-ங்கிறது நம்பிக்கை.போன வருசம் கூட பருவம் மாறாம கொஞ்சம் மழை வந்துச்சு.இந்த ஒரு வருசமா சொட்டுத்தண்ணி கூட பார்க்கமுடியல.புயல் தள்ளிவிட்ட மேகங்கள் மட்டும் அப்பப்ப வந்து கண்ணீர்விட்டுட்டு போனது.போன வாரம் எங்க ஊருல கம்பம் நட்டு,இந்தவார விழா நடக்கப்போவதை உறுதி செய்திருந்தாங்க.அந்தன்னைக்கு மழை வரும்னு எல்லாரும் வானத்தைப் பார்த்துக் கிடந்தோம்.பூசாரி போட்ட தீர்த்தம் தான் மிச்சம்.


   சாமிவந்து ஆடின அந்த பூசாரி சிபிஐ கணக்கா ஒன்னு சொன்னாரு,"ஊர் எல்லையில எவனோ உரலைப் போட்டு வச்சிருக்கான்.அத எடுத்து எறிஞ்ச உடனே மழை வரும்"னு.நான் சிரிச்சுகிட்டே வீட்டுக்கு வந்துட்டேன்.சொல்லி ஒருவாரம் ஆனாலும் மழையைக் காணோம்.அதுக்காக, பூசாரிக்கு அருள்வரலை,சாமி வாக்கு சரியா குடுக்கலை அப்டினு முடிவு சொல்றேன்னு நினைக்கக் கூடாது.மக்களே மறந்தாச்சு.வர்ற நோம்பிக்கு கறிசோறு தின்னப்போறோம்னு சந்தோசமோ என்னமோ.ஆடு,கோழின்னு பக்தியோட வெட்டி சாமிக்கா ஊட்டி விடறோம்?நம்ம காசு.நம்ம வயிறு.சாமிக்கு என்ன தெரியும்னு நெனச்சாங்களோ என்னமோ?

நான் சொல்ல வந்ததை விட்டு எதையோ பேசிட்டிருக்கேன்.

   இந்த மாரியம்மன்கோவில் பொங்கல் விழாவுக்கு,கிடாய் வெட்டி சொந்தங்களை அழச்சு விருந்துபோடலாம்னு எங்க வீட்டுல முடிவு செஞ்சோம்.போன் பண்ணி எல்லாரையும் அழைச்சா போதும்னு வீட்டுல பேசிகிட்டாங்க.ஒரு பெரிய மனுசன் வாய வச்சுட்டு சும்மா இருக்காம,"அதென்ன போன்ல கூப்படறது?புதுவீடு கட்டிருக்கோம்.மொதவிருந்து அங்க போடப்போறோம்.நேர்ல கூப்பிட்டாதான் நல்லா இருக்கும்!"னு சொல்ல,.எல்லாரும் சரின்னு சொல்லிட்டங்க.அதுமட்டுமில்லாம,அந்த பெரிய மனுசனையே சொந்தக்காரங்களை அழைக்கபோகச் சொல்லிட்டாங்க. 

   அந்தப் பெரிய மனுசன் நான்தான்ங்கிறதால சனிக்கிழமை காலைல நேரமாவே வண்டிய விட்டேன்.கொளுத்துற வெயில்னு கேள்விப்பட்டிருக்கேன்.பதிலை நல்லா பட்டுத் தெரிஞ்சுகிட்டேன்.போற வீடுகள்ல தண்ணீர்பதார்த்தமா சாப்பிட்டதால,தாக்கம் பெருசா தெரியல (தாக்கம் தான். தாகம்-னு நினச்சு எனக்கு தமிழ் வராதுன்னு முடிவு கட்டிடாதீங்க).போன வாரம் நெறஞ்ச மழை பேஞ்சதால,சூடு கொறஞ்சிருக்குன்னு சில ஊர்ல சொன்னாங்க."அடே பாருடா.நம்ம ஊரு மாரியாத்தா இந்த ஊருக்கு இறைச்சுவிட்டிருக்கா!"னு மனசுக்குள்ள நினச்சுகிட்டேன்.

   வீடுவந்து சேர 5 மணி ஆகிடுச்சு.உத்தேசமா 120கல் தூரத்தை வண்டியில கடந்திருப்பேன்.சூட்டுல கண்ணு ரெண்டும் கோவப்பழமா சிவந்திடுச்சு.தலை நிறைய எண்ணெய பூசிகிட்டு,படுத்துகிட்டேன்.மெதுவா கண்ணைமுழிச்சு பார்த்தப்போ சென்னை அணி விளையாட்டு டிவிக்குள்ள நடந்துகிட்டுஇருந்தது.திடும்மென எழுந்து உட்கார்ந்து,அரைத்தூக்கத்தில கைதட்டிட்டிருந்தேன்.என்ன நடக்குதுன்னே காலைல வரை தெரிய.அவ்வளவு அலுப்பு.

   இந்தவாரம் வியாழக்கிழமை திருவிழா வரப்போகுது.அழைச்ச சொந்தக்காரங்க எல்லாம் வருவாங்க.அவங்களோட சேர்ந்து கிடா விருந்து சாப்பிடப்போறேன்.நாள் முழுக்க எங்கவீடு நெறைய உறவுகள் இருக்கப்போறாங்க.அடுத்த விசேசம் வரை காணக்கிடைக்காத காட்சி அது.இந்த எண்ணம் மனசுக்குள்ள வரும்போதே,அலுப்பு சலிப்பெல்லாம் தண்ணிவத்திப்போன பக்கத்து ஊரு ஆத்தோட போயிருது.

 இன்னொரு முக்கியமான விசயம்.படிக்கிற நீங்களும் எங்க வீட்டு விருந்துக்கு வந்துடுங்க.அப்புறம் சொல்லலனு கோவிச்சுக்கப்படாது.

மாரியம்மன் கோவில் சித்திரைத் திருவிழா

நாள் : 25 April வியாழன்,2013
இடம் : எங்க வீடு

Friday, April 19, 2013

கன்னித்தமிழே வருக வருக!

நம் அனைவருக்குமே தெரிந்த ஒரு பொது அறிவு பதில், "தமிழ் என் தாய்மொழி!".சில பேருக்கு இது மறந்துவிட்டது என நினைக்கிறேன்.பாவம் அவர்கள் என்ன செய்வார்கள்?ஆங்கிலமொழியின் அதீத பயன்பாட்டினால் தமிழ் பேசவும்,தமிழைப் பற்றி சிந்திக்கவும் நேரம் கிடைப்பதில்லை.வேற்று மொழி கற்கும்போது கூட,அவர்கள் சொல்லும் முதல் அறிவுரை,தாய்மொழியின் வீச்சினைக் கட்டுப்படுத்துங்கள் என்றுதான்.(Kill your Mother toungue influence -Eg.Think in English, Speak in English).கட்டுப்படுத்திக் கட்டுப்படுத்தி, இன்று தாய்மொழி காணாமல்போய்விட்டது பலரின் நாவில்.




ஒருநாள்,உணவு இடைவேளைப் பொழுதில் இதுபற்றிய பேச்சு எழுந்தது."தமிழ் விழிப்புணர்வு இன்றைய இளைய சமுதாயத்தில் ஏற்பட்டிருக்கிறதா?" என்று.அனைவரும் ஆம் என்றே சொன்னார்கள்.கமலுக்கு ஆதரவாய் தமிழர் அனைவரும் உன் பின்னால் நிற்போம் என்கிறது ஒரு கூட்டம்

தனி ஈழம் எங்கள் கொள்கை.அங்கிருப்பவர்களும் எங்கள் உடன்பிறப்புகளே என்று பொங்கி எழுகின்றது ஒரு கூட்டம்."சென்னை சூப்பர் கிங்க்ஸ்-க்கு பெரியவிசில் போடு" என ஆர்ப்பரிக்கிறது ஒரு கூட்டம். 

எப்படியோ,தமிழன் என்ற வார்த்தை ஏதோ ஒரு வகையில் அனைவரிடமும் கொண்டுசெல்லப்பட்டிருக்கிறது என்பது மகிழ்ச்சியான செய்தி.அதேபோல, தமிழ் மொழிப்பற்று காட்டுத்தீயாய் பரவி வருவது இன்னொரு இனிப்புச் செய்தி.சமூக வலைதளங்கள்,இணையங்கள் மற்றும் கல்லூரி மாணவர்களின் தமிழ் சங்கங்கள்,தொலைக்காட்சி என மொழி விழிப்புணர்வினை ஏற்படுத்த ஏராளமான ஊடகங்கள் தற்போது காணக்கிடைக்கின்றன.உதாரணமாக,

சில உணர்வுகள் எல்லை மீறும்போது,அதன் விளைவுகள் கொஞ்சம் அச்சத்திற்குரியவையே.தமிழ்பற்று என்ற பெயரில் நாம் பார்ப்பவற்றையெல்லாம் மொழிமாற்றம் செய்யத்துணிகிறோம்.உதாரணமாக,FaceBook என்பதை முகப்புத்தகம் என்று அழைப்பதைப் பார்க்கமுடிகிறது.அது ஒரு நிறுவனத்தின் பெயரல்லவா?அதை உள்ளபடி உபயோகிப்பதே சிறப்பு! All clear Shampoo' என்பதை "எல்லாம் முடிந்தது" என்றோ,Microsoft என்பதை "சின்ன மென்மை" என்றோ நாம் அழைக்கிறோமா?மொழிபெயர்ப்பினை பெயர்களுக்கு பயன்படுத்த வேண்டியதில்லை.இதுபோன்ற மாற்றங்கள் கவனிக்கப்படவேண்டியவை.

Google தேடுதளத்தில்,"தமிழ்" என்று தேடியதில் கிடைத்த செய்திகள் இங்கே.



அதேபோல"English" என்று தேடியதில் கிடைத்த செய்திகள் இங்கே.


படங்களாகட்டும்,இணையபக்கங்களாகட்டும், தமிழ் இலக்கியம் தொடர்பானவை மிகக் குறைவே.இரண்டுபக்கங்கள் தாண்டினால்,இன்னும் படுமோசமான முடிவுகளைப் பார்க்கமுடிகிறது.
தமிழ்மொழியின் இணைய இலக்கியப் பதிவுகள் அதிகரிக்கப்பட வேண்டும்.தமிழ் கற்கும் தளங்கள் இன்னும் அதிகமாக துவக்கப்பட்வேண்டும்.நாளிதழகள் மற்றும் தொலைக்காட்சிகள் போல, தமிழ் பற்றிய அனைத்து புத்தகங்களும், இணையத்தில் படிக்கும்படி செய்யப்படவேண்டும்.

இன்றைய தமிழ்மொழி நிலை பற்றீய இன்னுமொரு பதிவு.இங்கே

இன்னும் பேசலாம் தமிழ்மொழியை சரியான பாதையில் வேர்விடவைக்க.

- அன்புடன் ராஜ்குமார்