Friday, February 24, 2012

தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா!

இந்தத் தலைப்பு வெறும் வசனமாக எனக்குத் தோன்றவில்லை.நமது முன்னோர்கள் அந்த வார்த்தையை உண்மையாக்கி வாழ்ந்திருக்கிறார்கள்.வெளிநாட்டவர் ஒருபக்கம் அறிவியல் எழுச்சியில் இறங்கியிருக்க, இங்கே சத்தமில்லாமல், வானவியலும்,இயற்பியலும்,கட்டடக் கலையும், இன்னும் இது போன்ற எத்தனையோ கலைகளும் சிறப்புற்றிருந்தன.

அந்த வரிசையில் கணிதவியலையும் எடுத்துக்கொள்ளலாம்.
ஒரு செங்கோண முக்கோணத்தில், அதன் கர்ணத்தின் நீளத்தின் இருமடியானது,
மற்ற பக்க நீளங்களின் இருமடிகளின் கூட்டுக்கு சமம்.”- பித்தாகரஸ் தேற்றம்

இத்தேற்றத்தை கிரேக்க நாட்டு கணிதவியல் அறிஞர், மெய்யியல் அறிஞராகிய பித்தேகோரசு கண்டுபிடித்தார் என்று பொதுவாக நம்பப்படுவதால், அவர் பெயரால் இத்தேற்றம் வழங்குகின்றது.ஆனால் அவருக்கு முன்பாகவே நமது புலவர் போதையனார் நமக்கு அருளியதை பார்க்கின்றோம்.

"ஓடும் நீளம் தனை ஒரேஎட்டுக்
கூறு ஆக்கி கூறிலே ஒன்றைத்
தள்ளி குன்றத்தில் பாதியாய்ச் சேர்த்தால்
வருவது கர்ணம் தானே"


a=8(நீளம்)
b=6(குன்றம்)
c=?(கர்ணம்)
c= (a - a/8) + (b/2)
   = 8-(8/8) + (6/2) =10
c=10.


போதையனார் தேற்றத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், வர்க்கமூலம்(√) இல்லாமலேயே, நம்மால் இக்கணிதமுறையை பயன்படுத்த முடியும்.

பொது வாழ்விற்கும் உதவும் கணக்கு வழிமுறைகளும் நம்மிடம் உண்டு.

ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதை இருக்கிறது என்பதை உங்களால் கூற முடியுமா?

முடியும் என்கிறார்கள் நமது முன்னோர்கள்.இதோ ஒரு தமிழ் செய்யுளின் வரிகள்.

கீற்றெண்ணி முத்தித்துத் கீழாறினால் மாறி
வேற்றையஞ்சு தன்னில் மிகப்பெருக்கிப் பார்த்ததிலே
பாதி தள்ளி மூன்றிற் பகிர விதையாகும்
பூசணிக்காய் தோறும் புகல்.

ஒரு பூசணிக்காயின் கீற்றுகளை எண்ணிக்கொண்டு அதை மூன்று, ஆறு , ஐந்து, இவற்றால் பெருக்கி வரும் விடையை பாதியாக்கி மீண்டும் மூன்றால் பெருக்கினால் வருவது விதைகளின் எண்ணிக்கையாகும்

ஒரு பூசணியில் உள்ள கீற்றுகளின் எண்ணிக்கையை X என்க.
பாடலின் படி அதை 3,6,5 ஆகியவற்றால் பெருக்க கிடைப்பது 90X ஆகும் அதை பாதியாக்கினால் கிடைப்பது 45X ஆகும் அதை மீண்டும் மூன்றால் பெருக்க கிடைப்பது 135X ஆகும்.

ஒரு பூசணியில் உள்ள கீற்றுகளின் எண்ணிகையை X=6 ஆறு எனக்கொண்டால் (135 * 6 = 810) 135 ஐ ஆறால் பெருக்க வேண்டும் கிடைப்பது 810 ஆகும் எனவே பூசணியில் உள்ள விதைகளின் எண்ணிக்கை 810 ஆகும்.

அடுத்த முறை பூசணி வாங்கும் போது சரிபாருங்கள்.

எந்த பூசணிக்காயில் அதிக விதைகள் இருக்கின்றதோ அதை தான் ஒரு பூசணிக்காய் விவசாயி வாங்குவான், ஏன் என்றால் தன் நிலத்தில் அதிக விதைகளை பயிரிட்டால் தான் அவனுக்கு அதிக மகசூல் கிடைக்கும். சரி பூசணியை விடுங்கள்.

ஒரு சுளை 3 ரூபாய்க்கு விற்கும் ஒரு பலாச்சுளை வியாபாரி அதிக சுளைகள் உள்ள பழங்களையே வாங்க விரும்புவான். பழங்களை உடைக்காமலே உள்ளிருக்கும் சுளைகளை அறிவது அவனுக்கு பயன் தரும்.அதற்கான வழிமுறையும் நம்மிடம் இருக்கிறது.


ஒரு பலாப்பழத்திலுள்ள காம்பைச் சுற்றிய முதல் வரிசையில் உள்ள முட்களை எண்ண வேண்டும். அந்த எண்ணிக்கையை ஆறால் பெருக்க வேண்டும். அதில் கிடைக்கும் தொகையை ஐந்தால் வகுத்தால் பலாப்பழத்தில் உள்ள பலாச் சுளைகளின் எண்ணிக்கை கிடைக்கும்.

இந்த வழிமுறைகளை, கணக்கதிகாரம் என்ற நூலில் தெளிவாக விளக்கியவர் காரிநாயனார் என்ற புலவர்!

ஆச்சர்யம் தான். இதைப் போலவே பல கணக்கியல் வல்லுனர்களும்,அவர்களது நூல்களும் நம் தமிழகத்தில் இன்று சுவடில்லாமல் மறைந்தன(ர்) என்பது உண்மை.

போனது போகட்டும். மிஞ்சி நிற்கும் பெருமைகளை நாகரிகம் என்ற பெயரால் அழியாமல் காத்து, தமிழை வாழ வைப்போம்! தமிழன் என்ற பெருமையை நிலைநிறுத்துவோம்!

"தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா!"

Tuesday, February 7, 2012

விளக்கம் தெரியுமா?

பழமொழி: மாமியார் உழைத்தால் மண்ணுக்கு உரம்-மருமகளும் உழைத்தால் பொன்னுக்கு உரம்.
விளக்கம்:
விவசாயிகள் வீட்டில் ஆண், பெண், குழந்தைகள் என அத்தனை பேரும் தங்கள் விளைநிலத்தில் உழைக்கின்றனர். இதில் ஆணுக்கு இணையாக பெண்கள் ஈடுபடும் போது வெளிமனிதர்களுக்குக் கொடுக்கும் கூலி மிச்சமாகிறது. அதோடு ஒற்றுமையின் விளைவாக உழைப்பின் பலன் பெருகுகிறது. மாமியார் தங்கள் குடும்ப நிலத்தில் உழைத்தால், அது மண்ணுக்கு உரம். அதாவது அந்த வீட்டுத் தலைவனின் கரங்களைப் பலப்படுத்துவதின் மூலம் அவர்கள் சொந்த மண்ணுக்கு உரமாகும். வீட்டுக்கு வந்த மருமகளும் சேர்ந்து உழைத்தால் மண் பொன்னாகும். பொன்னுக்கே உரம் என்றார்கள்.

இவ்வளவு அருமையான கருத்துடைய பழமொழியே நாளடைவில் மாமியார்களைப் பற்றி ஒரு தவறான கருத்தைக் கூறுவது போல் அமைந்து விட்டது.

மாமியார் உடைத்தால் மண் குடம்: மருமகள் உடைத்தால் பொன் குடம்.
ஒரே தவறை மாமியார் செய்யும் போது அது பெரிதாகக் கருதப்படுவதில்லை. ஆனால், வீட்டுக்கு வந்த மருமகள் அதே தவறைச் செய்துவிட்டால், அதை மாமியார் பெரிதுபடுத்திவிடுகிறார் என்பது தான் இதன் அர்த்தம்.

Monday, January 23, 2012

சுஜாதாவின் பத்து பயனுள்ள கட்டளைகள்

1. ஒன்றின் மேல் நம்பிக்கை வேண்டும், ஏதாவது ஒன்று. உதாரணம் கடவுள், இயற்கை, உழைப்பு, வெற்றி இப்படி எதாவது… நம்பிக்கை நங்கூரம் போல. கேள்வி கேட்காத நம்பிக்கை. கேள்வி கேட்பது சிலவேளை இம்சை. நவீன விஞ்ஞானம் அதிகப்படியாகக் கேள்வி கேட்டு இப்போது தவித்துக் கொண்டிருக்கிறது.


2. அப்பா, அம்மா இரண்டு பேரும் வேலை சொல்வது பல சமயங்களில் கடுப்பாக இருக்கும். ஒருமாறுதலுக்கு அவர்கள் சொல்வதைச் செய்து பாருங்கள். அவர்கள் கேட்பது உங்களால் செய்யக் கூடியதாகவே இருக்கும். பொடிநடையாகப் போய் நூறு கிராம் காப்பி பவுடர் (அ) ரேஷன் கார்டு புதுப்பித்தல் இப்படிதான் இருக்கும்.


3. மூன்று மணிக்குத் துவங்கும் மாட்டனி போகாதீர்கள். க்ளாஸ் கட்பண்ண வேண்டி வரும். தலைவலி வரும். காசு விரயம். வீட்டுக்குப் போனதும் பொய் சொல்வதற்கு ரொம்ப ஞாபக சக்தி வேண்டும். இந்த உபத்திரத்துக்கு உண்மையைச் சொல்லிவிடுவது சுலபம். இளமைக்காலம், ஒளிக் கீற்றைப் போல் மிகவும் குறைந்த காலம், அதை க்யூ வரிசைகளிலும் குறைபட்ட தலைவர்களுக்காகவும் விரயம் செய்யாதீர்கள்.


4. நான்கு பக்கமாவது ஒரு நாளைக்குப் பொது விஷயங்களைப் படியுங்கள். பொது விஷயங்கள் என்றால் கதை, சினிமா, காதல் இல்லாதவை. உதாரணம் – யோக்கியமான செய்தித்தாள், மற்ற பேரைப் பற்றிக் கவலைப்படும் பத்திரிகைகள் அல்லது லைப்ரரியிருந்து ஒரு புத்தகம்.


5. ஐந்து ரூபாய் சம்பாதித்துப் பாருங்கள். சொந்தமாக உங்கள் உழைப்பில், முயற்சியில், யோக்கியமாக, மனச்சாட்சி உறுத்தாமல். அடுத்த முறை அப்பாவிடம் ஆயிரம் ரூபாய்க்கு ஷர்ட், சுடிதார் கேட்கும் முன்.


6. இந்தச் தகவல்களை படிக்கும் நிலைமை பெற்ற நீங்கள் இந்திய சனத்தொகையின் மேல்தட்டு ஆறு சதவிகித மக்களில் ஒருவர். அன்றாடம் சோற்றுக்காக அலையும், வசதியில்லாத கோடிக்கணக்கான மக்களைத் தினம் ஒரு முறை எண்ணிப் பாருங்கள்.


7. வாரத்தின் ஏழாவது தினமான ஞாயிறன்று என்ன செய்தாலும் காதல் பிஸினஸ் வேண்டாம். காதலுக்கு ரொம்பச் செலவாகும். மனம், வாக்கு, காயம்(உடல்), எல்லாவற்றையும் ஆக்கிரமிக்கும் தீ அது. பொய் நிறையச் சொல்ல வேண்டும். வினோதமான இடங்களில் காத்திருக்க வேண்டும். இந்த வயதில் நாசமாய்ப்போன படிப்புத்தான் உங்களுக்கு முக்கியம்.குறிப்பு: பெண்களை சைட் அடிப்பதும், கலாட்டா பண்ணுவதும், அவர்களுக்கு கர்சீப் முதலியன ரோடிலிருந்து பொறுக்கிக் கொடுப்பதும், உபத்திரமில்லாத கவிதைகள் எழுதுவதும், காதலோடு சேர்த்தியில்லை.

8.எட்டு முறை மைதானத்தை சுற்றி ஓடினால் எந்தச் சீதோஷ்ணமாக இருந்தாலும் நெற்றி வியர்வை அரும்பும். எதாவது தேகப் பயிற்சி செய்யவும். கடிகாரத்துக்குச் சாவி கொடுப்பதோ சீட்டாடுவதோ தேகப் பயிற்சி ஆகாது. எதையாவது தூக்குங்கள், எதையாவது வீசி எறியுங்கள். உங்கள் உடலில் ஊறும் உற்சாகத்துக்கு ஓர் ஆரோக்கியமான வடிகால் தேவை. ராத்திரி சரியாக தூக்கம் வரும். கன்னா பின்னா எண்ணங்கள் தவிர்க்கப்படும். ஒழுங்காக சாப்பிடத்தோன்றும். பொதுவாகவே சந்தோஷமாக இருக்கும்.

9. ஒன்பது மணிக்குள் வீட்டுக்கு வரவும். மிஞ்சிப் போனால் ஒன்பது மணி இரண்டு நிமிடம். ஒரு மணி நேரம் பாடம் அல்லது புத்தகம் படிக்கலாம்.

10. படுக்கப் போகும் முன் பத்து நிமிஷமாவது அம்மா, அப்பா, அண்ணன், தங்கை யாருடனாவது பேசவும் (பேசுவது என்று சொன்னவுடன் காதலியுடன் என்று நினைக்க வேண்டாம், நான் சொன்னது குடும்பத்தினருடன் மட்டும்). எதாவது ஒரு அறுவை ஜோக் அல்லது காலேஜில் நடந்த நிகழ்வுகள். சப்ஜெக்ட் முக்கியமில்லை. பேசுவது தான்.

இந்த பத்தில் தினம் ஒன்று என்று முயற்சி செய்து தான் பாருங்களேன்.
 நன்றி ::உலக தமிழ் மக்கள் இயக்கம்

Thursday, January 12, 2012

தமிழா! இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்

"மச்சி..இன்னைக்கு "நண்பன்" ரிலீஸ்.இந்தப் பொங்கல் செம என்ஜாய்மென்ட்.டிக்கெட் புக் பண்ணியாச்சு! காலைல மொதல் ஷோ.வந்துடு"

"ஹாய் டா..இந்த பொங்கலுக்கு டிவி ல நெறைய படம் போடுறானுங்க.மறக்காம பாரு!"

"ஏங்க..இந்த பொங்கல் தள்ளுபடியிலயாவது ஒரு வாசிங்மெசின் வாங்கிக் கொடுங்க!"

இந்த அவசர உலகில்,இப்படி பல வகையான உரையாடல்களை பொங்கல் விடுமுறை தினங்களில் கேட்க முடிகிறது.

"Happy pongal" ,"have a cheerful pongal holidays" என எக்கச்சக்க குறுஞ்செய்திகள் பறக்கின்றன.
சில கணிணி புலிகளால்,மின்னஞ்சலில் வண்ணமயமான வாழ்த்துமடல்கள் அனுப்பப்படுகின்றன.

திரையரங்கு,தொலைக்காட்சி,உல்லாச சுற்றுலா,குறுஞ்செய்தி வாழ்த்துகள் என்ற குறுகிய
வட்டத்துக்குள் பொங்கல் திருவிழா முடிந்து விடுகிறது.விடுமுறை முடிந்த பின் என்றும் போல எந்திர வாழ்க்கை தொடங்கி விடுகிறது.

1995ஆம் ஆண்டு:
நான் முதலாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன்.இதே பொங்கல் விடுமுறை எனக்கும் துவங்கியது. நான்கு நாள்.அன்றைய வகுப்பில் ஆசிரியை நடத்திய பாடம் இன்றும் கண்முன் நிழலாடுகிறது.

"பொங்கலுக்கு முதல் நாள்,அதாவது மார்கழி மாதம் கடைசி நாள் போகி. இது இந்திரவிழா என்றும் சொல்லப்படுகிறது.
பழையன கழிந்து புதியன புகுவதால், இது போக்கி என சொல்லப்பட்டு காலப்போக்கில் போகி என ஆனது.

இரண்டாம் நாள் தைப்பொங்கல்.ஆடியில் விதைத்த நெல்லை அறுவடை செய்த பின்னர், நல்ல விளைச்சலுக்கு காரணமான பூமித்தாய்க்கும்,சூரியனுக்கும் நன்றி சொல்லும் நாள் இது.இன்று புது நெல்லில், பச்சை இஞ்சி முடிந்த புதுப்பானையில் பொங்கலிட்டு,பூமியை வழிபடுவார்கள்.

மூன்றாம் நாள், மாட்டுப்பொங்கல்.உழவுக்கும்,நெல் மூட்டையை வயலிலிருந்து வீடு சேர்க்கவும் உதவியாக இருந்த மாடுகளுக்கு நன்றி சொல்லும் நாள்.இன்றைய நாளில் மாடுகளைக் குளிப்பாட்டி,கொம்புகளுக்கு வண்ணம் பூசி,புதுக்கயிறு மாட்டி அவற்றை அழகு பார்ப்பார்கள் உழவர்கள்.

இறுதி நாள், காணும் பொங்கல் / உழவர் திருநாள்.நெற்பயிரை நன்கு வளர்க்கும் பொருட்டு,கடுமையாய் உழைத்த உழவர் பெருமக்கள், தன் சொந்தம்,நண்பர்கள் என அனைவரையும் கண்டு,வரவேற்று விருந்துண்ணும் நாள்.பல விளையாட்டுப்
போட்டிகள் இந்நாளில் நடத்தப்படும்.".

வகுப்பு முடிந்தது.

அன்று மாலை எங்கள் வயலுக்குச் சென்றிருந்தேன்,அறுவடை முடிந்து களம் வெறுமையாய்க் கிடந்தது.
பக்கத்து களத்தில் கூட்டமாக ஆட்கள்.என்ன என்று பார்க்க ஓடினேன்.
வரிசையாக பெரிய கல் வைக்கப்பட்டிருந்தது.ஒவ்வொரு கல்லிலும்,ஆட்கள் , அறுவடை செய்த நெற்கதிர் கட்டை அடித்துக் கொண்டிருந்தனர்.நெல்மணிகள் சிதறி பறந்தன.இரவு எட்டுமணி.வேலை முடிந்து எல்லோரும் சென்று விட்டார்கள்.

எங்கள் வீடு:

நெல்லுக்கு காவல் காக்க வேண்டி, மாமா களத்துக்குப் புறப்பட்டார்."மாமா! நானும் உங்க கூட வரேன்!" என்று நான் சொல்ல,என்னை அள்ளி எடுத்துக்கொண்டு,"அங்க வேண்டாம் சாமி! பனிக் காத்து அடிக்கும்.உன் உடம்புக்கு எதாவதுவந்தா உங்க அம்மா என்னைப் பேசும்.இங்கயே இரு!"என்று சொல்லி,என்னைக் கட்டிலில் இறக்கிவிட்டு புறப்பட்டு விட்டார்.அம்மாவும்திட்டியதால்,வேறு வழியில்லாமல் படுத்துவிட்டேன்.

காலை புலர்ந்தது.மார்கழி இறுதிநாள்.

விழித்து பார்த்தபோது அத்தையும், சித்தியும் வீட்டை சுத்தம் செய்துகொண்டிருந்தார்கள்.
"மருமகனே! சீக்கிரமா எழுந்து போய், பல்லை வெளக்கிட்டு காப்பியைக் குடி! மணி 7 ஆச்சு!" என்று அத்தை செல்லமாக அதட்டினார்.எழுந்து வீதிக்கு வந்து பார்த்தேன். எல்லா வீடுகளும் அதே பரபரப்பில் இருந்தார்கள்.குளித்துவிட்டு காலை உணவையும் முடித்துக் கொண்டேன்.எனது வாகனத்தை (இரு சக்கரவாகனத்தின் சக்கரம்) எடுத்துக்கொண்டு, பக்கத்துவீதிக்கு சென்றேன்.நாள் முழுக்க விளையாட்டு.மாலை ஆறு மணி. எங்கு பார்த்தாலும் நெருப்பு கொழுந்துவிட்டு ஜொலித்தது.
எங்கள் வீதியிலும் அப்படித்தான்.பழைய பாய்,முறம்,காகிதங்கள் என அனைத்தையும் நெருப்புக்குள் வீசி எறிய,எனக்கும் எதாவதை எறிய வேண்டும் போல இருந்தது."புத்தகப் பையை எறியலாமா?" என்ற எண்ணம் கூட வந்தது.
அம்மாவின் அடிக்கு பயந்து அந்த திட்டம் கைவிடப்பட்டது.கொஞ்சம் பழை காகிதங்கள்,மற்றும் கிழிந்த துணிகளை வீசி மகிழ்ந்தேன்.
எல்லோரும் வீசிய பொருட்களை விட நான் வீசியது நன்றாக எரிவதாகவே தோன்றியது."இது தான் போகி.ம்ம்ம்" என மனதுக்குள் நினைத்துக் கொண்டேன்.
இரவினில் அத்தை சொன்ன மந்திரக் கதைகளால் நன்றாக உறங்கினேன்.காலை 6 மணிக்கே எழுப்பிவிட்டார்கள்.
அரைத்தூக்கத்திலேயே குளித்து முடித்து,மாமவுடன் வயலுக்குப் புறப்பட்டேன்.

குவிக்கப்பட்டிருந்த நெல்மணிகள் கோணிப்பைகளில் நிரம்பிக்கொண்டிருந்தது. இரண்டு பேர், நிரம்பிய மூட்டைகளை,மாட்டுவண்டியில் ஏற்றிக்கொண்டிருந்தனர்."இன்னும் ரெண்டு வண்டி சேரும் தம்பி.நீ போய் பொங்கல் நெல்லை மில்லுல அரைச்சுட்டு வா." என வேலை செய்துகொண்டிருந்த பெரியவர் சொல்ல, மாமாவும் நானும் அதற்காக கிளம்பினோம்.வரும் வழியிலேயே கரும்பும்,மஞ்சளும்.வாங்கிக் கொண்டோம்.வீடு வந்து சேர்ந்தேன்.மணி 9.அம்மா சாப்பிடக் கூப்பிட்டார்.சாப்பிட்டுக்கொண்டே கேட்டேன்,"
ஏனம்மா அத்தை,சித்தி,நீ யாருமே சாப்பிடலை?"."இன்னைக்கு எல்லாரும் விரதம் சாமி.இன்னைக்கு விரதம் இருந்தா குடும்பத்துக்கு நல்லது.அது தான்" என்றார்.12 மணி.களம் முழுக்க கூட்டம்.வெயில் அவ்வளவாக இல்லை. பசுமாட்டு சாணம் கொண்டு,களத்தைப் பூசியிருந்தனர்.
அத்தை பொங்கல் வைக்க,சுற்றியும் பக்கத்து வீட்டு பெண்கள் நின்று கொண்டிருந்தனர்,
உமி நீக்கி எடுத்துவந்த புது அரிசியை உலையில் போட, சிறிது நேரத்துக்கெல்லாம் பொங்கல் பொங்கியது. "பொங்கலோ பொங்கல்" என சுற்றி இருப்பவர்கள் குலவை பாட, நானும் உற்சாகமாய் அவர்களுடன் சேர்ந்து கொண்டேன்.
இறக்கி வைத்தபிறகு அனைவருக்கும் பரிமாறினார்கள்.பொங்கலில் சர்க்கரை போடவில்லை.
அம்மா வாழைப்பழம்,சர்க்கரை கலந்து நன்றாக் பிசைந்து கொடுக்க, ருசித்து ரசித்து தின்றேன்.மனதுக்குள் குதூகலமாக, "பொங்கலோ பொங்கல்" என சொல்லிக் கொண்டேன்.

மதிய உணவு சொந்தங்களுடன்.அருமையான சைவ விருந்து. இரவு,மாரியம்மன் கோவிலில் திரைகட்டி படம் போட்டார்கள்.
படத்தின் பெயர் நினைவில் இல்லை ,ராமராஜன் நடித்த படம் என்பதைத் தவிர.
பொழுது புலர்ந்தது.மாமா எங்களின் இரண்டு மாடுகளையும் குளிப்பாட்டிக்கொண்டிருந்தார்.நான் பல் துலக்கியபடியே  அதை
வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன்."என்னடா மாப்பிள வேடிக்கை?" என்ற படி, தண்ணீரை அள்ளி என் மேலும் வீசினார் சிரித்துக்கொண்டே.நானும் பதிலுக்கு சிரித்துவிட்டு அம்மாவிடம் சென்று ஒளிந்துகொண்டேன்.
விளையாடிவிட்டு மாலை வீடு வந்து பார்த்த எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.இரண்டு வெள்ளை மாடுகளும் கொம்புகளுக்கு வண்ணம் பூசப்பட்டு,மலர்மாலையுடன், நெற்றித்திலகமிட்டு அம்சமாக நின்றுகொண்டிருந்தன.
நான் அவசரமாய்க் குளித்துவிட்டு,கூட்டத்தில் வந்து நின்றேன்.நானும், மாமாவும் ஒரு மலர்க்கொடியைப் பிடித்துக்கொள்ள,கன்றுக்குட்டியை விரட்டி அதனை தாண்ட வைத்தார்கள்.அது வந்தவேகத்தில் நான் கையில் வைத்திருந்த மலர்க்கொடியை விட்டுவிட,அனைவரும் சிரித்தார்கள்.என்னையும் சேர்த்து.
அப்புறமாக இரண்டு மாடுகளுக்கும் பூசையிட்டு,பொங்கல் வைத்தார்கள்.இன்றும் முடிந்தது என இரவு கண்மூடும் நேரத்தில்,மாரியம்மன் கோவிலின் ஒலிப்பெருக்கி கதறியது."ஊர்ப்பொது மக்களுக்கு ஒரு நற்செய்தி.தைப் பொங்கலின் கடைசி நாளான காணும் பொங்கலை முன்னிட்டு,கோவில் கமிட்டி சார்பாக விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படும்.வழுக்கு மரமேறுதல்,பானை உடைக்கும் போட்டி,சிறுவர்களுக்கு முறுக்கு கடிக்கும் போட்டி,கபடி ஆகியவை நடைபெறும்.அனைவரும் வாருங்கள்.உங்கள் ஆதரவைத் தாருங்கள்!" என்ற அறிவிப்பைக் கேட்டவுடன் மகிழ்ச்சி பொங்கியது.

அடுத்தநாள் எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பில்,நான் என்னையும் மறந்து உறங்கிப்போனேன்.

அடுத்தநாள் போட்டிகள் முடிந்தன.பரிசுகளாக சிறுவர்களுக்கு எவர்சில்வர் தட்டம்,பெரியவர்களுக்கு பணமுடிப்பு.நாளை
பள்ளிக்கூடம் போகவேண்டும் என்ற எண்ணம்,இந்த மகிழ்ச்சிகளை கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கத் துவங்கியது. "
***********************
இன்று நடந்தது போல இருக்கும் இந்த நிகழ்ச்சிகள் என் கிராமத்தில் நடந்து 17 வருடங்கள் ஆகிவிட்டது.பொங்கல் கொண்டாட்டம் இப்படித் தான் இருக்கும் என நான் உணர்ந்த முதல் தருணம் அது தான்.
ஆனால் இன்று?
விவசாய நிலம் அழிவு.தைப்பொங்கல் இல்லை.
மாடுகள் இல்லை.மாட்டுப் பொங்கல் தேவையில்லை.
விளையாட்டுப் போட்டிகள் கணிணிக்குள் நடக்கின்றன.எனவே வெளியே வரத் தேவையில்லை.

தமிழர் திருநாள் என்று மார்தட்டிக் கூறும் நாம்,பொங்கல் பண்டிகையின் சிறப்புகளை ஒரு நிமிடம் மனதில் நிறுத்தி,நமக்கு உணவிடும் உழவர்களை நினைத்து நன்றி சொன்னாலே போதும்.

பாரம்பரியம் அறியாத தமிழ் வாரிசுகளுக்கு, இந்த அனுபவச் சுவடு சமர்ப்பணம்.



இனிய பொங்கல் வாழ்த்துகள்!!

Monday, January 2, 2012

அதே நேரம் அதே இடம்

கண்களை மூடிக் கற்பனையில் லயித்திருந்தேன்.
கனவுபோலத் தெரியவில்லை கண்முன் வந்த காட்சிகள்.
காலம் கடந்த காதல் நிலவு தேடிவந்ததைப் போல உணர்ந்தேன்.

அன்றொரு நாள்-இதே நேரம்,இதே இடத்தில்,
வெறுமை துளியும் இல்லை!
பசுமை படர்ந்த புல்தரை மீது அமர்ந்து, என் தோள் சாய்ந்து அவள் பேசியபோது
எதிரில் ஒலித்த இரைச்சல்களும் எறும்பின் சப்தம் போல மௌனமாய்த் தோன்றியதே?!!

ஆனால் இன்று.,
நான் தனியாக இதே இடத்தில்!
எங்கே சென்றாள் என்னவள்??
வந்து விடுவாள் விரைவில்,உள்மனம் சொல்லியது மெதுவாக...

வேலை கிடைத்தது-காலம் கடந்தது-அவள் வரவில்லை!

இரவுத்தூக்கம் எட்டாத தூரத்தில்..
வயிற்றிலிட்ட உணவும் உறுத்திய நேரங்கள்.இன்றும் அவள் என்னுடன் இல்லை.
எங்கே சென்றாள்? 

அவளுக்கு பதிலாய் அவள் தங்கை இன்று வந்தாள்!!

அவள் கையில் அச்சிட்ட அழைப்பிதழ்!
"அக்கா பொண்ணுக்கு பெயர் சூட்டு விழா.கண்டிப்பா வாங்க" என்றாள்.
சொன்னவுடன் இடிந்துபோனேன்.
அவள் தொடர்ந்தாள்."அக்கா உங்களை இன்னும் மறக்கவில்லை..அப்பாவின் பிடிவாதமும், அமெரிக்கா மாப்பிள்ளையும்,உங்களுக்கு வேலை இல்லை என்ற காரணமும்அவளை திருமண வாழ்வுக்குள் தள்ளிவிட்டது.இனி என உங்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக்கொள்ளுங்கள்.வேறு வழி இல்லை"
சென்றுவிட்டாள்!
காலம் கடந்து விட்டது! இன்று தனியாய் நான்! தவிப்போடு அவள்!!
அவள் ஏன் என் வாழ்வில் வந்தாள்?எதற்கு இந்த துன்பம் தந்தாள்?
எனக்குள் கேட்டுக்கொண்டேன் இதுபோல ஆயிரம் கேள்விகளை.

Thursday, December 29, 2011

சார்...ஒரு உதவி ! நன்றி சொல்லனும்!

"உன்னை நான் பார்த்ததும் இல்லை,
என்னை நீ பார்க்கவும் இல்லை,பின்பு
எதற்காகத் துடிக்கிறாய்-நான் வாழவேண்டும் என்று ?"

என்ன கைமாறு செய்வதெனத் தெரியாமல் ஒரு கவிஞன், தன் இதயத்தைப் பார்த்து தொடுத்த வினா இது.

நானும் நினைத்துப் பார்க்கிறேன்.எனக்கு உதவியவர்களை.
சில பேர் கண்முன் வருகிறார்கள்.நன்றிக்கடன் செலுத்த நினைத்த என்னிடம் .இதையெல்லாம் பெரிதாக்காதே! நமக்குள்ள என்ன கைமாறுகள்?" என பூரித்து கண்ணீர் சிந்தியவர்கள் பலர்.நன்றி வேண்டாம்,கடன் மட்டும் போதும் என
வாங்கி மறைந்தார்கள் சிலர்.

ஆனாலும் கொஞ்சம் ஆழமாக எண்ணிப் பார்க்கும்போது, நமக்கு உதவியவர்கள் பட்டியல் நீள்கிறது.பயணச்சீட்டு வாங்கிக் கொடுத்தவர்,அடுத்த தெரு வரை சென்று வண்டியில் இறக்கி விட்டவர்,அடிபட்டுக் கிடந்தபோது அவசரமாய் மருத்துவமனையில் சேர்த்தவர்,அவசரமாய் தொலைபேசி எண் எழுத பேனா கொடுத்தவர்,வங்கியில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து உதவியவர்...இன்னும் எத்தனையோ பேர்.

அறிமுகம் இல்லாத இவர்களுக்கு நான் என்ன செய்யப் போகிறேன்?
மீண்டும் என் வாழ்வில் இவர்களை சந்திப்பேனா? தெரியாது. ஆனால் உதவிகள் பெரிது தான்.

செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமு மாற்ற லரிது (101)

உண்மை தான்.ஒன்று மட்டும் என்னால் முடியும்.
உதவி என்றால், தெரிந்தவர்க்கு, உறவுகளுக்கு மட்டுமே செய்தல் என்ற மாய எண்ணத்தை முதலில் விலக்க வேண்டும்.
இந்த உதவிகளை அறிமுகம் இல்லாத மற்றவருக்கு செய்ய வேண்டும்.

இதனால் உங்களுக்கு சொல்லும் செய்தி யாதெனில்,

"மற்றவர் செய்த உதவிகளை சற்றே நினைத்துப் பார்க்கும் ஒருவன்,
சுயநலம்,பொறாமை,கர்வம் போன்ற சிறு சிறு உணர்வுகளுக்கு அடிமையாக மாட்டான்"

"பேசறவன் ஆயிரம் பேர் எனில் ,செய்பவன் ஆறு பேர்தான்" நாம் எந்தப் பக்கம்? முடிவு உங்கள் கையில்.


Friday, December 23, 2011

"வெடி" வெள்ளி


இன்றைய பதிவினை ஒரு அறிவுரையுடன் ஆரம்பிக்கலாம்.

"காதல் திருமணம் செய்யுங்கள்
ஆனால் பெற்றோறை எதிர்த்து திருமணம் செய்யாதீர்கள்......
செய்தால் அது காதல் திருமணம் அல்ல.
ஏனெனில்,
இன்றுவரை காதலித்த பெற்றோரின் உண்மைக்காதல் புரியாத
உங்களுக்கு உங்கள் காதல்
புரிந்திருக்க வாய்ப்பில்லை!
"

இந்த சின்ன அறிவுரை புரியாமல் பலர் பலரை, கண்ணீரில் மிதக்கவிட்டிருக்கிறார்கள்! இனியும்
வேண்டாமே!

சரி. நான் சொல்ல வந்ததே வேறு.
இந்த வாரம் தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் பரபரப்பான வாரம்.

சோ மற்றும் உளவுப்படையின்
உதவியால், பல உண்மைத்தகவல்கள் வெளிவந்ததால், "சினேகிதியே" என்று முதல்வரைப் புகழ்ந்த உயிர் தோழி,
"ஒய் திஸ்  கொலவெறி டி" எனப் பாடும் அளவுக்கு அதிரடியாக விரட்டப்பட்டார். அடுத்த முதல்வர் கணிப்பு,
அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியது என தினம் தினம் அடுக்கடுக்காக காரணங்கள் குவிகின்றன.இது எங்கு முடியும் என
இந்த வருட முடிவுக்குள் தெரியவரும்.



நன்றாக இருக்கின்ற முல்லைப் பெரியாறு அணையை உடைக்க வேண்டும் எனக் கொக்கரிக்கும் கேரள அரசினை, தமிழ் புலிகள் மிரள வைத்துக்
கொண்டிருக்கின்றன.மத்திய அரசின் தலையீடு இதுவரை இல்லை என்பதால், இது பெரும் வன்முறையாக வெடித்துவிடுமோ என்ற அச்சம் இருக்கிறது.விரைவாக எதாவது ஒரு முடிவுக்கு வர வேண்டும். பார்க்கலாம்.

அதை எல்லாம் விட, முக்கிய செய்தி.



அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்! கொண்டாடி மகிழுங்கள்!! அடுத்தவாரம் சந்திப்போம்!

(நான் சொந்த ஊர் செல்ல இருப்பதால் நேரம் கருதி, இந்தச் செய்தி இத்தோடு முடிகிறது)


Friday, December 16, 2011

சொல்லக்கூடாத ரகசியங்கள்

இன்று காலையில் என் நண்பனிடமிருந்து வந்த குறுஞ்செய்தியுடம் பதிவை தொடங்குகிறேன்.
"என்னைத் தாண்டி செல்லும் போதெல்லாம் திரும்பிப் பார்ப்பாள்!
இப்போது தான் தெரிந்தது,
அவள் திரும்பி மட்டும் தான் பார்த்தாள்-விரும்பிப் பார்க்கவில்லை என்று!"

இந்தக் காதல் வந்தாலே இப்படித்தான். அத விடுங்க.

இன்றைய தினமலர் செய்திப்பக்கத்தில் படித்த ஒரு பயனுள்ள தகவலை
அனைவரிடமும் பகிர்வதில் மகிழ்ச்சி.
யாரிடமும் சொல்லக்கூடாத 8 ரகசியங்கள் :
  1. ஒருவரது வயது
  2. பணம் கொடுக்கல் வாங்கல்
  3. வீட்டு சச்சரவு
  4. மருந்துகளில் சேர்க்கப்பட்ட பொருட்கள்
  5. கணவன்-மனைவி அனுபவங்கள்
  6. செய்த தானம்
  7. கிடைக்கும் புகழ்
  8. சந்தித்த அவமானம்
இதுவரை பின்பற்றவில்லை எனில் இனிமேல் இவற்றை மனதில் நிறுத்திக்கொள்ளுங்கள்.
பேருந்து கட்டண உயர்வு பற்றி மக்களின் அரசல் புரசல் பேச்சுகள்
இப்போது அடங்கி விட்டது.மறுபடியும் எரிபொருள் விலை உயர்கிறது என்ற செய்தி வருத்தமளிக்கிறது.
இருப்பினும், "குடிமகன்"கள் வருத்தப்படும் அளவுக்கு, சரக்கு விலை அதிரடியாக உயர்த்தப்படும் என்ற செய்தி ஆறுதல்
அளிக்கிறது (அந்த விலையேற்றத்திற்கு எதிர்ப்பு போராட்டங்கள் வராது என்பதால்.)
எப்படியோ இந்தியப் பொருளாதாரம் முன்னேறினால் மகிழ்ச்சி தானே!

குழந்தைகளுக்கு சொல்ல கதைகள் இல்லையா? இது உங்களுக்காக..அதுவும் ஆங்கிலத்தில் அவர்களுக்கு சொல்லவும்,
படங்களுடன் காண்பிக்கவும் ஒரு தளம் இருக்கிறது.
இதில் பலவித விளையாட்டுகள்,பாடல்கள் என அனைத்தும் இருக்கிறது.
குழந்தைகளின் ஓய்வு நேரத்தை இது போன்ற பயனுள்ள தளங்களில் செலவிட வைத்தால்,தொலைக்காட்சி மோகம் அவர்களுக்கு குறையும் அல்லவா?
தள_முகவரி: http://www.kidsone.in/tamil/

Wednesday, December 14, 2011

கொங்கு நாடு - பொடிநடை பயணம்!

நான் எனது சொந்த ஊரிலிருந்து, கோவை வந்து ஒரு வருடத்திற்கும் மேல் ஆகிறது.என் நகர வாழ்க்கை பற்றி கிராமத்தில் அதிசயமாகப் பேசுவதைப்பார்க்கும் போது சிரிப்பு தான் வருகிறது எனக்கு.

"இக்கரைக்கு,அக்கரை பச்சை" என்பது பழமொழி மட்டுமல்ல, நிஜ மொழியும் தான்.

நேற்றோடு, என் முதல் பணியில் சேர்ந்து ஒரு வருடம் முடிந்து விட்டது.மிக்க மகிழ்ச்சி.கொண்டாட வேண்டுமே என்று நினைத்ததன் விளைவாக, படம் பார்க்கலாம் என முடிவெடுத்தேன்.

பேருந்தில் இருந்து இறங்கி, திரையரங்கு நோக்கி நடக்கத்துவங்கினேன்.

அது ஒரு பிரபல சாலை.எப்போது அதிக கூட்டம் அலைமோதும் இடம்.
போன வாரம் பார்த்தபோது, சுவர்களில் வெற்றிலை எச்சில் கறைகள்,விளம்பர சுவரொட்டிகள்,சாலையோரக்கடைகளின் எச்சில் இலைகள் சகிதமாக காட்சியளித்தது.இன்று பெரிய மாற்றம்.

கூட்டம் மாறவில்லை.சுவர்கள் சுத்தமாக இருக்கின்றது. எப்படி? விடை தெரிந்ததும் சிரிப்பதா? பாராட்டுவதா? என தெரியவில்லை.சுவர்களில் பல்வேறு மதங்களின் சின்னங்களும்,கடவுள் உருவங்களும் பதிக்கப்பட்டிருந்தது.கடவுள் எதைத் தடுக்கிறாரோ இல்லையோ அந்த சுவற்றைப் பாதுகாக்கிறார். நல்ல முயற்சி.

மாலை 6.30 காட்சி நேரம்.மயக்கம் என்ன திரைப்படம்.

விமர்சனம் நிறைய படித்திருப்பீர்கள்.ஆக, கதை பற்றி அதிக விவாதம் தேவையில்லை என் நினைக்கிறேன்.


ஒருவரியில் சொல்லப் போனால், "முயற்சியுடையார்-இகழ்ச்சியடையார்!"
அடுத்த வரியில் சொன்னால், "ஆவதும் பெண்ணாலே! அழிவதும் பெண்ணாலே"- இங்கு முதல் ரகம்.
மூன்றாம் வரியில் சொல்லச் சொன்னால்,"சித்திரமும் கைப்பழக்கம்" - இது கேமராவிற்கும் பொருந்தும்.

படம் முடிந்த பின்னர் வேகமாக வெளியே வந்தேன். இல்லையெனில் வாகனங்களுக்குள் புழுபோல நெளிந்து கொண்டிருக்க வேண்டும் என்பதால்.

எனது கைப்பேசியில், இரண்டு மூன்று தவறிய அழைப்புகள்(தவறவிட்ட அழைப்புகள்). இப்போது பேசும் மனநிலையில் இல்லை.பேருந்து பிடித்து அறைக்கு விரைவாகச் செல்ல வேண்டும்.இப்போதே மணி 9.20யைத் தொட்டு விட்டது.

20 நிமிடப் பயணம். இன்று இரவு எங்கு சாப்பிடலாம் என நினைக்கையில், கண்களில் பட்டது ஒரு உணவகம்.

இன்று அங்கு சாப்பிடுவது தான் சரியாக இருக்கும்.ஏனென்றால், பணியில் சேர்ந்த முதல்நாள், இரவு உணவு அங்கு தான் சாப்பிட்டேன்.தரம் சற்று குறைந்திருந்தது.ஒரு வருடம் ஆகிவிட்டது. எவ்வளவோ மாற்றம்.

நடக்கத் துவங்கினேன்.அந்த வழி நெடுக்க ஏராளமான உணவகங்கள் இருக்கின்றன.கிட்டத்தட்ட அனைத்து கடைகளிலுமே நான் சில நாள் வாடிக்கையாளனாக இருந்திருக்கின்றேன். இப்போதும் அப்படித்தான்.

எங்கள் ஊரில் இருந்த நாட்களில் ஏதாவது ஒருநாள் தான் "ஓட்டல் உணவு".அது பெரும்பாலான நேரம் பரோட்டாவவாகத் தான் இருக்கும்.
ஆக,அப்போதெல்லாம் ஓட்டல் என்றாலே பரோட்டா தான்  கண்முன் வரும்.ஆனால், இங்கு வந்த பிறகு உணவகங்களின் பல வகை உணவுகளைப் பற்றி அறிந்து கொண்டேன்.
  • ஒரு கரண்டி மாவினை அப்படியே ஊற்றி,ரெண்டு திருப்பு திருப்பிக் கொடுத்தால் வீட்டு தோசை.
  • அதே மாவினை, ஊற்றிய பின்னர் கல்லில் பரவவிட்டு எடுத்தால், சாதா தோசை. நல்லா வெந்து மொறுமொறு என இருந்தால் "ஸ்பெஷல் தோசை"
  • இரண்டு கரண்டி மாவினை பெருசா ஊத்தி எடுத்தா ஊத்தாப்பம்.(சில மிகைத் துணைகளை சேர்த்து, வெங்காய ஊத்தாப்பம், தக்காளி  ஊத்தாப்பம், முட்டை ஊத்தாப்பம், என நிறைய இருக்கு)

இது போல முட்டை உணவுகளிலும் பல ரகம்.
  • முட்டையை கல்லில் உடைத்து விட்டு, ஒருபக்கம் வேக விட்டுக் கொடுத்தால் ,ஆஃபாயில்.
  • அதை இரண்டு புறமும் வேக வைத்தால் ஃபுல்பாயில்.
  • வெங்காயம்,கொத்தமல்லி சேர்த்து கொஞ்சம் வேக விட்டால், ஆம்லெட்.
  • அதே வெங்காயத்துடன்,முட்டையை ஒரு பக்கம் வேக விட்டு, மடித்துக் கொடுத்தால் அது கலக்கி.
இப்போது எனது சிறுவயது சிறப்பு உணவு - பரோட்டா.
  • சில்லி பரோட்டா
  • வீச்சு பரோட்டா
  • முட்டை வீச்சு பரோட்டா
  • முட்டை பரோட்டா
  • கொத்து பரோட்டா
இது போல நிறைய இருக்கின்றன.எல்லாமே நான் சுவை பார்த்து விட்டேன்.

வெளி உணவுகள் உடலுக்கு நல்லதில்லை தான்.வேறு வழியில்லை. சமைக்கும் வசதி அறையில் இல்லை என்பதால் பொறுத்துக்கொள்ள வேண்டி இருக்கிறது.

வீட்டை விட்டு வெளியே வந்து, காசுக்காக உழைத்து வாழ்கின்ற பல இளைஞர்களுக்கு,இது போன்ற சிறு உணவகங்கள் தான் உறவினர்கள் வீடு போல.காசு கொடுக்கிறோம் அது மட்டும் வேறுபாடு.

எனது அறைக்கு வெகு அருகில் பெட்டிக்கடை ஒன்று இருக்கிறது.
பல பன்னாட்டு நிறுவனங்கள் அருகில் இருப்பதால் இரவில், சிகரெட் வியாபாரம் அங்கு ஜோர்.

சற்று தள்ளி ஒரு ஜோடி நின்று கொண்டிருத்தது.பெண்ணிற்கு சம உரிமை கொடுக்கிறான், புகைக்கையில். இருவரின் இழுப்பில், சாம்பலாய் இறக்கிறது அந்த சிகரெட்.

கலாச்சார சீர்கேடு இது தானோ!! அதிர்ச்சி தெளியாமலே அறையை அடைந்தேன்.


எப்போது உறங்கினேன்? தெரியவில்லை..

திரைகடல் ஓடியும், கலாச்சாரத்தைக் கெடுக்காத,உறவுகளைப் பிரிக்காத திரவியம் தேடு!!